Thursday, November 16, 2023

1024. புவனாவின் வியப்பு!

புவனாவுக்குப் பதினைந்து வயதானபோது அவளுடைய தாய் இறந்து போனாள்.

புவனாவின் தம்பி ரவீந்திரனுக்கு வயது பன்னிரண்டு. அவனுக்குக் கீழ் பத்து வயதில் மாலதி, ஏழு வயதில் சேகர். 

புவனாவின் தந்தை கோவிந்தன் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். தன் சம்பளத்தை அவர் மனைவியிடம் கொடுத்து விடுவார். அவள்தான் அவர் கொடுத்த சிறு தொகையை வைத்துக் கொண்டு எப்படியோ குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்தாள்.

மனைவி இறந்ததும், குடும்பத்தை நடத்த முடியாமல் கோவிந்தன் தத்தளித்தார். தான் கொடுத்து வந்த சிறிய தொகையில் மனைவி எப்படிக் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்தாள் என்று அவருக்கு வியப்பாக இருந்தது.

ஒருபுறம் குடும்பப் பொருளாதாரத்தைச் சமாளிக்க வேண்டிய சவால், மறுபுறம் நான்கு குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு.

த்தாம் வகுப்புப் பரீட்சை எழுதியதும், வீட்டு நிர்வாகத்தை புவனா ஏற்றுக் கொண்டாள்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ,புவனா தான் மேலே படிக்கப் போவதில்லை என்று தன் தந்தையிடம் கூறி விட்டாள்.

"பிளஸ் டூ வரையிலாவது படிக்க வேண்டாமா?" என்றார் கோவிந்தன்.

"வேண்டாம்பா. வீட்டைப் பாத்துக்க ஒரு ஆள் வேண்டாமா? நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னுதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன்!" என்றாள் புவனா.

வீட்டு நிர்வாகத்தை புவனா கவனித்துக் கொண்டது கோவிந்தனுக்குப் பெரிய சுமை குறைந்தது போல் இருந்தது. 

தன் பதினெட்டாம் வயதில் தானே முயன்று ஒரு வேலை தேடிக் கொண்டாள் புவனா. ஒரு சிறிய நிறுவனத்தில் பியூன் வேலை.

"நீ சின்னப் பொண்ணு. அதுக்குள்ள வேலைக்குப் போகறேங்கற. அதுவும் பியூன் வேலைக்கு ஆண்களைத்தான் எடுப்பாங்க. உன்னை ஏன் எடுத்திருக்காங்கன்னு தெரியல" என்றார் கோவிந்தன்.

"அப்பா! இந்த கம்பெனியோட எம் டி. ஒரு பெண்மணி. வேலை செய்யறவங்கள்ள நிறைய பேர் பெண்கள்தான். பியூன் வேலைங்கறது ஆஃபீசுக்குள்ளேயே ஃபைல்களை எடுத்துக்கிட்டுப் போறது, அடுக்கி வைக்கறது, பேப்பர்களை ஃபைல்ல போடறது மாதிரியான வேலைகள்தான். கஷ்டமான வேலை இல்லை. உக்காந்து வேலை செய்ய எனக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் கூடக் கொடுக்கறதா எம் டி சொல்லி இருக்காங்க. சம்பளம் குறைச்சல்தான்னாலும் நம்ம குடும்பத்துக்கு உதவும் இல்ல?" என்றாள் புவனா.

புவனாவுக்கு முப்பது வயதானபோது, ரவீந்திரன் படிப்பை முடித்து வேலைக்குப் போய் விட்டான். மாலதிக்குத் திருமணம் ஆகி விட்டது. சேகரும் படிப்பை முடித்து வேலைக்குப் போகத் துவங்கி இருந்தான்.

"நினைச்சுப் பார்த்தாலே எனக்கு மலைப்பா இருக்கும்மா! உங்கம்மா போனப்புறம் உங்களை எல்லாம் எப்படிக் காப்பாத்தி முன்னுக்குக் கொண்டு வரப் போறேன்னு கவலையா இருந்தது. உன் பதினைஞ்சு வயசிலேயே நீ குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, பதினெட்டு வயசில வேலைக்குப் போய் தம்பி தங்களகளைப் படிக்க வச்சு, மாலதிக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு... இதெல்லாம் எப்படி நடந்ததுன்னே எனக்கு ஆச்சரியமா இருக்கு!" என்றார் கோவிந்தன்.

"எனக்குக் கூட ஆச்சரியமாத்தான் இருக்குப்பா. அம்மா போனப்புறம், அம்மா இடத்தில இருந்து இந்தக் குடும்பத்தைப் பாத்துக்கணும்னு எனக்குத் தோணிச்சு. அதன்படி செயல்பட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் எல்லாம் தானே நடந்த மாதிரிதான் எனக்குத் தோணுது. இப்ப கூடப் பாருங்க. படிப்பு இல்லாம, பியூனா இருந்த என்னை எங்க எம் டி தன்னோட பிஏவா வச்சுக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் எனக்கே ஆச்சரியமா இருக்குப்பா!" என்றாள் புவனா. 

"இனிமே நீ கல்யாணம் செஞ்சுக்கணும்மா! 'அக்காவுக்குக் கல்யாணம் ஆனப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்' னு ரவீந்திரன் கண்டிப்பா சொல்லிட்டான்."

"பாக்கலாம்ப்பா! இவ்வளவு விஷயங்கள் தானா நடந்தப்ப அதுவும் நடக்கலாம்!" என்றாள் புவனா சிரித்தபடி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

பொருள்: 
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச்செயல் தானே நிறைவேறும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...