Friday, November 10, 2023

1019. இரண்டாவது தவறு

கட்சியின் பெண் நிர்வாகி ஒருவருடன் நவநீதன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருந்ததைக் காட்டிய அந்தக் காணொளி சமூகத் தளங்களில் பரவியதும் பல்வேறு தரப்பினரிடையேயும் அது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியது.

"இவனோட அப்பா ஒரு ஒழுக்கமான மனுஷர். அவர் பணக்காரரோ, பெரிய பதவியில இருந்தவரோ இல்ல. ஆனா, அவரோட, நேர்மை, நல்லொழுக்கம், பண்பான நடத்தை இதுக்காகவெல்லாம் அவரை ஊர்ல எல்லாரும் மதிச்சாங்க. அவருக்குப் பிள்ளையாப் பிறந்தவன் இப்படியா நடந்துப்பான்?" என்பது பலரின் விமரிசனமாக இருந்தது.

"அது ஒரு போலியான காணொளி," "அது மார்ஃபிங் செய்யப்பட்டது," "அதில் இருப்பது நான் இல்லை" போன்ற நவநீதனின் விளக்கங்களை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

கட்சித் தலைமையின் அறிவுரைப்படி சில மாதங்கள் எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தான் நவநீதன்.

ஆயினும் சில மாதங்களுக்குப் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில் நவநீதன் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டான்.

"ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கே. என்ன விஷயம்?" என்றான் நவநீதனின் நண்பன் செல்வம்.

நண்பனின் பேச்சில் எப்போதும் இருக்கும் நட்புணர்வு இல்லை என்பதை கவனித்த நவநீதன், "சாரி! அரசியல்ல ஈடுபட்டப்புறம் உன்னை மாதிரி நல்ல நண்பர்களோட தொடர்பு விட்டுப் போயிடுச்சு. என்னோட தப்புதான். மன்னிச்சுடு" என்றான்.

"இப்ப நீ அரசியல்ல இருக்கியா, இல்லையா?"

"தேர்தல்ல நான் தோத்தப்புறம் கட்சித் தலைமை என்னை ஒதுக்கிடுச்சு. அரசியல்ல இனிமே எனக்கு எதிர்காலம் கிடையாதுன்னு நினைக்கிறேன்."

"பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தியே, இனிமே அதில கவனம் செலுத்து."

"இல்லைடா. நான் பண்ணின தப்பால என் பிசினசும் போயிடுச்சு. பழைய வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னைப் பார்க்கக் கூட மாட்டேங்கறாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!"

"பணம் ஏதாவது சேத்து வச்சிருக்கியா?"

"சேர்த்து வச்சிருந்த பணத்தை எல்லாம் தேர்தல்ல எனக்கு சீட் வாங்கவும், தேர்தல் பிரசாரத்துக்காகவும் செலவழிச்சேன். இப்ப எல்லாம் போச்சு. நான் பண்ணின தப்பு இந்த அளவுக்கு என் வாழ்க்கையைச் சீரழிக்கும்னு நினைக்கல."

"எந்தத் தப்பு?"

"என்னடா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேக்கற?"

"நீ பண்ணினது ரெண்டு தப்பு. அதனாலதான் இந்த பாதிப்புக்குக் காரணம் எந்தத் தப்புன்னு கேட்டேன்! முதல் தப்பு அந்தப் பெண்ணோட உறவு வச்சுக்கிட்டது. அந்தத் தப்பால உன் பேர் மட்டும்தான் கெட்டுப் போச்சு. அப்பவே நீ ஒதுங்கிப் போயிருந்தேன்னா உனக்கு இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. உன் ரெண்டாவது தப்புதான் உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம்?"

"ரெண்டாவது தப்புன்னு எதைச் சொல்ற? தேர்தல்ல நின்னதையா"

"ஆமாம். தப்புப் பண்ணிட்டு முதல்ல நீ ஒதுங்கி இருந்த. ஆனா நீ தேர்தல்ல நின்னது தப்பு செஞ்சதைப் பத்தி உனக்கு அவமான உணர்ச்சியே இல்லைங்கற எண்ணத்தை எல்லார் மனசிலேயும் உருவாக்கிடுச்சு. நீ தேர்தல்ல தோத்ததுக்கு அதுதான் காரணம், உன் பிசினஸ் வாடிக்கையாளர்கள் உன்னை விட்டு விலகிப் போனதுக்கும் அதுதான் காரணம்" என்றான் செல்வம்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

பொருள்: 
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...