Saturday, May 25, 2024

1064. நண்பனைத் தேடிச் சென்றபோது...

டெல்லியிலிருந்து வந்திருந்த தன் கல்லூரி நண்பன் நீலகண்டனை நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தான் மகேஷ்.

ஒருவரை ஒருவர் நலம் விசாரித்த பிறகு, "சென்னையில இருக்கிகிற நம் நண்பர்களைப் பாக்கணும்!" என்றான் நீலகண்டன். 

"கண்டிப்பா!" என்ற மகேஷ், தன் தொலைபேசி எண் டயரியைப் பிரித்து, ஒவ்வொரு நண்பனின் தொலைபேசி எண்ணையும் அழைத்தான். நான்கு பேர்களுடன் தொடர்பு கிடைத்தது. நீலகண்டன் அவர்களுடன் உரையாடினான்.

"ரகுவுக்கும், கணேஷுக்கும் வீட்டில ஃபோன் இல்ல. அவங்களை ஆஃபீஸ் நம்பர்ல கூப்பிட முடியாது. சாயந்திரம், வீட்டில போய்ப் பார்க்கலாம். அவங்களுக்கும் சர்ப்ரைஸா இருக்கும்!" என்றான் மகேஷ்.

"ஜனாவைக் கூப்பிடலியே!" என்றான் நீலகண்டன்.

"கூப்பிட்டேன். அவன் வீட்டு நம்பர் கிடைக்கல. அது ஒர்க் பண்ணல போல இருக்கு. அவன் ஆஃபீஸ் நம்பர் எங்கிட்ட இல்ல. ஆனா, அட்ரஸ் தெரியும். நேரிலயே போய்ப் பாத்துடலாம்."

"அவன் சொந்தமா பிசினஸ் பண்றான் இல்ல?"

"ஆமாம். எப்பவுமே பிசியா இருப்பான். ஆளைப் பிடிக்கவே முடியாது. அதனால, நான் அவனைத் தொந்தரவு பண்றதில்ல. அவனே அப்பப்ப ஃபோன் பண்ணுவான். ஆனா, ரெண்டு மூணு மாசமா அவன்கிட்டேந்து ஃபோன் வரலை. நானே பண்ணணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இப்ப பண்ணினா, அவன் நம்பர் கிடைக்கல."

"சரி. இப்பவே, அவனை ஆஃபீஸ்ல போய்ப் பாத்துடலாம்" என்றான் நீலகண்டன்.

இருவரும் ஜனா என்று அழைக்கப்பட்ட ஜனார்த்தனின் நிறுவனம் இருந்த இடத்துக்குப் போனபோது, அந்த இடத்தில் வேறொரு நிறுவனத்தின் போர்டு காணப்பட்டது. விசாரித்ததில், ஜனார்த்தனம் அந்த இடத்தைக் காலி செய்து விட்டதாகவும், அலுவலகத்தைத் தன் வீட்டுக்கு மாற்றி விட்டதாகவும் தெரிந்தது.

"ஆஃபீஸ் வச்சுக்கற அளவுக்கு அவன் வீட்டில இடம் கிடையாதே. போய்ப் பாக்கலாம்!" என்றான் மகேஷ்.

னா வீட்டில் இருந்தான். ஆனால், அங்கே அலுவலகம் என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

நீலகண்டனும், ஜனாவும் சற்று நேரம் உரையாடிய பிறகு, "என்னடா, ஆஃபீஸை வீட்டுக்கு மாத்திட்டதா சொன்னாங்க? இங்கே, ஆஃபீஸ் எதுவும் இல்லையே!" என்றான் மகேஷ்.

"ஆஃபீஸ் ஏது? பிசினஸையே மூடியாச்சு!"

"என்னடா சொல்ற? உன் ஆஃபீஸ் இருந்த இடத்தில கேட்டப்ப, ஆஃபீசை வீட்டுக்கு மாத்திட்டதாத்தானே சொன்னாங்க?" என்றான் மகேஷ், அதிர்ச்சியுடன்.

"காலி பண்ணும்போது, நான் அவங்ககிட்ட அப்படித்தான் சொல்லிட்டு வந்தேன். அதைத்தான் அவங்க உங்கிட்ட சொல்லி இருக்காங்க!"

"என்னடா ஆச்சு?"

"திடீர்னு வியாபாரத்தில ஒரு பெரிய பிரச்னை. எங்கிட்ட பொருட்களை வாங்கிக்கிட்டிருந்த ஒரு பெரிய கஸ்டமர் திடீர்னு திவாலாயிட்டாரு. எனக்கு அவர்கிட்டேந்து வர வேண்டிய பணம் மொத்தமா முடங்கிப் போச்சு. ஆனா, நான் என்னோட சப்ளையர்களுக்கும் மத்தவங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனால வாடகைக்கு எடுத்திருந்த ஆஃபீசைக் காலி பண்ணிட்டு, அதுக்குக் கொடுத்திருந்த அட்வான்சை வாங்கிக் கொஞ்சம் கடனை அடைச்சேன். வேலை செஞ்சவங்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிட்டு, பிசினசை மூடிட்டேன். என்னோட கார், என் மனைவியோட நகைகள் எல்லாத்தையும் வித்துட்டேன். இந்த வீட்டையும் வித்தாச்சு. இன்னும் ஒரு மாசத்தில ஹேண்ட் ஓவர் பண்ணணும். வாடகைக்கு வீடு பாத்துக்கிட்டிருக்கேன். அநேகமா எல்லாக் கடனையும் அடைச்சுட்டேன்!" என்று சொல்லிச் சிரித்தான் ஜனார்த்தனம்.

"எங்க யார்கிட்டேயும் சொல்லவே இல்லையே! சொல்லி இருந்தா, எங்களால முடிஞ்ச உதவியைப் பண்ணி இருப்போம் இல்ல?" என்றான் மகேஷ்.

"நிச்சயமாப் பண்ணி இருப்பீங்க. அதனாலதான் சொல்லல!"

"என்னடா சொல்ற?"

"உன்னை மாதிரி நண்பர்கள்கிட்ட உதவி கேட்டிருந்தா, நீங்கள்ளாம் கண்டிப்பா உதவி செஞ்சிருப்பீங்க. அதை வச்சு, என்னோட பிரச்னைகளை சுலபமா சமாளிச்சிருப்பேன். ஆனா, யார்கிடேயும் உதவி கேக்கக் கூடாதுன்னுதான் யார்கிட்டேயும், என் நிலைமையை சொல்லல."

"இப்ப என்ன செய்யப் போற?"

"வேலை தேடிக்கிட்டிருக்கேன். எந்த வேலை கிடைச்சாலும் சேர்ந்துட வேண்டியதுதான்" என்று ஜனார்த்தனன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவன் மனைவி ஒரு தட்டில் காப்பிக் கோப்பைகளையும், முகத்தில் புன்னகையையும் ஏந்தியபடி உள்ளிருந்து வந்தாள்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள்: 
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும், பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...