Thursday, November 2, 2023

1014. நண்பர் வாங்கிய கடன்

புண்யமூர்த்தி வார்த்தை கொடுத்தால் தவற மாட்டார் என்பது அந்த ஊர் மக்களின் உறுதியான நம்பிக்கை.

யாராவது அவரிடம் உதவி கேட்டு, அவர் செய்கிறேன் என்று சொல்லி விட்டால், அதை எப்படியாவது செய்து விடுவார்.

ஒருமுறை அந்த ஊர் துவக்கப் பள்ளியின் கட்டிடம் பழையதாகி விட்டதால் புதிதாகக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஊரில் யாரும் அதற்குப் பொருளுதவி செய்ய முன்வராதபோது, புண்யமூர்த்தி புதிய கட்டிடத்துக்கான முழுச் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

புண்யமூர்த்தி ஓரளவுக்கு வசதி படைத்தவர்தான் என்றாலும் பெரிய செல்வந்தர் அல்ல. ஒரு நல்லெண்ணத்தில்தான் அவர் வ்வாறு அறிவித்தார். பள்ளிக் கட்டிடத்துக்கான செலவு அவர் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக கி விட்டது. ஆயினும் தான் ஒப்புக் கொண்டபடி கட்டிடத்துக்கான முழுச் செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இதனால் அவர் குடும்பத்தினர் அவர் மீது மிகவும் கோபமடைந்ததாக ஊரில் பேசிக் கொண்டனர்.

'நம்ம பையங்க ரெண்டு பேரும் படிச்சு வேலைக்குப் போயிட்டாங்க. அவங்க வெளியூர்ல இருக்காங்க. அவங்க குழந்தைங்க யாரும் இந்தப் பள்ளிக்கூடத்தில வந்து படிக்கப் போறதில்ல. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?" என்று அவர் மனைவி அவரைக் கடிந்து கொண்டாள்.

இதன் விளைவாகவோ என்னவோ, புண்யமூர்த்தியின் சொத்துக்களை அவர் மகன்கள் தங்கள் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டு விட்டனர்.

"உங்களுக்கு இருக்க வீடு இருக்கு. உங்க ரெண்டு பேர் செலவுக்கு நாங்க பணம் கொடுக்கறோம். வேற எந்தச் செலவு வந்தாலும் நாங்க பாத்துக்கறோம்" என்று அவரது இரண்டு மகன்களும் அவருக்கும், அவர் மனைவிக்கும் உறுதி அளித்தனர்.

ந்த ஊரில் இருந்த கோவிந்தசாமி என்ற செல்வந்தர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அவர் சண்முகம் என்ற ஒரு சிறு வியாபாரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். சண்முகம் புண்யமூர்த்தியின் நண்பர் என்பதால் புண்யமூர்த்தி அந்தக் கடனுக்கு உத்தவாதம் அளித்துக் கையெழுத்திடிருந்தார்.

சண்முகத்துக்கு வியபாரத்துக்காகத் தொடர்ந்து பணம் வேண்டி இருந்ததால் அவர் அசலைத் திருப்பிக் கட்டாமல் மாதாமாதம் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருந்தார். மாதாமாதம் வட்டி வந்து கொண்டிருந்ததால் கோவிந்தசாமியும் அசலைத் திருப்பிக் கேட்கவில்லை. இது பல வருடங்களாக நடந்து வந்தது. 

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சண்முகத்திடம் கோவிந்தசாமி புதிதாகக் கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்வார். அதில் புண்யமூர்த்தியின் கையெழுத்தையும் அவர் தவறாமல் வாங்கிக் கொள்வார்.

திடீரென்று சண்முகம் இறந்து விட்டார். அவர் பணமோ, சொத்தோ சேர்த்து வைக்கவில்லை. அதனால் கோவிந்தசாமியிடம் அவர் வாங்கிய கடனைத் தங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது என்று சண்முகத்தின் மனைவி கைவிரித்து விட, கோவிந்தசாமி புண்யமூர்த்தியை அணுகினார்.

புண்யமூர்த்தியிடம் பணம் இல்லை.  அவர் பணத்தையே கையாள முடியாதபடியான ஒரு ஏற்பாட்டை அவருடைய மகன்கள் செய்திருந்தனர்.

"என்னிடம் பணம் இல்லை. என் மகன்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றார் புண்யமூர்த்தி.

யாரோ வாங்கிய கடனை நாம் ஏன் செலுத்த வேண்டும் என்று கூறி அவருடைய மகன்கள் அவருக்குப் பணம்  மறுத்து விட்டனர்.

"நீ ஒரு பெரிய மனுஷன்னு நினைச்சு உன்னை நம்பித்தானே ஐயா அந்த சண்முகத்துக்குக் கடன் கொடுத்தேன்? இப்படி ஏமாத்திட்டியே!  நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா?" என்று புண்யமூர்த்தியின் வீட்டு வாசலில் நின்று கத்தி விட்டுப் போனார் கோவிந்தசாமி. 

சொத்து எதுவும் இல்லாத புண்யமூர்த்தியிடமிருந்து தன் கடனைவசூலிக்க முடியாது என்பது கோவிந்தசாமிக்குப் புரிந்து விட்டதால் பலர் காதுகளிலும் விழும்படி புண்யமூர்த்தியை அவமானமாகப்  தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார் அவர்.

"புண்யமூர்த்தி இப்பல்லாம் வீட்டை விட்டு வெளியிலேயே வரதில்லையாமே!"

"எப்படி வருவாரு? ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டுட்டு கடனைக் கட்ட முடியலியேங்கற கூச்சம் அவருக்கு!"

"கடன் வாங்கினவரு யாரோ ஒத்தரு. இவரு பாவம் நண்பர்ங்கறதுக்காக ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டாரு. சண்முகம் உயிரோட இருந்திருந்தா கடனைக் கட்டி இருப்பாரு. இதுவரைக்கும் கோவிந்தசாமிக்கு அசலைப் போல ரெண்டு பங்கு வட்டி வந்திருக்கும். அதனால அவருக்கு ஒண்ணும் பெரிய நஷ்டம்னு சொல்ல முடியாது. ஆனா இந்த நல்ல மனுஷன் தான் ஏதோ தப்புப் பண்ணிடதா நினைச்சு வெளியில வரவே சங்கடப்படறாரு!"

"கடன் வாங்கினவங்களே பல பேரு கடனைத் திருப்பிக் கொடுக்கறதைப் பத்திக் கவலைப்படாம சுத்திக்கிட்டிருக்காங்க. இவரு என்னன்னா நண்பருக்காக ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டதால வந்த கடனைக் கட்ட முடியலியேன்னு அவமானப்பட்டுக்கிட்டிருக்காரு. இப்படியும் மனுஷங்க இருக்காங்க!" 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1014:
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

பொருள்: 
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...