Tuesday, November 14, 2023

1022. திலீபனின் முடிவுகள்

திலீபன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவன் தந்தை பரந்தாமன் இறந்து போனார்.

பரந்தாமன் ஊரில் ஒரு கௌவமான மனிதர். அவருக்கு ஊரில் சிறிதளவு நிலம் இருந்தது. அவர் வேலை எதுவும் பார்க்கவில்லை. நிலத்திலிருந்து வந்த வருமானத்தை வைத்து அவர் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒருபுறம் நிலத்திலிருந்து வந்து கொண்டிருந்த வருமானம் குறைந்து கொண்டே இருக்க, செலவுகள் அதிகரித்துக் கொண்டே போவது அவன் தாய் சகுந்தலாவுக்குக் கவலை அளித்தது. தன் கவலையை அவள் பல சமயம் தன் கணவனிடம் வெளிப்படுத்தி வந்தாள். ஆனால் பரந்தாமன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. "எல்லாம் பாத்துக்கலாம்!" என்பார்.

இந்தப் பேச்சுகள் திலீபனின் காதில் விழுந்து அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்தும், புரியாமலும் இருந்தது.

தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகுதான் தன் தாயின் கவலை எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பது திலீபனுக்குப் புரிந்தது. பரந்தாமன் இருந்தபோது எப்படியோ ஓடிக் கொண்டிருந்த குடும்பம், அவர் மறைவுக்குப் பிறகு தத்தளிக்கத் தொடங்கியது.

பரந்தாமன் அவ்வப்போது பலரிடம் கடன் வாங்கித்தான் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வந்திருக்கிறார் என்பது அவர் மரணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் மறைவுக்குப் பிறகு கடன்காரர்கள் நெருக்க, நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறினாள்.

"அம்மா! நான் பள்ளிக் கூடத்திலேந்து நின்னுக்கறேன். தேவராஜ் ஐயா அவரோட மளிகைக் கடையில என்னை வேலைக்கு சேத்துக்கறதா சொல்லி இருக்காரு. நான் அங்கே வேலைக்குப் போறேன்!" என்றான் திலீபன் தன் தாயிடம்.

"படிப்பு முக்கியம்டா! படிப்பை நிறுத்தினா உன் எதிர்காலம் என்ன ஆறது?"என்றாள் சகுதலா.

"இப்ப நம்ம குடும்பத்தோட எதிர்காலம்தாம்மாமுக்கியம். நான் படிக்காட்டாலும், என் தம்பியும், தங்கையும் படிக்கறதுக்கு என்னால உதவ முடியுமே!" என்றான் திலீபன்.

திலீபன் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடைக்குப் பொருட்களை விற்பனை செய்தவர்களுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் விலைக்கு வாங்கி கடைகளுக்கு லாபத்தில் விற்று வந்ததாக அவன் அறிந்து கொண்டான். 

தானும் அது போன்ற ஒரு தொழிலைச் செய்யலாமே என்ற ஆர்வம் திலீபனுக்கு ஏற்பட்டது.

திலீபனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட ஒரு சில்லறை வியாபாரி அவனை ஒரு மொத்த வியாபாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த மொத்த வியாபாரி அவனுக்குப் பொருட்களைக் கடனுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

கடை வேலையைத் துறந்து விட்டு மொத்த விற்பனையளரிடம் பொருட்களை வாங்கி அவற்றை சைக்கிளில் எடுத்துச் சென்று அருகிலிருந்த ஊர்களில் இருந்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினான் திலீபன்.

"உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா! திடீர்னு உன் அப்பா போனப்பறம் எப்படிக் குடும்பத்தை நடத்தறதுன்னு நான் தவிச்சுக்கிட்டிருந்தப்ப, உன்னைப் பத்தி யோசிக்காம, குடும்ப நலம்தான் முக்கியம்னு நினைச்சு, படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போன. அப்புறம், கடை வேலையை விட்டுட்டு மளிகைப் பொருட்களைக் கடைகளுக்கு சப்ளை செய்யற தொழிலை ஆரம்பிச்ச. இன்னிக்கு நீ ஒரு பெரிய விநியோகஸ்தனா இருக்க. உன் தம்பியையும், தங்கையும் நல்லாப் படிக்க வச்சு, கல்யாணமும் செஞ்சு வச்சுட்ட. உன் தொழிலைப் பெரிசாக்கினதோட, வீடு, நிலம்னு சொத்துக்கள் வாங்கி, கல்யாணம் பண்ணிக்கிட்டு சிறப்பா வாழ்த்தை நடத்தற. உன்னால நம்ம குடும்பத்துக்கே பெருமைடா!" என்றாள் சகுந்தலா.

"என்னோட சின்ன வயசில நீ அப்பாகிட்ட நம்ம எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்பட்டுப் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டப்ப, நம்ம குடும்பத்தை உயர்த்த ஏதாவது செய்யணுங்கற எண்ணம் என் மனசில அப்பவே உண்டாயிடுச்சு. அப்புறம் அப்பா திடீர்னு காலமானதும், ஏதாவது செஞ்சே ஆகணுங்கற உத்வேகம் வந்து சில முடிவுகளை எடுத்தேன். அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சதால நம்ம குடும்பம் இப்ப நல்லா இருக்கு. அதுதாம்மா எனக்குத் திருப்தியா இருக்கற விஷயம்!" என்றான் திலீபன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

பொருள்: 
முயற்சி, நிறைந்த அறிவு என்ற இந்த இரண்டின் இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...