Sunday, May 26, 2024

1067. சோமநாதனின் முடிவு

"இத்தனை வருஷமா, யார்கிட்டேயும் உதவி கேட்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். இப்ப அந்த வைராக்கியத்தைக் கைவிட வேண்டி இருக்கும் போல இருக்கு!" என்றான் குமார், சோர்வுடன். 

"ஆமாம். சஞ்சய்க்கு ஒரு நல்ல காலேஜில இடம் கிடைச்சிருக்கறப்ப, எப்படியாவது கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி, அவனை அந்த காலேஜில சேர்க்க வேண்டாமா?" என்றார் குமாரின் தந்தை சோமநாதன். தொடர்ந்து, "யார்கிட்ட உதவி கேக்கறதா இருக்க?" என்றார்.

"சாமிநாதன்கிட்டதான். நமக்கு அவரை விட்டா யாரு இருக்காங்க?"

"சாமிநாதன் வசதியானவன்தான். ஆனா, எப்பவுமே இல்லைப் பாட்டுப் பாடறவன். நூறு ரூபா கேட்டாக் கூட, 'ஐயையோ! அரை மணி நேரம் முன்னால வந்திருக்கக் கூடாது? இப்பதான் ஒத்தர் டொனேஷன் கேட்டாருன்னு, கையில இருந்த நூறு ரூபாயைக் கொடுத்துட்டேன். இப்ப, எங்கிட்ட எதுவுமே இல்லையே'ம்பான். அவன்கிட்ட போயா கேக்கப் போற?"

"உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?"

"நான் அனுபவப்பட்டிருக்கேனே! தயவு செஞ்சு. அவன்கிட்ட மட்டும் போய் உதவி கேக்காதே!"

"எனக்கு அவரை விட்டா வேற யாரையும் தெரியாதே!"

"நான் சொன்னா கேக்க மாட்ட. சரி, நீ எப்ப அவனைப் போய்ப் பாக்கப் போற?" என்றார் சோமநாதன்.

"நாளைக்கு சனிக்கிழமை. எனக்கு லீவு. அவரும் வீட்டில இருப்பாரு. அதனால, நாளைக் காலையில போகலாம்னு இருக்கேன். எதுக்குக் கேக்கறீங்க?" என்றான் குமார்.

"சும்மாதான்!"

ன்று இரவு அலுவலகத்திலிருந்து குமார் வீட்டுக்கு வந்தபோது, சோமநாதன் வீட்டில் இல்லை.

"அப்பா எங்கே போயிருக்காரு?" என்றான் குமார், தன் மனைவி கோகிலாவிடம்.

"எங்கேன்னு தெரியல. வெளியில போயிட்டு வரேன்னு சாயந்திரம் கிளம்பிப் போனாரு" என்றாள் கோகிலா.

சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சோமநாதன், குமாரிடம் "இந்தா!" என்று ஒரு செக்கை நீட்டினார்.

"என்னப்பா இது?"

"பாரு!" 

"என் பேருக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு செக்! யார் கொடுத்தாங்க?" என்றான் குமார், வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.

"உன் சித்தப்பாதான்!"

"எப்படிப்பா? நீங்கதான் அவரோட பேசறதே இல்லையே!"

"ஒரு மனஸ்தாபத்தினால பேசாம இருந்தேன். நீ சாமிநாதன்கிட்ட போய் உதவி கேக்கப் போறன்னு சொன்னதும், நீ அவன்கிட்ட உதவி கேட்டு ஏமாந்து வரதை விட, நான் கௌரவம் பாக்காம, என் தம்பிகிட்ட போய்க் கேட்கலாம்னு முடிவு பண்ணினேன். அண்ணன் இறங்கி வந்து, நம்மகிட்ட பேசி, உதவி கேட்டுட்டாரேங்கற சந்தோஷத்தில, என் தம்பி உடனே செக் எழுதிக் கொடுத்துட்டான். எப்ப முடியுமோ அப்ப திருப்பிக் கொடுத்தா போதும்னு சொல்லிட்டான்!" என்றார் சோமநாதன்.

"ஏம்ப்பா, நான் சாமிநாதன்கிட்ட கேக்கற வரையிலும் பொறுத்திருக்கலாமே! அதுக்குள்ள, ஏன் நீங்க உங்க கௌரவத்தை விட்டுக் கொடுத்து, சித்தப்பாகிட்ட உதவி கேட்டீங்க?"

"வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்றவன்கிட்ட போய் உதவி கேட்டுட்டு, வெறும் கையோட திரும்பி வரதை விட, என் சொந்தத் தம்பிகிட்ட என் கௌரவத்தை விட்டுக் கொடுத்து உதவி கேட்டது ஒண்ணும் தப்பு இல்ல!" என்றார் சோமநாதன், உறுதியாக.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1067:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

பொருள்: 
இரந்து கேட்பதானால், உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...