Saturday, November 4, 2023

1015. சாரதி சொன்ன கதை

"நம்ம கம்பெனியில அதிகாரிகளுக்கெல்லாம் ஏதாவது பார்ட்டி இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா நம்மை மாதிரி கீழ்நிலை ஊழியர்களுக்கு அது மாதிரி வாய்ப்பு கிடைக்கறதில்லை. அதனால, நாம அஞ்சாறு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஹோட்டல்ல ஒரு பார்ட்டி வச்சுப்போம்" என்று அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சொன்ன யோசனையின்படி, சில வருடங்களாக அது போன்ற ஒரு பார்ட்டி நடந்து வந்தது.

அப்படி நடந்த ஒரு பார்ட்டிதான் அது.

"என்ன சார்! நாங்க சின்னப் பசங்க எல்லாம் ஜாலியாப் பேசிக்கிட்டிருக்கோம். உங்களை மாதிரி சீனியர்கள் எல்லாம் அமைதியா இருக்கீங்களே!" என்றான் நிதீஷ்.

"நாங்க பேசற பழங்கதை எல்லாம் உங்களுக்குப் பிடிக்காதே!" என்ற சாரதி, "பல வருஷங்களுக்கு முன்னால நம்ம ஆஃபீஸ்ல நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை சொல்றேன்!" என்றார் தொடர்ந்து.

"சொல்லுங்க சார்!" என்று இளைஞர்கள் உற்சாகப்படுத்த, சாரதி சொல்ல ஆரம்பித்தார்.

"நான், சுகுமாரன், கமலக்கண்ணன் எல்லாம் வேலைக்குச் சேர்ந்த புதுசு அது. அப்ப வேலையில இருந்த பல பேர் இப்ப ரிடயர் ஆயிட்டாங்க. நாங்க மூணு பேர்தான் இருக்கோம், ஹேமான்னு ஒரு பொண்ணு பிராஞ்ச் மானேஜரோட செகரட்டரியா இருந்தா.

"இப்ப எதுக்கு அது?" என்றார் சுகுமாரன். ஆனால் சாரதி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

"பிராஞ்ச் மானேஜருக்கு ஹேமா மேல ஒரு கண்ணு. அவளை அடிக்கடி தன்னோட ரூமுக்குக் கூப்பிட்டு ரொம்ப நேரம் லெட்டர் டிக்டேட் பண்ணுவாரு. அவ்வளவு நேரம் லெட்டர் டிக்டேட் பண்றதுக்கு எதுவும் இல்ல. தான் லெட்டர் டிக்டேட் பண்றப்ப தன் ரூம் பக்கமே யாரும் வரக் கூடாதுன்னு பியூன்கிட்ட ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. அதனால அவர் லெட்டர்தான் டிக்டேட் பண்ணினாராங்கறதை நீங்களே தீர்மானிச்சுக்கலாம்!"

சாரதி கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரிக்க, இளைஞர்கள் உற்சாகத்துடன் சிரித்தபடியே, தொடர்ந்து கேட்க ஆவலாக இருந்தனர்.

"ஆனா அந்த ஹேமாவுக்கு எங்களோட வேலை செஞ்சுக்கிட்டிருந்த கார்த்திக் மேல காதல். ஹேமா மானேஜர் அறையில இல்லாதப்பல்லாம், அவளும் கார்த்திக்கும் ஒண்ணா உக்காந்து சிரிச்சுப் பேசிக்கிட்டிருப்பாங்க."

"அப்புறம் எப்ப சார் லெட்டர் எல்லாம் டைப் பண்ணுவாங்க?" என்று ஒருவன் கேட்க, கொல்லென்று சிரிப்பு எழுந்தது.

"மானேஜர் ரூமுக்குள்ள ஹேமா மணிக்கணக்கா இருந்தாலும், ஒரு நாளைக்கு நாலைஞ்சு லெட்டருக்கு மேல அவ டைப் பண்ண வேண்டி இருக்காது. அது அரைமணி நேர வேலைதான். இதிலேந்தே மானேஜர் அவளுக்கு எவ்வளவு லெட்டர்கள் டிக்டேட் பண்ணி இருப்பார்னு தெரிஞ்சுக்கலாம்!" என்று சாரதி சொல்ல, மீண்டும் சிரிப்பு எழுந்தது.

"சொல்லுங்க சார்!" என்றான் ஒரு இளைஞன் கதை கேட்கும் ஆவலில்.

"ஹேமாவும் கார்த்திக்கும் காதலிச்சது மானேஜருக்குத் தெரிய வந்ததா சார்?" என்றான் மற்றொருவன்.

"அதுக்குத்தானே வரேன், கிளைமாக்சே அதுதானே!" என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் சாரதி.

"ஒருநாள் மானேஜர் எதுக்கோ ரிகார்ட் ரூமுக்குள்ள போயிருக்காரு. அந்த ரூம் ரொம்ப இருட்டா இருக்கும். அவர் லைட்டை ஆன் பண்ணி இருக்காரு. அங்கே ஹேமாவும், கார்த்திக்கும் கட்டிப் புடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. மானேஜர் உடனே 'எல்லாரும் வாங்க' ன்னு கூச்சல் போட எல்லாரும் ஓடிப் போய்ப் பார்த்தோம்.

"அங்கே ஹேமாவும், கார்த்திக்கும் அரைகுறை ஆடையோட நின்னுக்கிட்டிருந்தாங்க. எல்லாரும் பதறிப் போய் உடனே அங்கே ஓடிப் போனதால அவங்க ரெண்டு பேருக்கும் தங்களோட உடைகளைச் சரிபண்ணிக்கக் கூட நேரம் இல்லை."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? மானேஜர் கார்த்திக்கை வேலையை விட்டு அனுப்பிட்டாரு. ஹேமா அதுக்கப்புறம் ஆஃபீசுக்கே வரலை. தபாலிலேயே ராஜினாமாக் கடிதத்தை அனுப்பிட்டா!"

"அடப்பாவமே!" என்றான் ஒருவன் பரிதாபத்துடன்.

"என்ன சாரதி இது? கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம இந்தக் கதையை எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்கே?" என்றார் சுகுமாரன் கோபத்துடன்.

"இதில எனக்கென்ன கூச்சம்? நானா தப்பு பண்ணினேன்?" என்றார் சாரதி.

"அன்னிக்கு அந்த சம்பவத்தைப் பார்த்தப்ப எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா? நம்மோட வேலை செய்யற ஒத்தன் இப்படிப் பண்ணிட்டானே நினைச்சு நான் பல நாள் அவமானமா உணர்ந்திருக்கேன். இவ்வளவு வருஷம் கழிச்சு இதை நீ ஞாபகப்படுத்தச்சே, இப்பவும் நான் அவமானமா உணரறேன். நீ ஏதோ இதை ஒரு பெருமை மாதிரி எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்க! சாரி, நான் கிளம்பறேன். இந்த மனநிலையில என்னால இங்க தொடர்ந்து இருக்க முடியாது" என்று எல்லோரையும் பார்த்துக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார் சுகுமாரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

பொருள்: 
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...