நிர்வாக இயக்குனர் கண்ணன் ஒரு முறை புருவத்தை உயர்த்தி விட்டு, "டெண்டர்ல கலந்துக்க எல்லாருக்கும் உரிமை இருக்கே!" என்றார்.
"வழக்கமா இந்த டெண்டர் நமக்குத்தான் கிடைக்கும். இந்த முறை அது நமக்குக் கிடைக்காது, தனக்குத்தான் கிடைக்கப் போகுதுன்னு பல பேர்கிட்ட அவன் சொல்லிக்கிட்டிருக்கான்."
"அவன் யார்கிட்ட என்ன சொன்னா நமக்கு என்ன?"
"இல்லை, சார்! எனக்கே ஃபோன் பண்ணிச் சொன்னான்!" என்றார் பாலசந்திரன், தயக்கத்துடன்.
"என்ன சொன்னான்?"
"தலைகீழா நின்னாலும், இந்த வருஷம் உங்களுக்கு டெண்டர் கிடைக்காது, எனக்குத்தான் கிடைக்கும்னு சொன்னான். நம்ம கம்பெனியில வேலை செஞ்சுட்டு நமக்குப் போட்டியா தொழில் ஆரம்பிச்சதோட இல்லாம, அவன் இப்படி எல்லாம் பேசறதைக் கேக்க, எனக்கே ரொம்பக் கோபம் வருது. உங்களுக்கு எப்படி இருக்குமோன்னு நினைச்சுதான், உங்ககிட்ட இதைச் சொல்றதுக்குக் கூட யோசனை பண்ணினேன்."
"இது சீரியசான விஷயம்தான். இந்த டெண்டர்ல நமக்கு ஒரு தனி அட்வான்டேஜ் இருக்கு. அவன் இங்கே வேலை செஞ்சதால, நாம எப்படிக் கணக்குப் போட்டு டெண்டர் கோட் பண்றோம்கறது அவனுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கலாம். ஆனா, இதோட காஸ்டிங் ரொம்ப காம்ப்ளிகேடட். அதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. எந்த தைரியத்தில இப்படி சொல்றான்னு தெரியல. நாம இந்த சவாலை எதிர்கொள்ளத்தான் வேணும்!" என்றார் கண்ணன்.
ஒவ்வொரு வருஷமும் செய்வது போல், டெண்டர்கள் திறக்கப்படும் தினத்தன்று, குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குக் கண்ணனும், பாலசந்தரனும் சென்றிருந்தனர்.
டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பு, "சார்! அன்பரசன் வரல. அவனோட மானேஜரைத்தான் அனுப்பி இருக்கான். தனக்கு டெண்டர் கிடைக்காதுன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. சும்மா வாய்ச்சவடால்தான் விட்டிருக்கான்" என்று கண்ணனின் காதில் கிசுகிசுத்தார் பாலசந்திரன்.
ஆனால், டெண்டர் அன்பரசனின் நிறுவனத்துக்குத்தான் கிடைத்தது!
காரில் நிறுவனத்துக்குத் திரும்பும்போது, "சார்! இது எப்படி நடந்ததுன்னே தெரியலை. நம்மை விட ஆயிரம் ரூபா குறைவா கோட் பண்ணி டெண்டரை வாங்கிட்டான். நம்ம கம்பெனியிலிருந்து நாம எவ்வளவு கோட் பண்ணப் போறோங்கறதை யாரோ அவனுக்கு லீக் பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கறேன்" என்றார் பாலசந்திரன்.
"எப்படி இருந்தா என்ன? சவால் விட்டான். ஜெயிச்சுட்டான். தட்ஸ் வாட் கவுன்ட்ஸ்!" என்ற கண்ணன், சட்டென்று ஏதோ தோன்றியவராக, "உங்களுக்கு அன்பரசனோட கம்பெனி எங்கே இருக்குன்னு தெரியுமா?" என்றார்.
"தெரியும், சார். ஏன் கேக்கறீங்க?"
"காரை அங்கே விடச் சொல்லுங்க!"
"சார்! அவனோட ஆஃபீசுக்குப் போய் அவனோட சண்டை போட்டா நல்லா இருக்காது..." என்று ஆரம்பித்த பாலசந்திரன், கண்ணன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டதைக் கண்டதும், டிரைவரிடம் காரை அன்பரசனின் நிறுவனத்துக்கு விடச் சொன்னார்.
தன் முன்னாள் முதலாளி கண்ணனும், மானேஜர் பாலசந்திரனும் திடீரென்று தன் அறைக்குள் நுழைந்ததைக் கண்டு திகைத்த அன்பரசன், "வாங்க சார்!" என்றான், பலவீனமான குரலில்.
"கங்கிராசுலேஷன்ஸ், அன்பரசன்! சவால் விட்டபடி எங்களை ஜெயிச்சு டெண்டரை வாங்கிட்டியே! கிரேட் ஜாப்!" என்றபடி அன்பரசனின் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு, அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வெளியேறினார் கண்ணன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
No comments:
Post a Comment