"வரேன். ஆனா, நான் இப்ப சுத்த சைவம். அதனால ஒரு நல்ல வெஜிடேரியன் ஓட்டலுக்குப் போகலாம்" என்றான் சிவராமன்.
"எப்படிடா? கல்லூரியில படிக்கறப்ப, நீ அசைவ உணவை ரொம்ப விரும்பிச் சாப்பிடறவனா இருந்தியே!"
"இருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னால, எனக்கு வள்ளலார் மேல ஈடுபாடு ஏற்பட்டது. அவரைப் பத்தி நிறையப் படிச்சேன், அவரோட கொள்கைகளைப் பத்திப் பல அறிஞர்கள் பேசினதைக் கேட்டேன். உயிர்களைக் கொல்லக் கூடாதுங்கற அவர் கொள்கையை ஏத்துக்கிட்டு, அசைவத்தை விட்டுட்டேன்!"
"ரொம்ப விரும்பி சாப்பிட்ட உணவை அடியோட விடறதுன்னா, அதுக்கு நிறைய மனத்தென்பு வேணும். உனக்கு அது இருக்கறது பெரிய விஷயம்" என்றான் சாரதி.
"ஆரம்பத்தில கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, ஒவ்வொரு நாளும், விரதம் இருக்கற மாதிரி நினைச்சுக்கிட்டு, அசைவம் சாப்பிடாம இருந்தேன். இப்ப, அது இயல்பாயிடுச்சு" என்றான் சிவராமன்.
ஓட்டலில் உணவு அருந்தும்போது, இருவரும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சாரதி ஒரு பெரிய நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை செய்த பிறகு, அந்த வேலையை விட்டு விட்டு, இப்போது ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னான்.
"ஏன் அந்தப் பெரிய கம்பெனியை விட்டுட்டு, ஒரு சின்ன கம்பெனிக்கு வந்தே?" என்றான் சிவராமன்.
அந்தப் பெரிய நிறுவனத்தில் தான் நன்கு முன்னேறி வந்து கொண்டிருந்த நாட்கள் சாரதியின் நினைவில் வந்து போயின.
சாரதியைத் தனக்குப் போட்டியாக நினைத்த அவனுடைய சக ஊழியன் ஒருவன் திட்டம் போட்டு சாரதியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதும், அதன் விளைவாக அந்த நிறுவனத்திலிருந்து தான் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதும், அதற்குப் பிறகு பல மாதங்கள் வேறு வேலை கிடைக்காமல் தவித்ததும், பிறகு வேறு வழி இல்லாமல், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு சாதாரண வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதையும் நினைத்தபோது சாரதியின் மனம் கனத்தது.
ஆயினும், தன் சக ஊழியன் ஒருவன் தனக்குச் செய்த தீமையைப் பற்றித் தன் நண்பனிடம் ஏன் பேச வேண்டும் என்று நினைத்த சாரதி, "எனக்கு அங்கே ஒத்து வரலை" என்றான்.
"பல வருஷமா அங்கேதானே வேலை செஞ்சே! ஏன் திடீர்னு ஒத்து வரலை?"
"மேலதிகாரிகள் மாறும்போது, சில சமயம் அப்படிப்பட்ட நிலைமை உருவாகத்தான் செய்யும்!" என்ற சாரதி, "இந்த ஹோட்டல்ல எல்லாமே ரொம்ப நல்லா இருக்குல்ல?" என்று பேச்சை மாற்றினான்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
No comments:
Post a Comment