Sunday, October 29, 2023

1011. நிமிர்ந்து நில்!

வெங்கடாசலம் கோபமாகக் கத்திக் கொண்டிருக்க அவர் முன்னால் அவர் மகன் ராமு தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.

அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி சற்று சுவாரசியத்துடனும், சற்று பயத்துடனும் தன் அப்பா தன் அண்ணனைத் திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்து வயதுச் சிறுவன் முரளி, "எதுக்கும்மா அப்பா அண்ணனைத் திட்டறாரு?" என்றான் தன் அம்மாவிடம், சற்றே ரகசியமான குரலில்,

"அப்பா பீரோவில வச்சிருந்த பணத்தை அப்பாவுக்குத் தெரியாம எடுத்துக்கிட்டு உன் அண்ணன் சினிமாவுக்குப் போயிட்டு வந்திருக்கான். அதான் அப்பா அண்ணனைத் திட்டறாரு" என்றாள் அவன் தாய் அமுதா.

"சினிமாவுக்குப் போறது தப்பா அம்மா?"

"சினிமாவுக்குப் போறது தப்பு இல்லை. அப்பா வச்சிருந்த காசை அப்பாவுக்குத் தெரியாம எடுத்ததுதான் தப்பு. அது திருட்டு இல்லையா?"

"அண்ணன் ஏம்மா திருடணும்? அப்பாகிட்ட கேட்டிருக்கலாமே!"

"அப்பாகிட்ட கேட்டா அவரு கொடுக்க மாட்டாருன்னு நினைச்சு அவருக்குத் தெரியாம  எடுத்திருக்கான்."

"அது சரி. அண்ணன் ஏன் தலையைக் குனிஞ்சுக்கிட்டு நிக்கறான்?"

"திருடினது தப்புதானே? தப்பு பண்ணிட்டமேங்கற அவமானத்திலதான் தலைகுனிஞ்சு நிக்கறான்!" என்றாள் அமுதா.

சில விநாடிகள் கழித்து, முரளி ஏதோ நினைவு வந்தவனாக, "ஏம்மா, அன்னிக்கு அக்காவைப் பொண் பார்க்க வரப்ப அக்கா கூடத் தலையைக் குனிஞ்சுக்கிட்டு இருந்தாளே, அது ஏன்?" என்றான்.

அந்தச் சூழலிலும் அமுதாவுக்குச் சிரிப்பு வந்தது.

"புதுசா யாராவது ஆம்பளையைப் பார்த் ஒரு பொண்ணு வெட்கப்பட்டுத் தலையைக் குனிஞ்சுப்பா. அது பொம்பளைப் பிள்ளைங்களோட குணம். தப்பு செஞ்சுட்டு அதுக்காக வெட்கப்படறது வேற.  அது அவமானத்தால வர வெட்கம். நீ ஆம்பளையாப் பொறந்துட்ட. பொம்பளைங்கற மாதிரி வெட்கப்பட  அவசியம் உனக்கு இல்லை. தப்புப் பண்ணினாதான் நீ வெட்கப்படணும். எப்பவுமே எந்தத் தப்பும் பண்ணாம நடந்துக்க! நீ எப்பவுமே தலைகுனிய வேண்டி இருக்காது" என்றாள் அமுதா.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

பொருள்: 
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் வேறு வகை ஆகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...