Saturday, June 1, 2024

1070. அறைக்கு வெளியே கேட்ட உரையாடல்

எம் எஸ் ஏஜன்சீஸின் பங்குதாரர்களான மூர்த்தியும், சிவாவும் தங்கள் வாடிக்கையாளரான செல்வி இண்டஸ்ட்ரீஸீன் உரிமையாளர் சண்முகசுந்தரத்தைப் பார்க்க, அவருடைய அறைக்கு வெளியே காத்திருந்தனர். 

அந்த அறைக்கு வெளியே, பாதி உயரத்துக்கு மட்டுமே தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததால், உள்ளே இருப்பவர்கள் பேசிக் கொண்டது, வெளியில் அமர்ந்திருந்த இருவருக்கும் கேட்டது.

"சார்! இந்த ஒரு தடவை மட்டும் உதவி செய்யுங்க சார்!"

"அடுத்த மாசச் சம்பளத்தை இப்பவே கேக்கற. இன்னிக்கு தேதி 10தான் ஆகுது. அடுத்த மாசச் சம்பளத்துக்கு இன்னும் 20 நாளைக்கு மேல இருக்கு."

"போன மாசம் சில எதிர்பாராத செலவுகள் வந்துடுச்சு சார். அதுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கினேன். இந்த மாசச் சம்பளத்தில பாதிக்கு மேல அந்தக் கடனை அடைக்கவே போயிடுச்சு. இந்த மாசம் இன்னும் 20 நாளை ஓட்டியாகணும். வீட்டில சாப்பாட்டுக்கு அரிசி கூட இல்ல. பொண்டாட்டி குழந்தைகளைக் காப்பாத்தியாகணும் சார். இதுவரையில, கம்பெனியில நான் எந்தக் கடனும் கேட்டதில்லை. இந்த ஒரு தடவைதான் கேக்கறேன். நான் கேட்டதில பாதி கொடுத்தீங்கன்னா கூடப் போதும், சம்பளம் வர வரையில சமாளிச்சுடுவேன்! இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன் சார்!"

"அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்ல? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே! வெளியில என்னைப் பாக்க சில பேர் காத்துக்கிட்டிருக்காங்க. அவங்க டயத்தையும் சேர்த்து வீணாக்கற நீ! முதல்ல இடத்தைக் காலி பண்ணு!"

கோபமாக ஒலித்த இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, உரிமையாளரின் அறையிலிருந்து, உதவி கேட்ட அந்த ஊழியர் வெளியே வந்தார். அவர் நடக்க முடியாமல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, எந்த நிமிடமும் மயங்கிக் கீழே விழுந்து விடுவாரோ என்ற அச்சம் மூர்த்திக்கும், சிவாவுக்கும் ஏற்பட்டது.

ண்முகசுந்தரத்தைப் பார்த்துப் பேசி விட்டு, மூர்த்தியும் சிவாவும் காரில் தங்கள் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

"சண்முகசுந்தரத்துக்கிட்ட உதவி கேட்டு, அவர் இல்லேன்னு சொன்னப்பறம் வெளியில வந்த அந்த ஊழியரைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அவரைப் பார்த்தா, கீழே விழுந்து உயிரை விட்டுடுவார் போல இருந்தது. பாவம், அந்த அளவுக்கு சோர்ந்து போயிருந்தார். பாவம், முதலாளி உதவி செய்வார்னு ரொம்ப நம்பிக்கிட்டிருந்தார் போலருக்கு!" என்றான் சிவா.

"ஆமாம். எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனா, சண்முகசுந்தரத்துக்கிட்ட எந்த ஒரு சோ்வும் இல்லேயே! அவரு நம்மோட நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு?" என்றான் மூர்த்தி.

"சண்முகசுந்தரம் ஏன் சோர்வா இருக்கணும்? எனக்குப் புரியல!" என்றான் சிவா.

"எனக்கும்தான்- தான் கேட்ட உதவி கிடைக்கலேன்னதும், உதவி கேட்டவருக்கு உயிரே போயிடறது போல இருக்கற மாதிரி, உதவி செய்ய மாட்டேன்னு சொல்றவருக்கும் ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு!"

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1070:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

பொருள்: 
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனேயே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...