ரகுபதியின் தந்தை ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு அலுவலக உதவியாளராக இருந்தார். குறைந்த சம்பளம், ஆனால் ஓய்வில்லாத வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் கூடப் பல நாட்கள் அவர் அலுவலகத்துக்குப் போக வேண்டி இருக்கும்.
ஒருமுறை அவர் வேலைக்குப் போகும்போது, டிஃபன் பாக்ஸை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டார். அதைக் கொண்டு கொடுக்க, ரகுபதி அவர் அலுவலத்துக்குப் போனபோது, அவர் முதலாளி அவரைக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்ததை அவன் காண நேர்ந்தது.
தான் இன்னொருவரிடம் வேலை செய்யக் கூடாது, சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அப்போது ரகுபதிக்குத் தோன்றியது.
தன்னால் அது முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை ஒரு இலக்காகக் கொண்டு உழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன்.
தான் சொந்தத் தொழில் செய்யும்போது, தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து, அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவன் நினைத்துக் கொண்டான்.
தான் பயந்தபடியே, தன் லட்சியத்தை நிறைவேற்றுவது சுலபம் இல்லை என்பது படிப்பை முடித்ததும் ரகுபதிக்குப் புரிந்தது.
முதலில் ஏதாவது வேலைக்குப் போய்க் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு, அப்புறம் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம் என்று அவன் முடிவு செய்தான்.
பி ஏ படித்திருந்த அவனுக்கு சுமாரான ஒரு வேலைதான் கிடைத்தது. அவன் வேலைக்குச் சென்ற சில மாதங்களில், அவன் தந்தை மறைந்து விட்டார். அவருடைய சேமிப்பு, பி எஃப் பணம் என்று ஒரு சிறு தொகை இருந்தது.
தான் தொழில் துவங்க அது ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அந்தப் பணத்தை வங்கியில் நிரந்தர வைப்பில் போட்டு வைத்தான் ரகுபதி.
குடும்பத்தில் அவனும், அவன் தாயும் மட்டும்தான் என்பதால், செலவு அதிகமில்லை. சிக்கனமாக இருந்து, முடிந்த அளவுக்குச் சேமித்து வந்தான்.
ரகுபதி தன் லட்சியம் பற்றித் தன் தாயிடம் கூறி இருந்தான்.
அவளும், "உன் ஆசை நிச்சயமா ஒரு நாள் நிறைவேறும்" என்று சொல்லி, அவனை ஊக்குவித்தாள்.
ரகுபதிக்குத் திருமணம் செய்ய அவன் தாய் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபர் அவனுக்குப் பெண் கொடுக்க முன் வந்தார்.
"இந்தப் பொண்ணைப் பண்ணிக்கடா! உன் மாமனார் தொழிலை நீ பாத்துக்கலாம். உன் ஆசையும் நிறைவேறினதா இருக்கும்" என்றாள் அவன் தாய்.
ஆனால் ரகுபதி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
"அம்மா! அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவ அப்பா தொழிலை நான் பாத்துக்கிட்டா, அந்தத் தொழிற்சாலைக்கு ஒரு மானேஜர் மாதிரிதான் நான் இருப்பேன். நானே சொந்தமா ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்தணுங்கறதுதான் என் லட்சியம். இன்னொத்தரை பார்ட்னரா சேத்துக்கிட்டு வேணும்னா ஆரம்பிக்கலாம். ஆனா இன்னொருத்தர் தொழிலைப் பாத்துக்கறதில என்ன இருக்கு?" என்றான் ரகு.
பிறகு, ஜானகி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். ஜானகி ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
"நீ கொஞ்ச நாள் வேலைக்குப் போனா போதும். நான் சொந்தத் தொழில் ஆரம்பிச்சப்பறம் நீ வேலைக்குப் போக வேண்டி இருக்காது" என்றான் அவன் ஜானகியிடம்.
ஒருமுறை ரகுவின் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த குமார், அவனிடம் ஒரு தொழிலுக்கான யோசனையைக் கூறினான்.
அது குறைந்த முதலீட்டில் செய்யக் கூடியதாக இருந்ததாலும், லாபகரமாகத் தோன்றியதாலும், ரகுபதி தன் வேலையை விட்டு விட்டுத் தன் சேமிப்பின் பெரும் பகுதியை முதலீடு செய்து அந்தத் தொழிலைத் தொடங்கினான்.
குமார் தன்னிடம் முதலீடு செய்யப் பணம் இல்லை என்று கூறியதால், அவன் ஒர்க்கிங் பார்ட்னராக இருப்பது என்றும், அவனுக்கு லாபத்தில் இருபது சதவீதம் கொடுப்பது என்றும் முடிவானது.
தொழில் துவங்கியதும்,"இன்னும் ஆறு மாசம்தான். அதுக்கப்பறம், நீ வேலையை விட்டுடலாம்" என்றான் ரகுபதி ஜானகியிடம்.
ஆனால் தொழில் தொடங்கி ஒரு வருடம் ஆகியும், தொழில் லாபகரமானதாக இல்லை. கணக்குப் பார்த்தால் இழப்புதான் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது.
"எந்த ஒரு பிசினஸ்லேயும் லாபம் வர ரெண்டு மூணு வருஷம் ஆகும். இன்னும் ஒரு வருஷத்தில நாம லாபம் பார்க்கலாம்" என்றான் குமார்.
தொழிலுக்கான யோசனையைக் குமார் தன்னிடம் தெரிவித்தபோது "மூணு மாசத்தில லாபம் பார்க்கலாம்" என்று கூறியது ரகுபதிக்கு நினைவு வந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் குமார் தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டு ஒரு வாரத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றான். ஆனால், ஒரு மாதம் ஆகியும் அவன் திரும்பி வரவில்லை.
ரகுபதிக்குச் சந்தேகம் வந்து, கணக்கு வழக்குகளை ஒரு ஆடிட்டரிடம் சொல்லிச் சரி பார்க்கச் சொன்னபோது, தொழிலில் கணிசமான அளவு லாபம் வந்திருந்ததையும், குமார் பெருமளவில் மோசடிகள் செய்து பெருமளவில் பணத்தைக் கையாடி இருப்பதும் தெரிந்தது.
அக்கவுன்ட்ஸ் எழுத ஒரு ஆள் கூட வைத்துக் கொள்ளாமல், கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைக் குமாரிடம் விட்டு விட்ட தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான் ரகுபதி.
"இப்ப என்ன செய்யப் போறீங்க?" என்றாள் ஜானகி.
"என்ன செய்யறது? சொந்தமாத் தொழில் செய்யணுங்கற ஒரு வெறியோட இத்தனை வருஷமா காத்துக்கிட்டிருந்தேன். டெஸ்க் டாப் பப்ளிஷிங், காளான் வளக்கறது, மல்டி லெவல் மார்க்கெடிங், பால் பாயின்ட் பேனா ரீஃபில் தயார் செய்யறதுன்னு எத்தனையோ தொழில்களைப் பத்திப் பல பேர் விளம்பரம் செஞ்சிருக்காங்க.
"அது மாதிரியான தொழில்கள் எல்லாத்தையும் பத்தித் தீர விசாரிச்சு, நல்லா ஆராய்ஞ்சு பாத்து, அது எதுவுமே எனக்கு சரியா வராதுன்னு முடிவு செஞ்சு, சரியான நேரம் வரும், அப்ப ஒரு நல்ல வாய்ப்பும் வரும்னு காத்துக்கிட்டிருந்தேன்.
"குமார் இந்த பிசினஸ் பத்தி சொன்னப்பறம், நமக்கான நேரம் வந்துடுச்சுன்னு நினைச்சு, கையில இருந்த சேமிப்பை முதலீடு செஞ்சு, நம்பிக்கையோட இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன். அவன் இப்படி மோசம் பண்ணிட்டு ஓடிட்டான். இப்ப என்ன செய்யறதுன்னு தெரியல. பிசினஸைத் தொடர்ந்து நடத்தவும் முடியாது..."
"ஏன் முடியாது?" என்றாள் ஜானகி இடைமறித்து.
"எப்படி நடத்த முடியும்? சரக்கையெல்லாம் கடன்லதான் வாங்கறோம். சப்ளையர்களுக்கெல்லாம் பணம் கொடுத்துக்கிட்டிருக்கறதாதான் அவன் எங்கிட்ட சொன்னான். ஆனா இப்ப பாத்தா, நிறைய பாக்கி இருக்கு. அவங்களுக்குப் பணம் கொடுத்தாத்தான் சரக்கு கொடுப்பாங்க. அப்பதான் தொடர்ந்து தொழிலை நடத்த முடியும். ஆனா, கையில சுத்தமா பணமே இல்லை."
"அவ்வளவுதானே? என் நகைகளைக் கொடுக்கறேன். அதை வச்சோ வித்தோ பணம் புரட்டி, கொடுக்க வேண்டியவங்களுக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்துட்டு, சரக்கு சப்ளை பண்ணச் சொல்லுங்க. கொஞ்சம் பணம் கொடுத்தா, அவங்களுக்கு நம்பிக்கை வந்து சரக்கு கொடுப்பாங்க இல்ல?"
ரகுபதி நம்பிக்கையுடன் தலையை ஆட்டினான்.
"குமாரை பார்ட்னர்ஷிப்லேந்து சட்டப்படி நீக்கிட்டு, சம்பந்தப்பட்டவங்க எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க. ஒரு வருஷத்தில நல்ல லாபம் வந்திருக்கறதா சொல்றீங்க இல்ல? இப்ப அடுத்த வருஷத்திலேயும் லாபம் வருமே! அப்புறம் என்ன? ரெண்டு வருஷத்துக்குள்ள எல்லாத்தையும் சரி செஞ்சுடமுடியாதா?" என்றாள் ஜானகி.
அவளை வியப்புடன் பார்த்த ரகுபதி, "இத்தனை வருஷமா சரியான காலம் வரணும்னு பாத்துக்கிட்டிருந்தேன். ஆனா காலம் வந்தப்ப, அது வந்ததையே கவனிக்கல!" என்றான்.
"எப்ப வந்தது அந்தக் காலம்?"
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே, அப்பதான்!" என்றான் ரகுபதி, புது நம்பிக்கை பெற்றவனாக.
No comments:
Post a Comment