Friday, November 17, 2023

1026. அல்லி ராஜ்ஜியம்!

"மூத்த பையன்னு பேரு. ஆனா எனக்கு இந்த வீட்டில எந்த மதிப்பும் இல்லை. இங்கே அல்லி ராஜ்ஜியம்தானே நடக்குது!" என்றான் சரவணன்.

"இரைஞ்சு பேசாதேடா. பவித்ரா காதில விழுந்துடப் போகுது!" என்றாள் அவன் தாய் திலகவதி.

"விழுந்தா என்ன? அவகிட்ட எனக்கு என்ன பயம்? அவ என் தங்கைதானே?"

"உன் தங்கைதான். ஆனா நீ அல்லி ராஜ்ஜியம்னெல்லாம் சொன்னா அவ சும்மா இருப்பாளா? எனக்கே கோவம் வருதே!"

"உனக்கு ஏன் கோபம் வரணும்?"

"அது என்ன அல்லி ராஜ்ஜியம்? பெண்கள் ஆளக் கூடாதா?  இந்தக் காலத்தில கூட இப்படியெல்லாம் பேசுவாங்களா?"

"சரிம்மா! நான் அல்லி ராஜ்ஜியம்னு சொன்னது தப்புதான். ஆனா பொதுவா ஒரு குடும்பத்தில மூத்த பையனுக்கோ, மூத்த பொண்ணுக்கோதானே அதிக மதிப்பு இருக்கணும்? ஆனா இந்த வீட்டில எல்லாரும் என்னை ஒதுக்கிட்டு என் தங்கைக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கறீங்க?"

"உன்னை யாரும் ஒதுக்கி வைக்கலடா! உன் தங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கறோம்னா அவ இந்தக் குடும்பப் பொறுப்பைத் தானே முன்வந்து ஏத்துக்கிட்டா. நீ அப்படிச் செய்யலியே!"

சரவணன்  மௌனமாக இருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அவன் மனிதில் வந்து போயின.

ப்போது சரவணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பவித்ரா பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். சரவணனின் தந்தை பரமசிவம் தினமும் குடித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பளத்தைத் திலகவதியிடம் கொடுத்தாலும், குடிப்பதற்கு அவளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.

ஒருநாள் பவித்ரா திலகவதியிடமிருந்து மொத்தப் பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டாள். "இனிமே யாருக்கு என்ன செலவுன்னாலும் எங்கிட்டதான் கேட்டு வாங்கிக்கணும்!" என்றாள்.

குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்ட பரமசிவம், பணம் தன் பெண்ணிடம் போய் விட்டது என்று தெரிந்ததும், அவளிடம் சென்று கேட்டார்.

"குடிக்கறதுக்குப் பணம் கிடையாது அப்பா! அதோட இல்ல, இனிமே நீ குடிச்சுட்டு வந்தா, நான் உன்னோட பேச மாட்டேன்" என்றாள்.

"என்னம்மா குழந்தை மாதிரி பேசற?" என்றார் பரமசிவம்.

ஆனால் மனைவியிடம் காட்டிய அதிகாரத்தையும், கடுமையையும் அவரால் மகளிடம் காட்ட முடியவில்லை..

அதற்குப் பிறகு பரமசிவம் சில சமயம் நண்பர்களிடம் கடன் வாங்கிக் குடித்து வந்தார். ஆனால் பவித்ரா தான் சொன்னபடியே அவரிடம் பேசாமல் இருந்தது நாளடைவில் அவரைக் குடிப் பழக்கத்தைக் கைவிட வைத்தது.

"அவ பொண்ணுங்கறதால அப்பா கேட்டுக்கிட்டார். அதையே நான் சொல்லி இருந்தா கேட்டிருப்பாரா? என்னை அடிச்சுப் பணத்தைப் பிடுங்கிக்கிட்டுப் போயிருக்க மாட்டாரா" என்றான் சரவணன்.

"சும்மா சாக்கு சொல்லாதேடா! நீ அதற்கான முயற்சியே செய்யல. ஆனா இப்படியே போனா நம்ம குடும்பம் சீரழிஞ்சுடும்னு நினைச்சு, பவித்ரா துணிச்சலாச் செயல்பட்டா. அதனாலதான் நானும் அப்பாவும் அவ பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கறோம். அதுக்காக உனக்கு முக்கியத்துவம் கொடுக்காம இல்ல. ஏன், பவித்ராவே உனக்கு நிறைய மதிப்புக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கா" என்றாள் திலகவதி.

அப்போது உள்ளிருந்து வந்த பவித்ரா, சரவணனிடம், "அண்ணா! நாளைக்கு காலேஜ் லீவு. என் நண்பர்கள் என்னை சினிமாவுக்குக் கூப்பிடறாங்க. போயிட்டு வரட்டுமா?" என்றாள்.

"என்னை ஏன் கேக்கற?" என்றான் சரவணன்.

"என்ன அண்ணா இது? அப்பா ஊர்ல இல்ல. நீதானே பெரியவன்? உன்னைத்தானே கேட்கணும்?" 

"சரி, போயிட்டு வா. என்ன சினிமா?" என்றான் சரவணன்.

"அல்லி அர்ஜுனா" என்றாள் பவித்ரா.

அதைக் கேட்டு அம்மாவும், அண்ணனும் ஏன் சிரித்தார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை.

பொருட்பால்
குடியியல்ன் தாய் திலகவதி
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

பொருள்: 
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...