இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இருவருமே துணை மேலாளர் பதவிக்கு உயர்ந்து விட்டனர்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் காலப்போக்கில் குறைந்து கொண்டு வந்து, ஒரு கட்டத்தில் பகைமை உணர்வாக மாறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முன்னுக்கு வருவதில் இருவருக்கும் இருந்த போட்டிதான்.
இருவரில், வேலாயுதம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர். அவருக்குக் கீழே பணி புரிந்தவர்கள் ஒருவித பய உணர்வுடனே பணியாற்றி வந்தனர்.
இதற்கு மாறாக, சிவபாலன் அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்பவர் என்று பெயர் பெற்றவர். தனக்குக் கீழே பணி புரிபவர்களுக்கு அவர் உத்தரவு போடும்போது கூட, அது வேண்டுகோள் விடுப்பது போல்தான் இருக்கும்.
"இவ்வளவு மென்மையா நடந்துக்கறவர் மானேஜரா இருக்கவே லாயக்கு இல்லாதவர். ஆனா எப்படியோ முன்னுக்கு வந்து, டி.ஜி.எம். லெவலுக்கு வந்துட்டாரு!" என்று வேலாயுதம் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறுவார்.
பொது மேலாளர் அழைத்ததால், அவர் அறைக்குச் சென்றார் வேலாயுதம்.
"மிஸ்டர் வேலாயுதம்! நான் இன்னும் ரெண்டு மாசத்தில ஓய்வு பெறப் போறேன். அதுக்கப்புறம், உங்க ரெண்டு பேர்ல ஒத்தரை என்னோட இடத்துக்குப் பரிந்துரை செய்யணும். யாரைப் பரிந்துரை செய்யணும்னு நீங்க நினைக்கறீங்க?" என்றார் பொது மேலாளர்.
"சார்! இந்த மாதிரி கேட்டா, யாருமே தன்னைத்தான் பரிந்துரை செய்யணும்னுதான் சொல்லுவாங்க! ஆனா நீங்க நடுநிலையில இருந்து யோசிச்சா, பொது மேலாளரா வரதுக்கு எனக்குத்தான் அதிகத் தகுதி இருக்குன்னு கருதுவீங்கன்னு நினைக்கறேன்!" என்றார் வேலாயுதம்.
"நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவர், உங்ககிட்ட வேலை செய்யறவங்க நீங்க சொல்றதைச் சரியா செஞ்சு முடிச்சுடுவாங்கன்னு உங்களுக்கு ஒரு இமேஜ் இருக்குங்கறது உண்மைதான். ஆனா பர்ஃபாமன்ஸ்னு பார்த்தா, சிவபாலனோட ரிகார்ட்தான் உங்களுடையதை விடச் சிறப்பா இருக்கு!"
"அப்படி இருக்கவே முடியாது, சார்!" என்றார் வேலாயுதம், அதிர்ச்சியுடன்.
"சீனியர் மானேஜ்மென்ட்ல இருக்கறவங்களோட பர்ஃபாமன்ஸை மதிப்பிடறப்ப, அவங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்களோட பர்ஃபாமன்ஸ், புரொடக்டிவிடி, மோடிவேஷனல் லெவல், எந்தூசியாஸம் எல்லாத்தையும் கணக்கில எடுத்துக்கிட்டுத்தான் மதிப்பீடு செய்வோம்ங்கறது உங்களுக்குத் தெரியும். அப்படிப் பாக்கறப்ப, சிவபாலன்கிட்ட வேலை செய்யறவங்களோட புரொடக்டிவிடி, மோடிவேஷனல் லெவல் எல்லாமே அதிகமா இருக்கு. உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க, உங்களுக்கு பயந்து வேலை செய்யறாங்க. ஆனா, அவங்ககிட்ட அதிக உற்சாகமோ, ஈடுபாடோ இல்ல. அதோட, அடுத்த பொது மேலாளரா யார் வரணும்னு ஒரு வாக்கெடுப்பு எடுத்துப் பார்த்தோம். சிவபாலனுக்குத்தான் அதிகம் பேர் ஓட்டுப் போட்டிருக்காங்க. உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்கள்ள கூட பல பேர் சிவபாலனுக்குத்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க!"
வேலாயுதம் அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியமல் பேசாமல் இருந்தார்.
"உங்ககிட்ட கேட்ட அதே கேள்வியை சிவபாலன்கிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா?"
வேலாயுதம் மௌனமாக இருந்தார்.
"நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஒரே லெவல்ல இருந்திருக்கோம். ரெண்டு ஜி.எம். போஸ்ட் இருந்தா நல்லா இருக்கும். ஆனா, நீங்க எப்படி முடிவு செஞ்சாலும் எனக்கு ஓகேதான்னு சொன்னார்."
"ஸோ நைஸ் ஆஃப் ஹிம்!" என்றார் வேலாயுதம், நெகிழ்ச்சியுடன்.
"நல்ல செய்தி என்னன்னா, அவர் யோசனைப்படி உங்க ரெண்டு பேரையுமே பொது மேலாளரா புரொமோட் பண்ணிடலாம்னு எம்.டி.கிட்ட ரெகமண்ட் பண்ணப் போறேன். அவர் இதுக்கு ஒத்துப்பார்னு நினைக்கறேன்!" என்றார் பொது மேலாளர், சிரித்தபடி.
"ரொம்ப நன்றி, சார்!" என்றார் வேலாயுதம், தழுதழுத்த குரலில்.
பொது மேலாளரின் அறையிலிருந்து வெளியே வந்த வேலாயுதம் நேரே சிவபாலனின் அறையை நோக்கிச் சென்றார் - அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, இத்தனை நாட்களாக எதிரியாக நினைத்த அவரை நண்பராக்கிக் கொள்ள!
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
No comments:
Post a Comment