Saturday, December 2, 2023

1037. விவேகனின் விஞ்ஞான ஆர்வம்!

செல்வரத்தினத்தின் மகன் விவேகனுக்குச் சிறு  வயதிலிருந்தே விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளிப் பாடங்களில் தான் படித்த விஞ்ஞான விஷயங்களைப் பற்றி அவன் தன் தந்தையிடம் பேசுவான்.

மகன் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளும் செல்வரத்தினம், "நீ சொல்றதைக் கேக்க எனக்குப் பெருமையா இருக்கு, ஆனா எனக்கு இதெல்லாம் அதிகமாப் புரியல. நான் படிக்காதவன். எனக்குத் தெரிஞ்சது விவசாயம் மட்டும்தான்" என்பார்.

பள்ளி விடுமுறை நாட்களில் தந்தையுடன் வயலுக்குச் சென்று அவர் செய்யும் வேலைகளை கவனிப்பான் விவேகன். 

கொஞ்சம் பெரியவன் ஆனதும் வயல் வேலைகளில் தந்தைக்கு உதவ விவேகன் முன்வந்தபோது, "நீ முதல்ல படிப்பை முடி. அதுக்கப்புறம் உனக்கு விவசாயத்தில ஆர்வம் இருந்தா என்னோட வந்து வேலை செய். இப்ப வேண்டாம். இப்ப படிப்பில மட்டும் கவனத்தைச் செலுத்து" என்று அவனைத் தடுத்து விட்டார் செல்வரத்தினம்.

விவேகன் பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் வயலுக்கு வந்தான். செல்வரத்தினம் கலப்பையில் உழுது கொண்டிருந்ததை அருகில் வந்து பார்த்தான்.

"அப்பா! இந்தக் கலப்பை கோடு போடற மாதிரி போகுது. இப்படி உழுதா வயல் முழுக்க உழுது முடிக்க ரொம்ப நாள் ஆகுமே. கலப்பை இன்னும் அகலமா இருந்தா நல்லா இருக்குமே!" என்றான்.

"அகலமா இருந்தா ஆழமா உழ முடியாது. ஆழமா உழுதாத்தான் நிலத்தைத் தோண்டி அடியில இருக்கற மண்கட்டிகளை எல்லாம் உடைச்சுப் பொடியாக்க முடியும். அப்பதான் மண்ணு தண்ணியை நல்லா உறிஞ்சிக்கும். மண்கட்டிகளை உடைச்சுப் பொடியாக்கற அளவுக்கு உழுதா, உரம் போடாமயே நிலம் நல்லா விளையும்னு என் தாத்தா சொல்லி இருக்காரு" என்றார் செல்வரத்தினம்.

"எதுக்குப் பொடியாக்கணும்? கட்டியா இருந்தா என்ன? மண்கட்டிதானே? அதுக்குள்ள தண்ணி போகும் இல்ல?"

"அது எனக்குத் தெரியாது. என் முன்னோர்கள் சொன்னபடி நான் செஞ்சுக்கிட்டிருக்கேன்" என்றார் செல்வரத்தினம்.

சில நாட்கள் கழித்து மழை பெய்தது.

மழை பெய்த அடுத்த நாள் இருவரும் வயலுக்குச் சென்றனர்.

"அப்பா! இங்கே பாரு. நீ உழுத இடத்தில தண்ணியே தேங்கல. எல்லாம் நிலத்துக்குள்ள போயிடுச்சு. நீ பாதி உழுத இடங்களில மண்கட்டிகளுக்கு இடையில தண்ணி தேங்கி இருக்கு பாரு. அதுதானே நல்லது?" என்றான் விவேகன்.

"அது எனக்குத் தெரியாது. ஆனா நல்லா உழுத இடத்திலதான் நல்லா விளையுங்கறது மட்டும் எனக்குத் தெரியும்!" என்றார் செல்வரத்தினம்.

சில நாட்கள் கழித்து விவேகன், "அப்பா! இப்பதான் பாடத்தில படிச்சேன். ஒரு பொருளைப் பொடி பண்ணினா அதோட சர்ஃபேஸ் ஏரியா, அதாவது பரப்பு அதிகமாகுமாம். அதிகப் பரப்பு இருந்தா அதில தண்ணி உறிஞ்சிக்கிற அளவு அதிகமா இருக்கும் இல்ல? அதுதான் நல்லது. அன்னிக்கு நாம பார்த்தப்ப நீ நல்லா உழுத இடங்களில மண்ணு பொடியா இருந்ததால அது அதிகமா தண்ணியை உறிஞ்சிக்கிட்டிருக்கு. அதனாலதான் அங்கே தண்ணி தேங்கல. கட்டியா இருந்த மண்ணு தண்ணியை அதிகம் உறிஞ்சாததால அங்கே தண்ணி தேங்கி இருந்தது. அந்தத் தண்ணி ஒண்ணு ஆவியாயிடும், இல்லை பூமிக்குப் போயிடும். பொடி மண்ணில உறிஞ்சப்பட்டிருக்கிற தண்ணி பயிர்களுக்குப் போய் அதை நல்லா வளர வைக்கும். மண்கட்டி எல்லாம் பொடியா ஆற மாதிரி உழுதா உரம் இல்லாம கூட நல்ல விளைச்சல் கொடுக்கும்னு உன் தாத்தா சொன்னது சரின்னு இப்பதான் எனக்குப் புரியுது" என்றான்.

"நீ சொல்றது எனக்குப் புரியல. ஆனா என் தாத்தா சொன்னது சரிங்கறதை நான் அனுபவத்தில பாத்திருக்கேன். நீ படிச்ச விஞ்ஞானத்திலேந்து இதைச் சரின்னு புரிஞ்சுக்கிட்டு சொல்றதைக் கேக்க எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்றார். 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

பொருள்: 
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...