Sunday, November 5, 2023

1017. வேலை போய் விடுமோ?

தான் எப்போதோ ஒருமுறை ஒரு திருமணத்தில் சந்தித்த தனது தூரத்து உறவினர் கோவர்த்தனன் தன் வீட்டுக்கு வந்தது பகீரதனுக்கு வியப்பாக இருந்தது.

ஒரு வேலை விஷயமாக அந்தப் பகுதிக்கு வந்ததாகவும், பகீரதன் அங்கே இருப்பதால் அவனைப் பார்க்கலாம் என்று எண்ணி ஒரு உறவினரிடம் அவன் விலாசத்தை வாங்கிக் கொண்டு அவனைப் பார்க்க வந்ததாகவும் கூறினார் கோவர்த்தனன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பிறகு, பகீரதனின் வேலையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் கோவர்த்தனன்

"இருபது வருஷமா இந்த நிறுவனத்தில வேலை செய்யறீங்க. உங்க முதலாளிக்கு நீங்க நெருக்கமானவரு அப்படித்தானே?" என்றார் அவர்.

"இருபது வருஷமா வேலை செய்யறேன். உண்மையா உழைக்கிறேன். அதனால அவரு என் மேல நம்பிக்கை வச்சிருக்காரு. நெருக்கமானவர்னு சொல்ல முடியாது" என்றான் பகீரதன்.

"அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்க உங்க முதலாளிக்கு நெருக்கமானவரா இருப்பீங்களோன்னு நினைச்சேன்!"

"நல்லதாப் போச்சுன்னு ஏன் சொல்றீங்க? நெருக்கமா இருந்தா தப்பா என்ன?" என்றான் பகீரதன்.

"நீங்க அவருக்கு நெருக்கமானவரா இருந்தா நான் சொல்லப் போறதைக் கேட்க உங்களுக்கு சங்கடமா இருக்கலாம்!" என்று பீடிகை போட்டார் கோவர்த்தனன்.

"என்ன சொல்லப் போறீங்க?"

நான் வெளிப்படையாச் சொல்லிடறேன். நான் ஒரு தொழில் ஆலோசசகர். என்னோட ஸ்பெஷலைசேஷன் பிசினஸ் இன்டலிஜன்ஸ். கம்பெனிகளுக்கு மார்க்கெட் பத்தியும், அவங்களோட போட்டியாளர்கள் பற்றியும் விவரம் சேகரிச்சுக் கொடுப்பேன்" என்றார் கோவர்த்தனன்.

அவர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று அறிய விரும்பி பகீரதன் மௌனமாக இருந்தான்.

"நான் இப்ப சந்தோஷ் இண்டஸ்ட்ரீசுக்கு ஆலோசகரா இருக்கேன்!" என்றார்.

"அவங்க எங்க போட்டியாளராச்சே!" என்றான் பகீரதன்.

"ஆமாம். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அவங்க ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டிருக்காங்க. உங்க வாடிக்கையாளர்கள் சில பேர் அவங்களுக்கு மாறிட்டாங்க" என்றார் கோவர்த்தனன்.

"சார்! நீங்க நான் வேலை செய்யற நிறுவனத்தோட போட்டி நிறுவனத்தோட ஆலோசகர். அதனால இதைப் பத்தி நாம பேச வேண்டாமே! வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க!" என்றான் பகீரதன் சற்றே கடுமையான குரலில்.

"இருங்க. நான் சொல்லி முடிச்சுடறேன். சந்தோஷ் இண்டஸ்டிரீசோட போட்டியைச் சமாளிக்க முடியாம உங்க கம்பெனி திணறிக்கிட்டிருக்கிறது உங்களுக்குத் தெரியும். உங்க கம்பெனியால ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியாது. எப்படியும் ரெண்டு மூணு வருஷத்தில உங்க கம்பெனியை மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்ப உங்களுக்கு வேலை போயிடும். அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிச்சீங்களா?"

"அந்த நிலைமை வந்தா நான் சமாளிச்சுக்கறேன். நீங்க வேற ஏதவது விஷயத்தைப் பத்திப் பேசறதுன்னா பேசுங்க. இல்லாட்டா..."

"கிளம்புங்கங்கறீங்க! கிளம்பத்தான் போறேன். உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுத்துட்டுக் கிளம்பறேன். உங்க கம்பெனி பத்தி சில விவரங்கள் சந்தோஷ் இண்டஸ்டிரீசுக்கு வேணும். அந்த விவரங்களை நீங்க என் மூலமா கொடுத்தா போதும். இன்னும் ஆறு மாசத்தில சந்தோஷ் இண்ஸ்ட்ரீஸ்ல உங்களை ஒரு உயர்ந்த பதவியில நீங்க இப்ப வாங்கற சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு சம்பளம் கொடுத்து வேலையில எடுத்துப் பாங்க. இந்த ஆறு மாசத்திலேயும் நீங்க கொடுக்கற தகவல்களுக்காக உங்களுக்குத் தனியாப் பணம் வாங்கிக் கொடுத்துடறேன். எல்லாம் என் மூலமா நடக்கறதால உங்க மேல யாருக்கும் சந்தேகம் வராது. என்ன சொல்றீங்க?" என்றார் கோவர்த்தன்ன்.

"வீட்டுக்கு வந்த விருந்தாளியை மதிக்கணுங்கறதுக்காக இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன். தயவு செஞ்சு கிளம்புங்க,. இனிமே இங்கே வராதீங்க!" என்றான் பகீரதன் கோபத்தை அடக்கிக் கொண்டு.

"உங்க கம்பெனியை மூடப் போறது நிச்சயம். அப்புறம் உங்க குடும்பத்தை எப்படிக் காப்பாத்துவீங்கன்னு யோசிச்சுப் பாருங்க!" என்று கூறியபடியே எழுந்தார் கோவர்த்தனன்.

"நீங்க சொல்றபடியே என் கம்பெனியை மூடி, எனக்கு வேலை போய், நாங்க எல்லாரும் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. நீங்க சொல்ற மானங்கெட்ட வேலையை நான் எப்பவும் செய்ய மாட்டேன். கழுத்தைப் புடிச்சுத் தள்றதுக்கு முன்னால நீங்களே வெளியிலே போயிடுங்க!" என்றான் பகீரதன் கோபத்துடன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

பொருள்: 
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...