Tuesday, November 21, 2023

1029. ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி


"பரம்பரையா நாம வாழ்ந்துக்கிட்டு வர வீடு இப்ப ஏலத்துக்கு வரப் போகுது. நம்மால ஒண்ணுமே செய்ய முடியாதா?" என்றாள் ருக்மிணி.

சீதாராமன் மௌனமாக இருந்தான்.

"வீட்டை அடமானம் வச்சு எதுக்குடா பணம் வாங்கின?" என்றாள் ருக்மிணி கோபத்துடன்.

"பிசினசுக்காக வாங்கினேன். பிசினஸ்ல நஷ்டம் வந்துடுச்சு. அதுக்கு என்ன செய்ய முடியும்?" என்றான் சீதாராமன் அலட்சியமாக.

"எத்தனையோ தலைமுறையா வாழ்ந்த வீட்டை ஏலம் போக விடறது பெரிய பாவம்டா!"

"ஏங்க, அத்தை இவ்வளவு வருத்தப்படறாங்க. வீடு ஏலம் போகாம இருக்க எதுவும் செய்ய முடியாதா?" என்றாள் சீதாராமனின் மனைவி ரமா.

"எங்கேயாவது அஞ்சு லட்ச ரூபா புரட்டிக் கொடு. வீட்டை மீட்டுடலாம்" என்ற சீதாராமன், "அது சரி.இந்த சிவாவை எங்க காணோம்?" என்றான் பேச்சை மாற்றும் விதமாக

"அவனுக்கு ஜுரம்னு படுத்துக்கிட்டிருக்கான். உனக்குதான் வீட்டில என்ன நடக்குதுன்னே தெரியாதே!" என்றாள் ருக்மிணி.

"இல்லை அத்தை. ஜுரத்தோடயே எங்கேயோ வெளியில போயிருக்கான்" என்றாள் ரமா.

"நானும் பத்து நாளா பாத்துக்கிட்டிருக்கேன். வேலைக்குப் போயிட்டு வந்ததும் எங்கேயாவது வெளியில போயிடறான். இன்னிக்கு வேலைக்குப் போகாம வெளியில எங்கேயோ சுத்தப் போயிருக்கான். பொறுப்பு இல்லாத பய!" என்றான் சீதாராமன் கோபத்துடன்.

"பரம்பரையா வந்த வீட்டை அடமானம் வச்சுட்டு அது ஏலம் போகிற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிற நீ பொறுப்பைப் பத்திப் பேசற. இந்த வீடு மட்டும் ஏலத்துக்குப் போச்சு, நான் விஷத்தைக் குடிச்சு செத்துடுவேன்" என்றாள் ருக்மிணி.

"வீடு ஏலம் போறதைத் தடுக்க முடியாதும்மா!"

"அப்படின்னா என்னை இப்பவே விஷத்தைக் குடிக்கச் சொல்றியா?"

அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அடித்தது.

தொலைபேசியை எடுத்துப் பேசிய சீதாராமன், பேசி முடித்து ரிசீவரை வைத்தபின், "சிவா ரோட்டில மயக்கம் போட்டு விழுந்துட்டானாம். ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம்" என்றான் பதற்றத்துடன்.

மூவரும் உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர்.

"ரொம்ப வீக்கா இருக்காரும்மா. ஜுரம் இருக்கு. அதோட ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டிருப்பாரு போல இருக்கு, டீஹைட்ரேட் ஆகி மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. டிரிப்ஸ் ஏத்தி இருக்கோம். நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம். உடம்பைக் கொஞ்சம் நல்லாப் பாத்துக்கங்க. இந்தச் சின்ன வயசில இவ்வளவு பலவீனமா இருக்கக் கூடாது!" என்றார் மருத்துவர்.

"அவன் குழந்தையா இருந்ததிலிருந்தே ரொம்ப பலவீனமா இருக்கான், டாக்டர். அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வந்துடுது" என்றாள் ரமா.

"ரெண்டு மூணு நாள் நல்ல ஓய்வு எடுத்துக்கட்டும். அப்புறமா செக் அப்புக்கு அழைச்சுக்கிட்டு வாங்க. என்னன்னு பார்த்து சரி பண்ணிடலாம்" என்றார் மருத்துவர்.

கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த சிவாவின் அருகில் மூவரும் சென்றனர்.

"ஏண்டா ஜுரத்தோட இப்படி அலைஞ்சு உடம்பை இன்னும் கெடுத்துக்கிட்ட?" என்றாள் ரமா ஆதங்கத்துடன்.

சிவா மூவரையும் பார்த்து, "உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி இருக்கு. எதை முதல்ல சொல்லட்டும்?" என்றான்.

"கெட்ட செய்திதான் வந்துக்கிட்டே இருக்கே! நல்ல செய்தி என்ன? அதைச் சொல்லு முதல்ல" என்றாள் ரமா.

"பத்து நாளா அலைஞ்சு என்னோடநண்பர்கள் பல பேரைப் பார்த்து ஒவ்வொருத்தர்கிட்டயும் கொஞ்சம் கடன் வாங்கி அஞ்சு லட்ச ரூபா சேத்துட்டேன். அந்தப் பணத்தை பாங்க்ல கட்டி வீட்டை மீட்டுட்டேன். எல்லாம் முடிஞ்சப்புறம் உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். பாங்க்லேந்து வீட்டுக்கு வரப்பதான் மயங்கி விழுந்துட்டேன். அப்பா! நாளைக்கு நீங்க பாங்க்குக்குப் போய் வீட்டுப் பத்திரத்தை வாங்கிக்கிட்டு வந்துடுங்க" என்றான்.

"இவ்வளவு பொறுப்பா இருந்து குடும்ப மானத்தைக் காப்பாத்தின பிள்ளைக்கு ஏன் உடம்பு இப்படிப் படுத்துதுன்னு தெரியல. கடவுள் புண்ணியத்தில இனிமே உன் உடம்பும் சரியாயிடணும்" என்று கூறிப் பேரனின் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டாள் ருக்மிணி.

"அது சரி. கெட்ட செய்தின்னு சொன்னியே, அது என்ன?" என்றாள் ரமா கவலையுடன்.

"இனிமே என்னால வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாது. என் சம்பளப் பணம் பூராவும் கடனை அடைக்கத்தான் போகும்!"

"கெட்ட செய்தி என்னவா இருக்குமோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த. உன் அப்பா கொடுக்கற பணத்திலேயே குடும்பத்தை நடத்திக்கறேன். நீ கடனை அடைச்சு வீட்டை ஏலம் போகாம தடுத்ததே பெரிய விஷயம். உன் உடம்பு சரியாகி நீ நல்ல தென்போட இருக்கணுங்கறதுதான் இப்ப என்னோட ஒரே கவலை" என்றாள் ரமா." 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

பொருள்: 
தன் குடிக்கு வரக் கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
குறள் 1030 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...