Sunday, November 12, 2023

1021. தேர்த் திருவிழா

கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

"தேரோட்டம் ரொம்ப சிறப்பா நடந்தது. இவ்வளவு சிறப்பான தேரோட்டத்தை நான் பார்த்ததில்லை" என்றார் ரகுபதி.

"நீங்க இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கீங்க. இது எப்பவுமே இப்படித்தான் நடக்கும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எத்தனையோ வருஷமா இதை நடத்திக்கிட்டிருக்காங்க" என்றார் அந்த ஊரைச் சேர்ந்த பசுபதி.

"ஆமாம். சொன்னாங்க. பலராமன்னு ஒத்தர்தான் இந்தத் திருவிழாவோட முழுச் செலவையும் ஏத்துக்கிட்டு நடத்தறாருன்னு.அவரை நான் பாக்கலியே!"

"அவரு வரலை."

"ஏன்?"

"அவருக்குத் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டு ரொம்ப நெருக்கடியில இருக்காராம். அதனால அவரு சென்னையிலேயே இருக்க வேண்டி இருக்காம். ஒருநாள் கூட விட்டுட்டு வர முடியாத நிலைமை. அதனால, எப்படியோ பணத்தை மட்டும் ஏற்பாடு செஞ்சு அனுப்பிட்டு 'எல்லாத்தையும் வழக்கம் போல சிறப்பாச் செய்யுங்க. என்னால வர முடிஞ்சா வந்து கலந்துக்கறேன்' னு சொல்லிட்டாரு. ஆனா அவரால வர முடியல."

"இந்தத் திருவிழாவுக்கு நிறைய செலவாகி இருக்குமே! அவ்வளவு பணக் கஷ்டத்திலேயும் இந்தத் திருவிழாவுக்கான செலவை ஏத்துக்கிட்டிருக்காரே, பெரிய விஷயம்தான்."

"அவர் நிலைமை தெரிஞ்சு 'இந்த வருஷம் நாங்க யாராவது பாத்துக்கறோம். அடுத்த வருஷத்திலேந்து பழையபடி நீங்களே நடத்தலாம்'னு ஊர்ல சில பேர் அவர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதுக்கு அவரு 'இல்லை. இந்த விழாவை நடத்தறது எங்க குடும்பத்துக்குக் காலம் காலமா இருந்துக்கிட்டு வர பெருமை. என் குடிப் பெருமையை நான் காப்பாத்த வேண்டாமா? எனக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் நான் உயிரோட இருக்கற வரை இந்தத் திருவிழாவை எப்படியோ நடத்திடறேன்னு சொன்னாராம்" என்றார் பசுபதி.

"இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலேயும் தன் குடும்பத்தோட பெருமையைக் காப்பாத்தணும்னு நினைக்கிறது பெரிய விஷயம்தான். எத்தனை பேர் இப்படி இருப்பாங்க?" என்றார் 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல்வகை

குறள் 1021:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

பொருள்: 
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...