செந்தில்குமாரின் வளர்ச்சி அவனை அறிந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது என்றால், அவனைப் போன்ற சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அதிபர்களிடையே பொறாமையையும், அதனால் விளைந்த ஒருவகை விரோத மனப்பான்மையையும் வளர்த்து விட்டிருந்தது.
தொழிலதிபர் ராஜசேகர் தன் நண்பர் சோமசுந்தரத்துடன் கிளப்பில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்.
"இந்தத் தொழிற்பேட்டை ஆரம்பிச்சதிலேந்தே நாம இங்கே நம்ம தொழில்களை நடத்திக்கிட்டு வரோம்.
"மின் தட்டுப்பாடு, மூலப்பொருள் கிடைக்காதது, தொழிலாளர் பிரச்னை, பெரிய நிறுவனங்களோட போட்டி, கடன் கொடுத்த வங்கிகள் கொடுக்கற தொல்லை, முன்னே விற்பனை வரி, இப்ப ஜி எஸ் டி ன்னு கழுத்தை நெறிக்கிற தொல்லைகள் இத்தனையோடயும் போராடிக்கிட்டு நாம எப்படியோ நம்ம தொழில்களை நடத்திக்கிட்டு வரோம்.
"இவன் திடீர்னு வந்து நஷ்டத்தில நடக்கற ஒரு தொழிற்சாலையைக் குறைஞ்ச விலைக்கு வாங்கி,ரெண்டு வருஷத்தில அதை லாபம் ஈட்டற நிறுவனமா மாத்திட்டானே, அது எப்படிய்யா?"
"அதான் எனக்கும் புரியல. அம்பானி மாதிரி இல்ல வளந்துக்கிட்டிருக்கான்! விட்டா நம்மளை எல்லாம் கபளீகரம் பண்ணிடுவான் போல இருக்கே!" என்றார் சோமசுந்தரம்.
"அவனை நெருக்கமா கவனிக்கச் சொல்லி நம்ம அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கேன். அவன் புதுசா ஏதோ தொழில் ஆரம்பிக்கப் போறான் போல இருக்கு.
"அரசாங்கத்தில புதுசாத் துவங்கி இருக்கற தொழில் பேட்டையில நிலம் வாங்க அப்ளை பண்ணி இருக்கானாம். அங்கே நிலம் வாங்க நிறையப் போட்டி இருக்கு.
" சில நண்பர்களோட அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி அங்கே அரசாங்கம் அவனுக்கு நிலம் அலாட் பண்ணாம இருக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்" என்றார் ராஜசேகர், சற்று ரகசியமான குரலில்.
"அப்படி ஏதாவது செஞ்சுதான் அவனை அடக்கி வைக்கணும்!" என்றார் சோமசுந்தரம், மகிழ்ச்சியுடன்.
சில நாட்களுக்குப் பிறகு சோமசுந்தரத்தைத் தொலைபேசியில் அழைத்த ராஜசேகர், "செந்தில்குமார் விஷயத்தில என் முயற்சி வெற்றி அடைஞ்சுடுச்சு. புதுத் தொழில் பேட்டையில நிலம் அலாட் ஆனவங்க பட்டியலை அரசாங்கம் வெளியிட்டிருக்கு. அவனுக்கு நிலம் அலாட். ஆகல!" என்றார் உற்சாகத்துடன்.
"நீங்க வேற! அவன் புதுத் தொழில் பேட்டையில நிலம் வாங்கப் போற மாதிரி நமக்குப் போக்குக் காட்டிட்டு, தன்னோட தொழிற்சாலைக்கு அடுத்தாப்பல இருக்கற நியூ எரா ப்ராடக்ட்ஸை விலைக்கு வாங்கிட்டான். உங்களுக்கு விஷயம் தெரியாதா?" என்றார் சோமசுந்தரம்.
"அது எப்படி? அது சுந்தரமூர்த்தியோட நிறுவனம். அது நஷ்டத்திலதான் போய்க்கிட்டிருக்கு. ஆனா செந்தில்கிட்ட விக்காதீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கமே! சுந்தரமூர்த்தி எப்படி வித்தாரு?" என்றார் ராஜசேகர், அதிர்ச்சியுடன்.
"நீங்க சொன்னா? அது பிரைவேட் லிமிடட் கம்பெனிங்கறதால அவன் புத்திசாலித்தனமா அதில 60% பங்கை மட்டும் வாங்கி இருக்கான். 'நீங்க வீட்டிலேயே ஓய்வா இருங்க, தொழிற்சாலையை நான் நடத்தறேன். நிறுவனத்தை லாபமா இயங்க வச்சப்பறம், உங்க பங்கா லாபத்தில 40% கிடைக்கும்'னு சொல்லி சுந்தரமூர்த்தியைச் சம்மதிக்க வச்சுட்டான். புதுத் தொழிற்பேட்டையில நிலம் கேட்டு அப்ளை பண்ணினது நம்ம கவனத்தைத் திசை திருப்பத்தான்!"
ராஜசேகரிடமிருந்து பதில் வரவில்லை. ஃபோன் ரிசீவரில் அவர் பெருமூச்சு மட்டும் உரக்கக் கேட்டது.
No comments:
Post a Comment