Wednesday, May 22, 2024

1063. வித்யாவின் முடிவு!

இன்டர்வியூவுக்குப் போய் விட்டுத் திரும்பிய பாஸ்கரின் முகத்தைப் பார்த்தே, முடிவைப் புரிந்து கொண்டாள் அவன் மனைவி வித்யா.

பாஸ்கர் உடை மாற்றிக் கொண்டு முன்னறையில் வந்து அமர்ந்ததும், "என்ன ஆச்சு? ரொம்ப நம்பிக்கையா இருந்தீங்களே!" என்றாள் வித்யா.

"வேலை கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா, சம்பளம் ரொம்பக் குறைச்சலாக் கொடுக்கறதா சொன்னாங்க. வேண்டாம்னுட்டேன்!"

"எவ்வளவு கொடுக்கறதா சொன்னாங்க?"

பாஸ்கர் தொகையைக் குறிப்பிட்டதும், "நீங்க முன்ன வாங்கின சம்பளத்தை விடக் கொஞ்சம்தானே குறைவு? ஒத்துக்கிட்டிருக்கலாமே!" என்றாள் வித்யா, ஆற்றாமையுடன்.

"என்ன பேசற நீ? முன்னே வாங்கின சம்பளத்தை விடக் குறைஞ்ச சம்பளத்துக்குப் போறது அவமானம் இல்லையா? அதை நான் ஒத்துக்கிட்டிருந்தா, அப்புறம் வேலையில சேர்ந்தப்புறம், என்னை யாரு மதிப்பாங்க?" என்றான் பாஸ்கர், கோபத்துடன்.

"உங்களுக்கு வேலை போய் ஏழெட்டு மாசம் ஆயிடுச்சு. நீங்க இன்னும் வேற வேலையில சேராம இருக்கறது எனக்குக் கவலையா இருக்கு!"

"நீ கவலைப்படறதுக்கு என்ன இருக்கு? அதுதான் குடும்பம் நடத்தறத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேனே! வேலை எங்கே போகுது? இது இல்லேன்னா, வேற வேலை கிடைச்சுட்டுப் போகுது!" என்றான் பாஸ்கர், அலட்சியமாக.

"என்னது, நீ வேலைக்குப் போகப் போறியா?" என்றான் பாஸ்கர், அதிர்ச்சியுடன்.

"ஆமாம், நாளைக்கு வேலையில சேரணும்!" என்றாள் வித்யா.

"இவ்வளவு குறைஞ்ச சம்பளத்தில, நீ வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன இருக்கு?"

"என்னோட தகுதிக்கு, சம்பளம் இவ்வளவுதான் கிடைக்கும். குடும்பத்தில யாராவது ஒருத்தர் சம்பாதிக்கணும் இல்ல?"

பாஸ்கர் மௌனமாக இருந்தான்.

"உங்களுக்கு வேலை போனதும், நம்மால வீட்டு வாடகை கொடுக்க முடியாதுங்கறதால, நாம குடியிருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுக் காலியா இருந்த உங்க நண்பர் வீட்டுக்கு வந்துட்டோம். என்னோட அண்ணன் மளிகைக் கடை வச்சிருக்கறதால, மாசாமாசம் மளிகைச் சாமான்களை அனுப்பிடறாரு. மத்த செலவுகளுக்கும் யார்கிட்டயாவது பணம் வாங்கிக்கிட்டிருக்கீங்க. அதில கடன் எவ்வளவு, இனாமா எவ்வளவுன்னு எனக்குத் தெரியல. உங்களுக்கு இது எப்படி இருக்கோ தெரியல, எனக்கு அவமானமா இருக்கு. நீங்க ஒரு வேலைக்குப் போற வரையிலும், நான் என்னால முடிஞ்சதை சம்பாதிக்கணும்னு நினைக்கறேன்!" என்றாள் வித்யா, உறுதியுடன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

பொருள்: 
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...