Thursday, November 16, 2023

1025. இன்னும் ஒரு கடமை

"சண்முகம்! உங்கப்பா பொறுப்பு இல்லாம இருந்தான். நீதான் சின்ன வயசிலேந்தே பொறுப்பேத்துக்கிட்டுக் குடும்பத்தை கவனிச்சுக்கிட்ட. உன் தம்பியையும், தங்கையையும் படிக்க வச்சுக் கல்யாணம் பண்ணி வச்ச. உங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே போய்ச் சேந்துட்டாங்க. உனக்கும் வயசாகிக்கிட்டு இருக்கு. நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?" என்றாள் தனலட்சுமி.

"பண்ணிக்கறேன் பாட்டி. எனக்கு இன்னும் ஒரு கடமை இருக்கு. அதை முடிச்சுட்டுப் பண்ணிக்கறேன்" என்றான் சண்முகம்.

"வேற என்ன கடமை?"

"சித்தி பொண்ணு கமலாவுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டாமா?"

"உங்கப்பா விவஸ்தை இல்லாம சின்ன வீடு வச்சுக்கிட்டான். இப்ப அவனே போய்ச் சேர்ந்துட்டான். அவளோட பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டியது உன் பொறுப்பு இல்லை. தேவையில்லாம அதையெல்லாம் இழுத்து விட்டுக்காதே!" என்றாள் 

"இல்லை பாட்டி. அப்பா இருந்திருந்தா அவரோட பொண்ணுக்கு அவர் கல்யாணம் செஞ்ச வச்சிருக்க மாட்டாரா? அவர் இல்லாதப்ப அவரோட கடமையை நான் நிறைவேற்ற வேண்டாமா?" என்றான் சண்முகம்.

அப்போது அவர்கள் தெருவில் இருந்த ஒரு வீட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, "அண்ணா! அம்மா ஸ்வீட் பண்ணினாங்க. உங்களுக்குக் கொஞ்சம் கொடுத்து அனுப்பி இருக்காங்க" என்றபடியே சண்முகத்திடம் ஒரு டப்பாவை நீட்டினாள்.

'ஊர்ல இருக்கறவங்கள்ளாம் என் பேரனை சொந்தக்காரனா நினைச்சு அன்பு செலுத்தறாங்கன்னா அவன் அவங்கிட்ட அந்த அளவுக்கு அன்பு காட்டிக்கிட்டிருக்கான்னு அர்த்தம். அப்படி இருக்கறவன் சொந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாம இருப்பானா என்ன?' என்று தன் பேரனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டாள் தனலட்சுமி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

பொருள்: 
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...