Wednesday, May 26, 2021

486. வேண்டாம் போர்!

"அரசே! பல தலைமுறைகளாக நாம் ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். இது வரை எந்த ஒரு நாடும் நம்மைப் போரில் வென்றதில்லை. தங்கள் தந்தையார் காலத்திலிருந்தே எந்த ஒரு நாடும் நம் மீது படை எடுக்கவும் துணிந்ததில்லை. ஆனால் இப்போது புதிதாக முடி சூட்டிக் கொண்டிருக்கும் மகர நாட்டு மன்னன் சுந்தரவர்மன் நம்மிடம் கப்பம் கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறான். நாம் கப்பம் கட்ட ஒப்புக் கொள்ளாவிட்டால் நம் மீது படை எடுப்பானாம்!" என்றார் அமைச்சர் பராந்தகர்.

"உங்கள் ஆலோசனை என்ன?" என்றான் அரசன் வீரசிம்மன், அமைச்சரைப் பார்த்து.

"அரசே! தங்கள் மூதாதையர்கள் எப்போதுமே தங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததில்லை. நாம் போருக்குத் தயாராக வேண்டியதுதான்."

சற்று நேரம் மௌனமாக இருந்த வீரசிம்மன், "அமைச்சரே! நாம் மகர நாட்டுடன் நட்பையே விரும்புவதாகவும், ஆனால் இப்போது நம் நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதால் நாம் கப்பம் கட்ட இயலாத நிலையில் இருப்பதாகவும் பதில் ஓலை அனுப்பி விடுங்கள்" என்றான்.

"மன்னிக்க வேண்டும் மன்னரே! இது எதிரியிடம் நாம் இறைஞ்சுவது போல் அல்லவா இருக்கிறது?" என்றார் அமைச்சர் அதிர்ச்சியுடன்.

"எதிரியும் அவ்வாறு நினைத்து நம்மிடம் கப்பம் கேட்காமல் இருந்தால் அது நமக்கு நன்மைதானே!" என்றான் வீரசிம்மன் சிரித்தபடி.

அரசருக்குப் பெயரில் மட்டும்தான் வீரம் இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்ட அமைச்சர் மௌனமாகத் தலையாட்டினார்.

வீரசிம்மனின் நட்பை ஏற்றுக் கொள்வதாகவும், கப்பம் கட்ட ஓராண்டு அவகாசம் கொடுப்பதாகவும், அடுத்த ஆண்டிலிருந்து கப்பம் கட்ட வேண்டும் என்றும் மகரநாட்டிலிருந்து பதில் ஓலை வந்தது.

எதிரியிடம் பிச்சை கேட்பது போல் கேட்டு இந்தச் சலுகையைப் பெற்றது அமைச்சர் பராந்தகருக்கு ஒரு குறையாக இருந்தது.

ராண்டுக்குப் பிறகு, ,தங்கள் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் கப்பம் செலுத்துவதை இன்னும் ஓராண்டுக்குத் தள்ளி வைக்கும்படி மகர நாட்டுக்கு ஒரு ஓலை அனுப்பினான் வீரசிம்மன்.

"மகர நாட்டு மன்னர் இதற்கு ஒப்புக் கொள்வது ஐயம்தான்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"எனக்கு ஐயம் எதுவும் இல்லை. அவன் நிச்சயம் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான்!" என்றான் வீரசிம்மன் சிரித்தபடி.

"என்ன சொல்கிறீர்கள் மன்னரே!"

"நாம் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்!"

"போரைத் தவிர்ப்பதற்காகத்தானே சென்ற ஆண்டு சமாதானமாகப் போக விரும்பனீர்கள?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"ஆமாம். அப்போது நாம் போர் செய்யும் நிலையில் இல்லையே!"

"அரசே!"

"நீங்களே சொன்னது போல், என் தந்தை காலத்தில் எந்த ஒரு நாடும் நம் மீது போர் தொடுக்கவில்லை. அதனால் நாமும் நம் படைபலத்தை வலிமையாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சென்ற ஆண்டு கூட நம் படை வலுவாக இல்லை. நாம் மகரநாட்டுடன் போர் செய்திருந்தால், போரில் நாம் தோற்று, நம் நாடும் அழிந்திருக்கும். நம் படைபலம், ஆயுதபலம் ஆகியவை பற்றி நான் படைத்தலைவரிடம் கேட்டறிந்த பின்தான், மகர நாட்டுடன் சமாதானமாகப் போவது போல் போக்குக் காட்டி சற்று அவகாசம் வாங்கிக் கொண்டேன். நீங்கள் கூட என்னை ஒரு கோழை என்று நினைத்திருக்கலாம்!"

"அப்படியெல்லாம் இல்லை, அரசே!" என்றார் அமைச்சர் சங்கடத்துடன்.

"உங்கள் முகத்தைப் பார்த்தே நான் அதை அறிந்து கொண்டேன், அமைச்சரே! நீங்கள் அவ்வாறு நினைத்திருந்தால்,அது இயல்பான ஒன்றுதான். வீரத்தில் நான் என் முன்னோர்களுக்குச் சளைத்தவன் இல்லை என்பதைச் சத்தமில்லாமல் நிரூபித்து உங்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வருடத்துக்குள் நம் படைபலத்தையும், ஆயுதபலத்தையும் அதிகரிக்க வேண்டுமென்று நம் படைத்தளைபதிக்கு ரகசியமாக ஆணை பிறப்பித்தேன். உங்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்பதால்தான் உங்களிடம் கூட இதைச் சொல்லவில்லை, இப்போது நம் படை வலுவாக இருக்கிறது. அத்துடன் உள்நாட்டுக் குழப்பங்களால் மகரநாடும் பலமிழந்து நிற்கிறது. இப்போது காலம் நமக்குச் சாதகமாக இருக்கிறது. இப்போது போர் நடந்தால் நமக்கு வெற்றி நிச்சயம்" என்றான் வீரசிம்மன் உற்சாகத்துடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பதை நான் உணரத் தவறி விட்டேன்" என்றார் அமைச்சர்.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

பொருள்:
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகக் காலைப் பின்னே இழுத்துக் கொள்வது போன்றது.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...