"உன்னையும் சேர்த்துத்தானே சொல்ற?" என்றார் மாணிக்கம்.
"என்னை மட்டும் இல்லை, உன்னையும் சேர்த்துத்தான்!" என்று பதிலளித்தார் சோமசேகர்.
"ரிடயர் ஆன காலத்தில, ஏதாவது ஜாலியாப் பேசிப் பொழுதைப் போக்கறதை விட்டு, இப்படியெல்லாம் பேசி, விரோதத்தை உண்டாப்பீங்க போல இருக்கே!" என்றார் குப்புசாமி.
"சரி. ஒரு விளையாட்டு. நாம அஞ்சு பேரு இருக்கோம். ஒவ்வொத்தரும் நம்ம அஞ்சு பேருக்கும் தெரிஞ்சவங்களுக்குள்ள ஒத்தரை நல்லவர்னு தேர்ந்தெடுக்கணும். அவர்கிட்ட ஏதாவது குற்றம் இருந்தா, மத்தவங்க சொல்லலாம். எல்லாருமே ஏத்துக்கக் கூடிய நல்லவர் ஒத்தராவது இருக்காரான்னு பார்க்கலாம். நாளைக்கு சாயந்திரம் நாம சந்திக்கறப்ப, ஒவ்வொத்தரும் ஒரு நல்லவரோட பேரைச் சொல்லணும். சரியா?" என்றார் மாணிக்கம்.
"என்னப்பா இது, ரிடயர் ஆனப்புறம் ஹாய்யா வீட்டில இருக்கலாம்னு பார்த்தா, ஹோம் ஒர்க் எல்லாம் கொடுத்துக் கஷ்டப்படுத்தற!" என்றார் செந்தில்வேல்.
மறுநாள் ஐந்து பேரும் சந்தித்தபோது, "எல்லாரும் ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க இல்ல? ஒவ்வொத்தரா, தேர்ந்தெடுத்த பேரைச் சொல்லுங்க!" என்றார் மாணிக்கம்.
"நீதானப்பா இந்த ஐடியாவைக் கொடுத்தது? நீயே ஆரம்பி!" என்றார் கேசவன்.
"சரி, சொல்றேன். அருள்!" என்றார் மாணிக்கம்.
"அருள் ஓரளவுக்கு நல்லவர்தான். ஆனா, அவர் பேர்லதான் அருள் இருக்கே தவிர, அவருக்கு மத்தவங்க மேல அன்பே கிடையாது. தன் குடும்பம் மட்டும்தான் முக்கியம் அவருக்கு. சுயநலம் பிடிச்சவர்" என்றார் சோமசேகர்.
"சரி. அடுத்த பேரை நான் சொல்றேன். நாதன்!" என்றார் கேசவன்.
"நாதனா? அவர் வேலை செஞ்ச கம்பெனியில அவர் பண்ணின மோசடி பத்தித் தெரியாதா உனக்கு? அதுக்காக அவரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. வேலை போனப்புறம், கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம, மத்தவங்களுக்கு சேவை செய்யற மாதிரி வேஷம் போட்டுக்கிட்டிருக்காரு. பொண்டாட்டி சம்பளத்தில குடும்பம் ஓடுது!" என்ற குப்புசாமி, "நான் சொல்ற பேரை எல்லாரும் ஒத்துப்பீங்கன்னு நினைக்கறேன். முத்து!" என்றார்.
"முத்துவா? அவர் சாலையில வண்டி ஓட்டறப்ப, சிக்னலைக் கூட மதிக்க மாட்டாரு. எந்த ஒரு சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்க மாட்டாரு. அவரை எப்படி நல்லவர்னு சொல்ற?" என்றார் மாணிக்கம்.
"மூணு பேர் அவுட்டு. நான் சொல்ற பேரை எல்லாரும் ஒத்துப்பீங்கன்னு நினைக்கறேன். ராஜா!" என்றார் செந்தில்வேல்.
"கொஞ்சம் கூட இரக்கமோ, பரிவோ இல்லாத மனுஷன். பட்டினியாக் கிடக்கறனுக்குக் கூட பத்து பைசா கொடுக்க மாட்டாரு. 'மத்தவங்களுக்கு இரக்கப்பட்டா, நான் ஓட்டாண்டி ஆக வேண்டியதுதான்'னு எங்கிட்ட ஒரு தடவை சொன்னாரு. அவரை எப்படி நல்லவர்னு ஏத்துக்க முடியும்?" என்றார் கேசவன்.
"சோமசேகர், நீதான் பாக்கி!" என்றார் குப்புசாமி.
"முருகப்பன்!" என்றார் சோமசேகர்.
மற்ற நால்வரும் மௌனமாக இருந்தனர்.
"மத்த நாலு பேரைப் பத்தியும் நீங்க சொன்ன குறைகள் முருகப்பன்கிட்ட இல்லை. அவர் எல்லார்கிட்டேயும் அன்பா இருப்பாரு. தெரியாம ஒரு சின்ன தப்பு பண்ணிட்டாக் கூட, அதுக்காக அவமானமா உணர்வாரு. முறைப்படி நடந்துப்பாரு. விதிகளை மட்டும் இல்லாம, மரபுகளையும் மதிச்சு நடந்துப்பாரு. எல்லார்கிட்டயும் பரிவோடயும் அன்போடயும் நடந்துப்பாரு. இந்த நாலு விஷயங்களைத் தவிர, அஞ்சாவதா ஒரு நல்ல குணமும் அவர்கிட்ட இருக்கு" என்றார் சோமசேகர்.
"என்ன அது?" என்றார் செந்தில்வேல்.
"உண்மை பேசற குணம். எப்பவும், எதுக்காகவும் பொய் சொல்ல மாட்டாரு!"
"நீ ஜெயிச்சுட்ட சோமசேகர். ஒரு சிறந்த மனுஷனை அடையாளம் கண்டுட்ட!" என்றார் குப்புசாமி.
"நான் ஒத்துக்க மாட்டேன்!" என்றார் மாணிக்கம்.
"ஏன் ஒத்துக்க மாட்ட?" என்றார் கேசவன்.
"சோமசேகர் நேத்திக்கு என்ன சொன்னாரு? உலகத்தில நல்லவங்களே யாரும் கிடையாதுன்னாரு. இன்னிக்கு அவரே ஒரு நல்லவரை அடையாளம் காட்டி இருக்காரு. அதனால, அவர் நேத்திக்கு சொன்னது தப்புன்னு ஆயிடுச்சு இல்ல? அப்ப அவர் தோத்துட்டாருன்னுதானே அர்த்தம்?" என்றார் மாணிக்கம்.
ஐவரும் சேர்ந்து சிரித்தனர்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
No comments:
Post a Comment