Wednesday, October 11, 2023

993. அதே முகம், அதே குணம் யாரிடம்?

முதுநிலைப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்கும் விடுதியில் அறைகள் ஒதுக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

"ஒரு அறையில ரெண்டு பேர் இருக்கணும். நீங்களே ரெண்டு பேரா சேர்ந்து வந்தீங்கன்னா ஒரே அறையை அலாட் பண்ணுவோம். இல்லேன்னா நாங்களா யாராவது ரெண்டு பேருக்கு ஒரே அறையை அலாட் பண்ணுவோம்" என்றார் அறைகள் ஒதுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஊழியர்.

பிரசாத் தன் அருகில் நின்றிருந்த ராஜேந்திரனிடம் திரும்பி, "என் பேர் பிரசாத். என்னோட ரூம்மேட்டா இருக்கீங்களா?" என்றான்.

ராஜேந்திரன் சற்றுத் தயங்கி விட்டு, "கொஞ்சம் இருங்க. சொல்றேன்!" என்று பிரசாத்திடம் கூறி விட்டு அங்கிருந்து அகன்றான்.

சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த ராஜேந்திரன், "சாரி. நானும் இன்னொருத்தரும் சேர்ந்து ஒரு அறையை எடுத்துக்கிட்டோம்!" என்றான்.

"பரவாயில்லை!" என்றான் பிரசாத் சிரித்தபடி..

வகுப்புகள் துவங்கிய சில வாரங்களில் பிரசாத்துக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

ஒருநாள் ராஜேந்திரன் பிரசாத்திடம், "நமக்கு ஹாஸ்டல்ல அறை ஒதுக்கறப்ப நாம ரெண்டு பேரும் ஒரு அறையை எடுத்துக்கலாமான்னு நீ கேட்டே! அப்ப நான் வேண்டாம்னுட்டேன். சாரி" என்றான்.

"அதனால என்ன? அப்ப, உனக்கு என்னை அறிமுகம் இல்லையே! நான் கேட்டதும் நீ ஒத்துக்கணும்னு அவசியம் இல்லையே! உனக்குத் தெரிஞ்ச ஒத்தனோட சேர்ந்து இருக்கலாம்னு நீ முடிவு செஞ்சிருக்கலாம்!" என்றான் பிரசாத்.

"இல்லை. என் ரூம்மேட்டா இருக்கற சேகரை எனக்கு முன்னால தெரியாது!"

"பின்னே எப்படி அவனைத் தேர்ந்தெடுத்தே?"

"பள்ளிக்கூடத்தில சந்திரன்னு எனக்கு ஒரு நெருங்கின நண்பன் இருந்தான். அவன் ரொம்ப கண்ணியமாவும், பண்போடயும் நடந்துப்பான். சேகருக்கு சந்திரனோட முக ஜாடை இருந்தது. அதனால அவன் சந்திரன் மாதிரியே இருப்பான்னு நினைச்சுத்தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன்."

"நீ எதிர்பார்த்த மாதிரிதானே அவன் இருக்கான்?"

"இல்லை. அதுக்கு எதிர்மறையா இருக்கான். முக ஜாடைதான் சந்திரன் மாதிரி இருக்கு. குணங்கள் எல்லாம் நேர்மாறா இருக்கு. கொஞ்சம் கூட கண்ணியமோ, பண்பாடோ இல்லாம நடந்துக்கறான். சேகருக்கு சந்திரனோட முக ஜாடை இருந்ததால, குணத்திலேயும் சேகர் சந்திரனோட ஒத்திருப்பான்னு நான் நினைச்சது தப்புன்னு இப்பப் புரியுது!" என்றான் ராஜேந்திரன்.

"முக ஜாடையை வச்சு மனுஷங்களை ஒப்பிடறதே தப்பு!" என்றான் பிரசாத்.

"ஏன் அப்படிச் சொல்ற?"

"இந்த முக ஜாடை, சாயல் இதெல்லாம் ஒவ்வொத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தோணும். இது சப்ஜெக்டிவ். உனக்கு மகாத்மா காந்தியோட முக ஜாடை இருக்கறதா எனக்குத் தோணுது! ஆனா மத்தவங்களுக்கு அப்படித் தோணாம இருக்கலாம். ஆனா எல்லா மனுஷங்ளுமே ஒரே மாதிரி உறுப்புகள் உள்ளவங்கதானே - கை, கால், கண், காது, மூக்குன்னு?"

"ஆமாம்."

"அந்த விதத்தில பார்த்தா எல்லா மனுஷங்களும் தோற்றத்தில ஒத்தவங்கதான். இப்ப உன்னையும், என்னையும் எடுத்துக்கிட்டா நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி உறுப்புகளைத்தான் கொண்டிருக்கோம். அதோட நம்ம ரெண்டு பேரோட குணங்களிலேயும் நிறைய ஒற்றுமை இருக்கு. அதனால நீயும் நானும் ஒத்த மனிதர்கள்னு சொல்லலாம். ஆனா உன் நண்பன் சந்திரனுக்கும், உன் ரூம்மேட் சேகருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருந்தாலும், குணங்களில் ஒற்றுமை இல்லையே! அதனால, அவங்க ரெண்டு பேரும் ஒத்த மனிதர்கள் இல்லை! சரியா?"

"சரிதான். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி குணங்கள் இருந்தால்தான் அவங்க ஒத்த மனிதர்கள்னு நீ சொல்றதை நான் ஏத்துக்கறேன். ஒத்த குணங்கள் இருக்கறவங்கதான் நண்பர்களாகவோ, நெருக்கமானவங்களாவோ இருக்காங்க. முக ஜாடையை வச்சு குணத்தைக் கணிக்க முயற்சி செஞ்சது என் தப்புதான்!" என்றான் ராஜேந்திரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்: 
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...