Friday, December 8, 2023

1038. விளையும் பயிர்!

அன்று பள்ளி விடுமுறை என்பதால் தன் தந்தை ஐயப்பனுடன் வயலுக்குச் சென்றான் சுரேன்.

"என்னப்பா செய்யப் போற?" என்றான் சுரேன், தந்தை உர மூட்டையைப் பிரிப்பதைப் பார்த்து.

"வயலை உழுதாச்சு. இப்ப  உரம் போடணும்" என்றான் ஐயப்பன்.

"உரம் எதுக்குப்பா?"

"உரம் போட்டாதான் பயிர் நல்லா வளரும்."

"பள்ளிக்கூடம் இல்லாத நாள்ள எல்லாம் நான் வயலுக்கு வந்து பாக்கறேம்ப்பா!"

"பாரேன்!" என்றான் ஐயப்பன்.

ஆயினும், அதற்குப் பிறகு பரீட்சை நெருங்கி வந்ததால், சுரேனால் சில வாரங்களுக்குப் பிறகுதான் தந்தையுடன் வயலுக்குச் செல்ல முடிந்தது.

அப்போது பயிர்கள் வளர்ந்திருந்தன.

"அதுக்குள்ள இவ்வளவு உயரம் வளர்ந்துடுச்சே!" என்றான் சுரேன் வியப்புடன்.

"பயிர்கள் எல்லாம் வேகமாத்தான் வளரும்" என்றான் ஐயப்பன்.

வயலில் சில பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

"ஏம்ப்பா, அவங்க செடிகளைப் பிடுங்கிப் போட்டுக்கிட்டிருக்காங்க?"

"அவங்க களை எடுக்கறாங்க."

"அப்படின்னா?"

"நாம விதைச்ச பயிர்களுக்கு நடுவில சில வேண்டாத பயிர்கள் தானே முளைக்கும். அதைத்தான் களைன்னு சொல்லுவாங்க. அதையெல்லாம் பிடுங்கி எடுத்தாத்தான் பயிர் நல்லா வளரும். இல்லேன்னா நாம பாய்ச்சற தண்ணி, போடற உரம் எல்லாத்தையும் களைகள் எடுத்துக்கிட்டு வளரும். பயிர்களுக்குத் தேவையான தண்ணி, உரம் இதெல்லாம் போதுமான அளவு கிடைக்காது. அதனாலதான் களை எடுக்கறோம்."

"பயிர் செய்யறதில இவ்வளவு விஷயம் இருக்கா? சரி. அடுத்தது என்ன?"

"அப்புறம் கொஞ்ச நாள் தண்ணி பாய்ச்சிக்கிட்டிருக்கணும். அதுக்கப்புறம் பயிர்கள் நல்லா வளர ஆரம்பிச்சுடும். அப்புறம் நமக்கு அதிக வேலை இருக்காது!"

"அப்படின்னா, அதுக்கப்புறம் நீ வயலுக்கு வர வேண்டாம் இல்ல? எனக்குப் பள்ளிக்கூடத்தில லீவு விடற மாதிரி உனக்கும் லீவு. அப்படித்தானே?" என்றான் சுரேன்.

ஐயப்பன் சிரித்து விட்டு, "விவசாயிக்கு ஏது லீவு? பயிர்கள் வளற ஆரம்பிச்சப்புறம் அதைப் பாதுகாக்கணுமே! அது ரொம்ப முக்கியம்" என்றான்.

"பாதுகாக்கறதுன்னா?"

"ஆடு மாடுகள் வந்து பரை மேஞ்சுடாம பாத்துக்கணும். பயிர்ல பூச்சி வராம இருக்கான்னு பாத்துக்கணும். பயிர்கள் முற்றி அறுவடை செய்யற வரையிலும் தினமும் வயல்ல வந்து பாத்துக்கிட்டுதான் இருக்கணும். இல்லேன்னா இவ்வளவு நாள் செஞ்சதுக்கெல்லாம் பயன் இல்லாம போயிடும்!" என்றான் ஐயப்பன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள்: 
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்து களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...