Sunday, May 26, 2024

1065. புழுங்கலரிசிக் கஞ்சி!

"இன்னிக்கு ஒரு இன்ஸ்டிட்யூட்டில வரச் சொல்லி இருக்காங்க, போய்ப் பாத்துட்டு வரேன்!" என்று கிளம்பினான் சபரி.

'நீங்களும்தான் இது மாதிரி அடிக்கடி போய்ப் பார்த்துட்டு வரீங்க. ஆனா, வேலை கிடைக்க மாட்டேங்குதே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மைதிலி, "ம்" என்றாள், பலவீனமான குரலில்.

மாலையில் சபரி வீட்டுக்குள் நுழைந்தபோது, அவன் முகம் உற்சாகமாக இருந்தது.

"என்ன, வேலை கிடைச்சுடுச்சா?" என்றாள் மைதிலி ஆவலுடன்.

"கிடைச்ச மாதிரிதான். இன்டர்வியூ முடிஞ்சப்புறம், ரெண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னாங்க. நான் தயார் பண்ணிக்காட்டாலும், எடுத்தேன். வகுப்பு முடிஞ்சதும் மாணவர்கள்கிட்ட கருத்துக் கேட்டிருக்காங்க. அவங்க நல்லபடியா சொன்னதால, 'அடுத்து வாரம் புது பேட்ச் ஆரம்பிக்கப் போறோம். அப்ப உங்களைக் கூப்பிடறோம்'னு சொன்னாங்க. இன்னிக்கு வகுப்பு எடுத்ததுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தாங்க!"

"பரவாயில்லையே! இந்த வேலை நிரந்தரமா இருக்கும் இல்ல?"

"இருக்கும்னுதான் நினைக்கிறேன். நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்த கம்பெனியை திடீர்னு மூடினப்புறம், என்னென்னவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டு, வேற வேலை கிடைக்காததல, இது மாதிரி இன்ஸ்டிட்யூட்கள்ள, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா, நிரந்தர வருமானம் இல்ல. இப்பதான் ஒரு நல்ல இன்ஸ்டிட்யூட் அமைஞ்சிருக்கு."

"சரி. பணம் கொடுத்தாங்களே, அதை என்ன செய்யப் போறீங்க?" என்றாள் மைதிலி.

 "வீட்டுக்கு சாமான் வாங்கணும் இல்ல? வரும்போது கடையில சொல்லிட்டு வந்திருக்கேன். கொஞ்ச நேரத்தில வந்துடும்" என்றான் சபரி.

சற்று நேரத்தில் கடையிலிருந்து பொருட்கள் வந்தன.

பொருட்களை வாங்கி உள்ளே வைத்த மைதிலி, "காய்கறியே இல்லையே, என்ன சமைக்கிறது?" என்றாள்.

சற்று யோசித்த சபரி, "புழுங்கரிசியை வச்சு கஞ்சி வச்சுடு. நாளைக்குக் காலையில காய்கறி வாங்கி சமைச்சுக்கலாம்!" என்றான்.

"புழுங்கரிசிக் கஞ்சியில மோர் ஊத்தி சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். வீட்டில மோர் இல்லையே!"

"மோர் இல்லாட்டா என்ன? தண்ணி ஊத்திக் குடிக்கலாம்!"

"அது நல்லாவா இருக்கும்?" என்றாள் மைதிலி.

"நீ செஞ்சா பிரமாதமாத்தான் இருக்கும்!" என்ற சபரி, 'கஞ்சியின் ருசி எப்படி இருந்தாலும், இத்தனை நாட்களாக எவ்வளவு கஷ்டப்பட்டபோதும், யாரிடமும் உதவி கேட்பதில்லை என்று உறுதியாக இருந்து, இன்று நான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அரிசியில் செய்யப்பட்ட கஞ்சியைக் குடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்!' என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்: 
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...