Saturday, November 25, 2023

1031. சென்னையில் ஒரு வேலை

"என்னப்பா, உங்கப்பாவை வயல்ல தனியாப் பாடுபட விட்டுட்டு நீ சென்னைக்குப் போய் வேலை தேடப் போறியாமே!" என்றார் சக்திவேல்.

"மாமா! நாங்க சின்ன விவசாயிங்க. எங்களுக்கு விவசாயம் கட்டுப்படியாகல. நானும் நாலைஞ்சு வருஷமா எங்கப்பாவோட சேர்ந்து வயல்ல வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். விளைச்சல் நல்லா இருந்தாலே கையில ஒண்ணும் நிக்கறதில்ல. விளைச்சல் சரியா இல்லேன்னா கடன்காரங்களாத்தான் ஆக வேண்டி இருக்கு. அப்புறம் அந்தக் கடனைத் தீர்க்கவே ரெண்டு மூணு வருஷம் பாடுபட வேண்டி இருக்கு. அதுக்குள்ள மறுபடி விளைச்சல் பாதிக்கப்பட்டா கடன் அதிகமாகிக்கிட்டே போகுது. இதுக்கு ஒரு விடிவு வேண்டாமா?" என்றான் பழனி.

"இது எல்லா விவசாயிகளுக்கும் இருக்கிற பிரச்னைதாம்ப்பா."

"இருக்கலாம் மாமா. நான் சென்னைக்குப் போய் ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிச்சா குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்."

"சரி. செய். உன் அப்பாவோட நண்பன்ங்கறதால உன் அப்பா தனியே கஷ்டப்படுவானேங்கற கவலையில உங்கிட்ட பேசினேன். சென்னையில உனக்கு நல்ல வேலை கிடைச்சு நீ நிறைய சம்பாதிக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சக்திவேல்.

சென்னையில் பழனிக்கு ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சுமாரான சம்பளம்தான். ஆயினும் எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு தங்கும் அறைக்கு வந்து நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கும் வாழ்க்கை பழனிக்குப் பிடித்திருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு தொழிற்சாலையில் பணிகள் குறைய ஆரம்பித்தன. வியாபாரம் சரியாக இல்லாததால் தொழிற்சாலை விரைவிலேயே மூடப்படும் என்று தொழிலாளர்களிடையே பேச்சு எழுந்தது. சில தொழிலாளர்கள் வேறு வேலே தேடிக் கொண்டு போய் விட்டனர்.

வேலை போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் பழனி இருந்தபோது ஒருநாள் அவன் முதலாளி அவனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"இன்னும் கொஞ்ச நாள்ள இந்தத் தொழிற்சாலையை மூடிடுவோம். அதுக்கப்புறம் உங்களுக்கெல்லாம் இங்கே வேலை இருக்காது. வேலை போனவங்களுக்கு சட்டப்படி நஷ்ட ஈடு கொடுப்போம். ஆனா நீ சமீபத்திலதான் வேலைக்கு சேர்ந்ததால உனக்கு நஷ்ட ஈடா எதுவும் கிடைக்காது. நீ நல்லா வேலை செய்யறதா மானேஜர் எங்கிட்ட சொல்லி இருக்காரு. நீ கிராமத்திலேந்து வந்தவன், விவசாயத்தில அனுபவம் இருக்கு. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில எனக்குப் பண்ணை நிலம் இருக்கு. அங்கே உனக்கு வேலை கொடுக்கறேன். நீ ஊர்ல பார்த்த மாதிரி விவசாய வேலை. இதே சம்பளம். என்ன சொல்ற?" என்றார் முதலாளி.

"என்னடா அதுக்குள்ள திரும்பி வந்துட்ட?" என்றார் பழனியின் தந்தை வியப்புடன்.

"இந்த உலகம் விவசாயத்தை நம்பித்தான் இயங்குது. டவுனுக்குப் போனாலும் விவசாயத்தை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டேம்ப்பா. இனிமே உன்னோடயே சேர்ந்து நம்ம நிலத்தைப் பார்த்துக்கறேன்" என்றான் பழனி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள்: 
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...