"வாப்பா! நீ எப்படி இருக்க?" என்றாள் முத்துலட்சுமி.
"நல்லா இருக்கேம்மா" என்ற சீனு, சற்றுத் தயங்கி விட்டு, "பெரியப்பா போய் ஆறு மாசம் ஆயிடுச்சு இல்ல?" என்றான்.
"ஆமாம். எனக்கு ஆறு வருஷம் ஆன மாதிரி இருக்கு. ஒவ்வொரு நாளும் போகறதுக்குள்ள, ஒரு யுகமே போற மாதிரி இருக்கு."
"முருகன், பிரபாகர் எல்லாம் எங்கே?"
"அவங்க எப்ப வீட்டில இருந்திருக்காங்க? எங்கேயாவது ஊர் சுத்திக்கிட்டிருப்பாங்க!" என்றாள் முத்துலட்சுமி, சலிப்புடன்.
"வேலைக்குப் போறாங்க இல்ல?"
"எங்கே? எங்க மேல இரக்கப்பட்டு, ஒத்தர் முருகனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தாரு. ரெண்டே மாசத்தில, அதை விட்டுட்டு வந்துட்டான். பிரபாகர்கிட்ட ஏதாவது வேலைக்குப் போடான்னா, நல்ல வேலை கிடைச்சாதான் போவானாம். பிளஸ் டூ கூட பாஸ் பண்ணாதவனுக்கு, நல்ல வேலை எங்கே கிடைக்கும்?"
"எப்படிப் பெரியம்மா சமாளிக்கிறீங்க?"
"இருக்கறதை வச்சு, ஏதோ ஓட்டிக்கிட்டிருக்கேன். இது எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியல. இப்படியே போனா, நடுத்தெருவுக்கு வந்துடுவோமோன்னு பயமா இருக்கு. ஆனா, என் ரெண்டு பிள்ளைகளுக்கும் இந்தக் கவலை கொஞ்சம் கூட இல்லையே!" என்றாள் முத்துலட்சுமி, பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு.
"பெரியம்மா! தப்பா நினைச்சுக்காதீங்க. இதைச் செலவுக்கு வச்சுக்கங்க. என்னால முடிஞ்ச சின்னத் தொகை இது" என்றபடியே, சில ரூபாய் நோட்டுக்களை முத்துலட்சுமியிடம் நீட்டினான் சீனு.
"உங்கப்பா சின்ன வயசிலேயே போய்ச் சேர்ந்துட்டாரு. ஆனா, சின்னப் பையங்களா இருந்த நீயும், தனராஜும் எவ்வளவு பொறுப்பா குடும்பத்தைப் பாத்துக்கறீங்க! கஷ்டப்படற எனக்குக் கூட உதவி செய்யற! என்னோட பிள்ளைகளுக்கு அந்தப் பொறுப்பு இல்லையே! நீ நல்லா இருக்கணும்ப்பா!" என்று கூறியபடியே, சீனு கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டாள் முத்துலட்சுமி.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல் வகை
குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
No comments:
Post a Comment