Sunday, May 26, 2024

1066. மாட்டுக்காக...

"நாம பட்டினி கிடந்துடலாம். பசுமாடு பட்டினி கிடக்கறதைப் பார்த்தாத்தான் பரிதாபமா இருக்கு!" என்றாள் செண்பகம்.

"அப்பப்ப ஏதாவது தீனி கொடுத்துக்கிட்டுத்தானே இருக்கோம்! ஏன், மாடு கத்திச்சா என்ன?" என்று கேட்டான் பழனி.

"அது ஏன் கத்துது? அதுக்கு நம்ம நிலைமை நல்லாத் தெரியும் போலருக்கு. அது பொறுமையா, அமைதியாத்தான் இருக்கு. எனக்குத்தான் அது மூஞ்சியைப் பார்த்தா, அது பசியால வாடற மாதிரி இருக்கு."

"வீட்டில பருத்திக் கொட்டை இருக்கு இல்ல?"

"இருக்கு. சாயந்திரம் கொடுக்கறதுக்காக வச்சிருக்கேன். ஆமாம், ஊர்ல நம்மை மாதிரி கஷ்டப்படறவங்க நிறைய பேர் இருக்காங்க இல்ல?" என்றாள் செண்பகம்.

"ஆமாம், மழை பெய்யல, விளைச்சல் இல்லேன்னா, எல்லாருக்கும்தானே கஷ்டம்?"

"ஆனா, அவங்க யாரும் நம்மை மாதிரி பட்டினி கிடக்கல. கடனை உடனை வாங்கி, ஓரளவுக்காவது நல்லா சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. நீங்க மட்டும்தான் யார்கிட்டேயும் எந்த உதவியும் கேக்ககக் கூடாதுன்னு பிடிவாதமா இருக்கீங்க!"

"என்ன செய்யறது? நான் அப்படியே இருந்து பழகிட்டேன்!"

"மத்தவங்ககிட்ட இனாமா எதையும் கேக்கறதுதான் தப்பு. கடன் கேக்கலாம் இல்ல? உங்களை நம்பிக் கடன் கொடுக்க, இந்த ஊர்ல எத்தனையோ பேர் இருக்காங்களே!"

"இருக்காங்க. கடன் வாங்கலாம். நாளைக்கு நமக்கு ஒரு இடத்திலேந்து பணம் வரப் போகுதுன்னு நிச்சயமாத் தெரிஞ்சா, அதை நம்பிக் கடன் வாங்கலாம். அப்படி ஒரு நிச்சயமில்லாத நிலைமையில, கடன் கேட்டாலும் அது பிச்சை கேக்கற மாதிரிதான்!" என்றான் பழனி.

"என்னவோ, நீங்களும், உங்க கொள்கையும். நம்ம மாட்டுக்கு அரை வயத்துக்குத் தீனி போடறமேங்கற ஆத்தாமை எனக்கு ரொம்ப இருக்கு!" என்றாள் செண்பகம்.

"இதோ வரேன்!" என்று வெளியே கிளம்பினான் பழனி.

ரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பிய பழனியின் தலையில் ஒரு புல்கட்டு இருந்தது.

"எங்கே போயிட்டு வரீங்க, இந்த வெயில்ல?" என்றாள் செண்பகம்.

"எல்லா இடத்திலேயும் அலைஞ்சு திரிஞ்சு, அங்கங்கே இருக்கற புல்லை வெட்டி சேகரிச்சுக் கொண்டு வந்திருக்கேன். இதை மாட்டுக்குக் கொஞ்சம் கொஞ்சமா கொடு!" என்றான் பழனி.

'யார்கிட்டேயாவது கடன் வாங்கி ,மாட்டுக்குப் பருத்திக் கொட்டை வாங்கிட்டு வரப் போறீங்களோன்னு நினைச்சேன். நீங்களாவது மாறறதாவது!' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் செண்பகம்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1066:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

பொருள்: 
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும், அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...