Thursday, October 5, 2023

987. ஒற்றுமையைக் குலைத்தவர்

"ராமருக்கு லட்சுமணர் மாதிரி இருந்த உங்க தம்பியை உங்களுக்கு எதிராத் தூண்டி விட்டு, உங்ககிட்டேந்து பிரிச்சவர்தானே அந்த சுந்தரமூர்த்தி?" என்றாள் வசுமதி.

நரேந்திரன் கண்களை மூடிக் கொண்டான். இப்படி ஒரு ஒற்றுமையான அண்ணன் தம்பியா என்று ஊரே வியக்கும் அளவுக்குத் தானும் தன் தம்பி சுரேந்திரனும் தங்கள் சொந்த ஊரில் வாழ்ந்த நாட்கள் அவன் நினைவுக்கு வந்தன.

திருமணத்துக்குப் பிறகும், சகோதரர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் தாய் காஞ்சனாவும் அவர்களுடன் இருந்தாள்.

"அண்ணன் தம்பி ஒற்றுமையா இருக்கலாம். ஆனா, அவங்களோட மனைவிகளும் ஒற்றுமையா இருக்கறது ஆச்சரியம்தான். அம்மா இருக்கறவரை ஒற்றுமையா இருப்பாங்க. அம்மா போனப்புறமும் ஒற்றுமை நீடிக்குதான்னு பார்க்கலாம்!" என்று ஊரில் சிலர் பேசிக் கொண்டனர்.

ஆனால் காஞ்சனா இறந்த பிறகும், அவர்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர் - சுந்தரமூர்த்தி அந்த ஊருக்கு வரும் வரை!

சுந்தரமூர்த்தி ரெவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை மாற்றல் பெற்று அந்த ஊருக்கு வந்தான்.

சுந்தரமூர்த்திக்கும், சுரேந்திரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

சுந்தரமூர்த்தியுடன் பழக ஆரம்பித்த சில மாதங்களில், சுரேந்திரனின் போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.

குடும்பச் சொத்துக்களிலிருந்து வரும் வருமானம் பற்றி நரேந்திரனிடம் கேள்விகள் கேட்டான் சுரேந்தரன்.

"நீ குத்தகைக்காரங்ககிட்ட கடுமையா இருக்கணும், அண்ணே! அவங்க உன்னை நல்லா ஏமாத்தறாங்க!" என்றான் சுரேந்திரன்.

"நம்ம அப்பா இருந்தபோது எப்படிக் கொடுத்தாங்களோ, அதே மாதிரிதான் கொடுத்துக்கிட்டிருக்காங்க" என்றான் நரேந்திரன்.

அதற்குப் பிறகு, நரேந்திரனிடம் வரவு செலவுகள் பற்றிக் கேட்க ஆரம்பித்தான் சுரேந்திரன்.

"நமக்கு வர வருமானத்தையும், செலவுகளையும் வச்சுப் பார்த்தா, நிறைய பணத்தை சேமிச்சிருக்கணுமே!" என்றான் சுரேந்திரன்.

நரேந்திரன் பொறுமையாக வரவு செலவுக் கணக்குகளை விளக்கிக் கூறினான்.

பிறகு ஒரு நாள் எல்லோரும் இருக்கும்போதே, சுரேந்திரன், தன் மனைவி ரம்யாவிடம், "வீட்டு வேலை எல்லாத்தையும் நீயே செய்யாதே! அண்ணியும் கொஞ்சம் செய்யட்டும்!" என்றான்.

"முக்காவாசி வேலையை அவங்கதான் செய்யறாங்க. என்னை அவங்க வேலை செய்யவே விடறதில்ல" என்றாள் ரம்யா.

"என்னங்க, உங்க தம்பி இப்படிச் சொல்றாரு, நான் ஏதோ ரம்யாவை நிறைய வேலை வாங்கற மாதிரி!" என்றாள் வசுமதி, நரேந்திரனிடம், அவர்கள் தனிமையில் இருந்தபோது.

"விடு. அதான் ரம்யாவே அவனுக்கு பதில் சொல்லிட்டாளே!" என்றான் நரேந்திரன்.

"ரம்யா கூட எங்கிட்ட வருத்தப்பட்டுப் பேசினா. 'அவருக்கு என்னவோ ஆயிடுச்சு, அக்கா. நீங்க வருத்தப்படாதீங்க' ன்னு சொன்னா. ஆனா, எங்கிட்ட இவ்வளவு அன்பா இருந்த உங்க தம்பி இப்படிப் பேசினதை என்னால பொறுத்துக்க முடியல!" என்றாள் வசுமதி.

சுந்தரமூர்த்தியின் தூண்டுதலால்தான் சுரேந்திரன் இப்படி நடந்து கொள்கிறான் என்று நரேந்திரனுக்குப் புரிந்தது. ஆனால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள், சுரேந்திரன் நரேந்திரனிடம் வந்து, "அண்ணே! நாம சொத்துக்களைப் பிரிச்சுக்கலாம். நாம இனிமே சேர்ந்து இருக்க வேண்டாம். இந்த வீட்டை நான் எடுத்துக்கறேன். நீ வேற வீட்டுக்குப் போயிடு!" என்றான்.

"இது உங்க பரம்பரை வீடு. உங்க அண்ணனுக்கும் இதில உரிமை இருக்கு!" என்றாள் வசுமதி, கோபத்துடன்.

"உங்களுக்கு உரிமை இல்லையில்லையே! நீங்க வெளியிலேந்து வந்தவங்கதானே! நாங்க பேசிக்கறோம். நீங்க ஒதுங்கி இருங்க!" என்றான் சுரேந்திரன்.

"என்னங்க இப்படிப் பேசறீங்க?" என்றாள் ரம்யா.

"நான் அண்ணிக்குச் சொன்னது உனக்கும் பொருந்தும். நீயும் வெளியிலேந்து வந்தவதானே!" என்று மனைவியை அடக்கினான் சுரேந்திரன்.

"சரி. பங்கு பிரிச்சுடலாம்!" என்றான் நரேந்தரன்.

சொத்துக்கள் பிரிக்கப்பட்டு, வீடு சுரேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது. நரேந்திரன் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

"அந்த சுந்தரமூர்த்திதானே உங்க தம்பியை உங்களுக்கு எதிராத் தூண்டி விட்டது? அவருக்கு இதனால என்ன லாபம்?" என்றாள் வசுமதி.

"சில பேர் அப்படித்தான் இருப்பாங்க" என்றான் நரேந்திரன், சுருக்கமாக.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நரேந்திரன் அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், தன் சொத்துக்களை விற்று விட்டு, வேறு ஊருக்குக் குடி போய், அங்கே ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கி நடத்தி வந்தான்.

சுரேந்திரன் பற்றியோ, சுந்தரமூர்த்தி பற்றியோ, அதற்குப் பிறகு அவனுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.

அதற்குப் பிறகு, இரு குடும்பங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, வசுமதி தற்செயலாக சுந்தரமூர்த்தியின் மனைவி  வள்ளியை வழியில் சந்தித்தபோது, அவர்கள் அந்த ஊரில்தான் இருப்பதாகவும், சுந்தரமூர்த்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வள்ளி தெரிவித்த விவரத்தைத் தன் கணவனிடம் தெரிவித்தபோதுதான், சுந்தரமூர்த்தி அவர்கள் குடும்பத்துக்குச் செய்த தீமையைக் குறிப்பிட்டுப் பேசினாள் வசுமதி.

"சுந்தரமூர்த்தி எப்படி இருக்காராம்?" என்றான் நரேந்திரன்.

"இன்னும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். 'ரொம்ப கஷ்டமா இருக்கு, ஆஸ்பத்திரிச் செலவுகளைச் சமாளிக்க முடியலே'ன்னு சொல்லி அழுதா வள்ளி."

"ஏன்? சுந்தரமூர்த்திதான் அரசாங்கத்தில வேலை பார்க்கறவராச்சே!"

"அஞ்சாறு வருஷம் முன்னால அவருக்கு வேலை போயிடுச்சாம். அதுக்கப்புறம், ரொம்பக் கஷ்டப்படறதா சொன்னா. எனக்கே அவளைப் பார்க்கப் பாவமாத்தான் இருந்தது!"

"எதனால வேலை போச்சாம்?"

"அதை அவ சொல்லல. நானும் கேக்கல. ஏதாவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டிருப்பாரு. காரணமே இல்லாம நம்ம குடும்பத்துக்குக் கெடுதல் செஞ்சவரு, வேலையில நேர்மையாவா இருந்திருப்பாரு?"

"எந்த ஆஸ்பத்திரின்னு சொன்னாங்க இல்ல? நான் அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று கிளம்பினான் நரேந்திரன்.

"எதுக்குங்க?"

"என்ன இருந்தாலும் தெரிஞ்சவர் இல்லையா?"

ருத்துவமனையிலிருந்து நரேந்திரன் திரும்பியதும், "சுந்தமூர்த்தியைப் பார்த்தீங்களா? எப்படி இருக்காரு?" என்றாள் வசுமதி.

"பார்த்தேன். பலவீனமாத்தான் இருக்காரு."

"உங்களைப் பார்த்ததும் ஏதாவது சொன்னாரா?"

"அடையாளம் தெரிஞ்சுக்கிட்டுத் தலையை ஆட்டினாரு. பலவீனமா இருந்ததால பேச முடியல" என்ற நரேந்திரன், தயங்கி விட்டு, "ஒரு விஷயம் நடந்தது" என்றான்.

"என்ன விஷயம்?"

"நர்ஸ் ஒரு பிரிஸ்கிரிப்ஷனைக் கொடுத்து, அதில எழுதியிருந்த மருந்தையெல்லாம் உடனே வாங்கணும்னாங்க. 'எங்கிட்ட பணம் இல்லையே! என்ன செய்யறது?'ன்னு வள்ளி 'ஓ'ன்னு அழுதாங்க. நான் என் கிரடிட் கார்டுல அந்த மருந்துகளை வாங்கிக் கொடுத்தேன். பத்தாயிரம் ரூபாய் ஆச்சு."

"நமக்குக் கெடுதல் செஞ்சவருக்கு நீங்க ஏன் உதவி செஞ்சீங்க?"

"அவர் நமக்குக் கெடுதல் செஞ்சிருக்கலாம். ஆனா, அவர் கஷ்டப்படும்போது அவருக்கு உதவி செய்யலேன்னா, நாம நம்மை நல்லவங்கன்னு நினைச்சுக்கறதில என்ன அர்த்தம் இருக்கு?" என்றான் நரேந்திரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)

குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

பொருள்: 
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யாவிட்டால் சான்றாண்மையினால் பயன்தான் என்ன?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...