Monday, May 27, 2024

1068. கல்யாண மண்டபம்

"இல்லையென்போர் இருக்கையிலே,
இருப்பவர்கள் இல்லையென்பார்!"

தொலைக்காட்சியில் ஒலித்த இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும், "எவ்வளவு எளிமையா, அழகா எழுதிட்டார் வாலி!" என்றான் குபேந்திரன், பெருமூச்சுடன்.

"ஆமாண்டா! நான் உங்கிட்ட எப்ப கடன் கேட்டாலும், நீ இல்லேன்னுதானே சொல்ற!" என்றான் அவன் நண்பன் தன்ராஜ்.

"விளையாடேதாடா! நான் ரொம்ப மன வருத்தத்தில இருக்கேன்!"

"சாரி! ஏதாவது பிரச்னையா? என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணும் இல்ல. இன்னிக்கு, எங்க ஆஃபீஸ்ல ஒரு சம்பவம் நடந்தது. அதை நினைச்சாத்தான், மனசு ரொம்ப வருத்தமா இருக்கு!"

"என்ன நடந்தது?"

"என்னோட முதலாளி ஒரு கஞ்சப் பிரபு, ஈவு இரக்கமே இல்லாதவர்னு சொல்லி இருக்கேன் இல்ல?"

"ஆமாம்."

"எங்க ஆஃபீஸ்ல சண்முகம்னு ஒத்தர் இருக்காரு. அவரோட பெண்ணுக்குக் கல்யாணம். கல்யாணச் செலவுக்காக, அவர் பி எஃப் லோன் அப்ளை பண்ணி இருக்காரு. அது கொஞ்ச நாள்ள வந்துடும். அதுக்குள்ள, அவர் புக் பண்ணி இருக்கிற கல்யாண மண்டபத்தில இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அம்பதாயிரம் ரூபா கட்டச் சொல்றாங்களாம். கட்டலேன்னா, புக்கிங்கை கேன்சல் பண்ணி, வேற யாருக்காவது கொடுத்துடுவேன்னு மிரட்டறாங்களாம். அதனால, அம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்டு அவர் எங்க முதலாளிகிட்ட கெஞ்சினாரு. பி எஃப் லோன் வந்ததும் திருப்பிக் கொடுத்துடறேன், வட்டி கூடக் கொடுத்துடறேன்னு கெஞ்சினாரு. ஆனா, எங்க முதலாளி பிடிவாதமா முடியாதுன்னுட்டாரு."

"உன் முதலாளிகிட்ட பணம் இல்லையோ என்னவோ?"

"நீ வேற. எங்க கம்பெனியில தினம் லட்சக்கணக்கா ரொக்கம் புழங்கும். அம்பதாயிரம் ரூபாயெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. அதுவும் பத்து நாளைக்குள்ள திருப்பிக் கொடுத்துடப் போறாரு! ஆனா, தன்கிட்ட பணமே இல்லைன்னு சாதிச்சுட்டாரு எங்க முதலாளி. பணம் கட்டலேன்னா, மண்டபம் புக் பண்ணினதை அவங்க கேன்சல் பண்ணி, வேற யாருக்காவது கொடுத்துட்டா என்ன செய்யறதுன்னு சண்முகம் பதறறதைப் பாத்து எங்க எல்லாருக்கும் பாவமா இருந்தது. ஆனா, எங்க முதலாளிக்கு அப்படி இல்லையே!" என்றான் குபேந்திரன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

பொருள்: 
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம், உள்ளதை ஒளித்து வைக்கும் தன்மையாகிய வன்னிலம் (பாறை) தாக்கினால் உடைந்து விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...