கூட்டம் முடிந்ததும் சிற்றுண்டி அருந்த பக்கத்தில் இருந்த அறைக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் சிற்றுண்டித் தட்டை எடுத்துக் கொண்டு அங்கே போடப்பட்டிருந்த மேசைகள் ஒன்றின் அருகில் சென்று அமர்ந்தனர்
மணிகண்டன் இன்னொரு தொழிலதிபருக்கு அருகே அமரர்ந்து அவருடன் பேசத் தொடங்கினார்.
சபாபதி சற்றுத் தள்ளிப் போய் ஒரு இருக்கையில் அமர்ந்தான். அப்போதுதான் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த கலிவரதனை கவனித்தான். கலிவரதன் அவன் ஊர்க்காரன். இருவரும் சந்தித்துப் பல நாட்கள் ஆகி விட்டன. சபாபதி கலிவரதன் அருகில் போய் அமர்ந்து கொண்டு "ஹாய்!" என்றான்.
சிற்றுண்டிக்குப் பிறகு மணிகண்டனும், சபாபதியும் காரில் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
தான் நிர்வாக இயக்குனர், சபாபதி தனக்குக் கீழ் பணி புரியும் ஒரு சுருக்கெழுத்தாளன் என்ற உணர்வு இல்லாமல் சபாபதியிடம் ஒரு நண்பனைப் போல் பேசும் இயல்புடையவர் மணிகண்டன்.
"என்ன சபாபதி, ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றார் மணிகண்டன்.
"ஒண்ணுமில்லை சார்!" என்றான் சபாபதி.
"நீ உக்காந்திருந்த இடத்தை விட்டு இன்னொத்தர் பக்கத்தில போய் உட்காருவதைப் பார்த்தேன். அவர் உனக்குத் தெரிஞ்சவரா?"
"ஆமாம் சார். எங்க ஊர்க்காரன்."
"நீ ஏதோ சொன்னதும் அவரு ஏன் கோவிச்சுக்கிட்ட மாதிரி வேற இடத்தில போய் உக்காந்துக்கிட்டாரு?"
சபாபதி திடுக்கிட்டு, "நீங்க பார்த்தீங்களா சார்?" என்றான். பிறகு சற்றுத் தயங்கி விட்டு, "நான் அவன்கிட்ட பழையபடி பேசினது அவனுக்குப் பிடிக்கல போல இருக்கு!" என்றான்.
"பழையபடி பேசினதுன்னா?"
"அவன் பேரு கலிவரதன். ஊர்ல நாங்க அவனை 'காலிப்பயலே'ன்னுதான் கூப்பிடுவோம். அது மாதிரி அவன்கிட்ட போய், 'என்னடா காலிப்பயலே, எப்படி இருக்கே?' ன்னு கேட்டேன். அது அவனுக்குப் பிடிக்கல போல இருக்கு. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான். நான் சாரின்னு சொன்னேன். ஆனா அதை அவன் காதில போட்டுக்கல!"
"சின்ன வயசில விளையாட்டாப் பேசறது வேற. இங்கே பக்கத்தில இவ்வளவு பேர் இருக்கச்சே அவரை நீ அப்படிக் கூப்பிட்டது அவருக்குப் பிடிக்காம இருந்திருக்கலாம். ரொம்ப நெருங்கின நண்பர்களா இருந்தாலொழிய தனியே இருக்கும்போது கூட விளையாட்டுக்குக் கூட யாரையும் கேலியாப் பேசக் கூடாது. அதை அவங்க தப்பா எடுத்துக்கலாம் இல்லையா?"
"ஆமாம் சார். எனக்கு அப்புறம்தான் புரிஞ்சுது. அவன் 'சந்திரா டெக்ஸ்டைல்ஸ்'னு பேட்ஜ் போட்டிருந்தான். அவனை அவன் ஆஃபீஸ்ல போய்ப் பார்த்து அவங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கலாம்னு இருக்கேன்" என்றான் சபாபதி.
"தட் இஸ் தி ஸ்பிரிட்!" என்றார் மணிகண்டன்.
"நீங்க யாரோடயோ பேசிக்கிட்டிருந்தீங்களே, அவரு யாருசார்? உங்க நண்பரா?" என்றான் சபாபதி.
"நண்பர் இல்ல. எதிரி!" என்றார் மணிகண்டன் சிரித்தபடி.
"என்ன சார் சொல்றீங்க?"
"அவரு ரோகிணி இண்டஸ்டிரீஸோட எம் டி. நம்மோட முக்கியப் போட்டியாளர் அ வங்கதானே?"
"அப்புறம் ஏன் சார் அவர்கிட்ட போய்ப் பேசினீங்க?"
"எதிரியா இருந்தாலும் சௌக்கியமான்னு கேக்கலாம் இல்ல? கேக்கணும். அதுதான் பண்பாடு. அதனாலதான் அவர்கிட்ட போய்ப் பேசினேன்."
"அவரு உங்ககிட்ட எப்படி சார் பேசினாரு?"
"அவரு ரொம்ப இறுக்கமாத்தான் இருந்தாரு. உங்கிட்ட எனக்கென்ன பேச்சுங்கற மாதிரி முறைப்பாத்தான் இருந்தாரு. அதைப் பத்தி எனக்கென்ன கவலை? நான் அவர்கிட்ட பேசினது ஒரு கர்டிஸிக்காக. அவரு எங்கிட்ட பதில் பேசினாலும், பேசாட்டாலும் எனக்கு எதுவும் இல்லை!" என்றார் மணிகண்டன் சிரித்தபடி.
'நான் ஒரு நண்பனிடம் தவறாகப் பேசி அவனைக் கோபமூட்டி விட்டேன், இவரோ ஒரு எதிரியிடம் கூட நலம் விசாரித்து விட்டு , அவர் சரியாக பதில் பேசாததைக் கூடப் பொருட்படுத்தாமல் இருக்கிறாரே! இவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டான் சபாபதி.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
No comments:
Post a Comment