Monday, May 20, 2024

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலிலே மூழ்க வேண்டும்...'

செல்வகுமார் இசை ஒலிப்பை நிறுத்தினார்.

"ஏன் நிறுத்திட்டீங்க? உங்களுக்குத்தான் பழைய பாட்டு கேக்கறதுன்னா, ரொம்பப் பிடிக்குமே!" என்றாள் கோமதி.

"பிடிக்கும்தான். ஆனா இந்தப் பாட்டு, கடவுளுக்கே சாபம் கொடுக்கற மாதிரி இருக்கு. எனக்கு அந்த வரிகளைக் கேட்கக் கஷ்டமா இருக்கு. கண்ணதாசன் ஏன் இப்படி எழுதினார்னு தெரியல" என்றார் செல்வகுமார்.

து காலை நேரம் என்பதால், அவர்கள் கோவிலில் நுழையும்போது அதிகக் கூட்டம் இல்லை. அவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. நிதானமாக, ஒவ்வொரு சன்னிதியாக நின்று தரிசித்து விட்டு வந்தனர்.

கோவிலில் பிரசாதம் வேறு கிடைத்தது. சர்க்கரைப் பொங்கல். நிறையவே கொடுத்தார்கள். பிரசாதத்தை ருசித்து உண்டு விட்டுக் கைகழுவிக் கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது கோவிலுக்குள் அதிகம் பேர் நுழைய ஆரம்பித்திருந்தனர். கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்களை விடக் கோவில் வாசலில் குவிந்திருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

பலர் வரிசையில் அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்க, சிலர் அங்கும் இங்கும் நடந்தபடி கோவிலுக்குள் நுழைபவர்களிடமும், தரிசனம் முடித்து விட்டு வருபவர்களிடமும் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

"நாம உள்ளே நுழையறப்ப ஒண்ணு ரெண்டு பிச்சைக்காரங்கதான் இருந்தாங்க. இப்ப, இவ்வளவு பேரு வந்துட்டாங்களே! அவங்களுக்கும் வேலை நேரம் இருக்கு போலருக்கு!" என்றாள் கோமதி, விளையாட்டாக.

செல்வகுமார் தன்னிடம் இருந்த சில்லறைக் காசுகளையும், பத்து ரூபாய்த் தாள்களையும் சிலருக்குப் போட்டு விட்டு விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தார். 

அவர் சிலருக்குப் பிச்சை அளித்ததைக் கண்ட மற்ற பிச்சைக்காரர்கள் அவர் பின்னே ஓடி வந்தனர். அவர் காரில் அமர்ந்த பிறகும், காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டினர்.

செல்வகுமார் காரைக் கிளப்பினார்.

"கையில இருந்த காசை எல்லாம் பிச்சைக்காரங்களுக்குப் போட்டுட்டீங்க போலருக்கே!" என்றாள் கோமதி.

"ஆமாம். சில பேருக்குத்தான் போட முடிஞ்சுது. எல்லாருக்கும் போடற அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லையேன்னு வருத்தமா இருக்கு" என்றார் செல்வகுமார்.

"நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. உலகத்தில இருக்கற எல்லாப் பிச்சைக்காரங்களுக்கும், உங்களால பிச்சை போட முடியுமா? அப்படியே போட்டாலும், தினமும் போட முடியுமா? இதெல்லாம் கடவுளோட படைப்பு. அதை நம்மால மாத்த முடியாது."

சட்டென்று காரை நிறுத்தினார் செல்வகுமார்.

"என்ன ஆச்சு?" என்றாள் கோமதி, பதற்றத்துடன்.

"ஒண்ணுமில்ல" என்றபடியே மீண்டும் காரைக் கிளப்பிய செல்வகுமார், "இதெல்லாம் கடவுளோட படைப்புன்னு நீ சொன்னதைக் கேட்டதும், கொஞ்சம் அதிர்ச்சி ஆயிடுச்சு. உண்மைதான். கடவுள் இருக்கிற கோவில் வாசலிலேயே, இவ்வளவு பிச்சைக்காரங்க. கோவிலுக்குள்ள சக்கரைப் பொங்கல், புளியோதரைன்னு பிரசாத விநியோகம்! இத்தனை பேர் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமையைக் கடவுள் ஏன் ஏற்படுத்தினார்?"

கோமதி மௌனமாக இருந்தாள்.

"ஒரு அரசாங்கம் சரியா செயல்படலேன்னா, தேர்தல்ல அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிட்டு, வேற அரசாங்கத்தைக் கொண்டு வரோம். உலகத்தில சில பேர் பிச்சை எடுத்துத்தான் வாழணுங்கற நிலையை ஏற்படுத்தின கடவுளுக்கு என்ன தண்டனை கொடுக்கறது? தெருத்தெருவா அலையற பிச்சைக்காரங்க மாதிரி, அவரும் இந்த உலகத்தில திரியற நிலைமை வரணும். அதுதான் அவருக்கான தண்டனை!"

சற்று நேரம் முன்பு 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்' என்ற திரைப்படப் பாடலைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை நிறுத்திய கணவரா இப்படிப் பேசுகிறார் என்று வியந்தாள் கோமதி.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

பொருள்: 
உலகில் சிலர் இரந்து (பிச்சை எடுத்து) உயிர் வாழ வேண்டிய நிலையை உலகத்தைப் படைத்தவன் ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...