Saturday, October 21, 2023

1007. பரமசிவத்தின் பாலிசி!

"சார் குளிச்சுக்கிட்டிருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றான் வேலைக்காரன்.

திவாகரும் அவனுடன் வந்த சோமு, கண்ணன் ஆகியோரும் அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

புழுக்கமாக இருந்தது. வேலைக்காரன் மின்விசிறியைப் போடவில்லை. சுவிட்ச் போர்டு அருகில்தான் இருந்தது. தாங்களே போய் ஃபேன் சுவிட்ச்சை ஆன் செய்தால் நன்றாக இருக்காது என்பதால் வேலைக்காரன் மீண்டும் வந்தால் அவனிடம் சொல்லி ஃபேன் போடச் சொல்லலாம் என்று நினைத்து மூவரும் காத்திருந்தனர்.

பத்து நிமிடங்கள் ஆகி விட்டன, வேலைக்காரன் திரும்ப வரவில்லை.  அவர்கள் சந்திக்க வேண்டிய விட்டலும் வரவில்லை. இன்னும் குளித்து முடிக்கவில்லை போலிருக்கிறது.

அப்போது உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அங்கே வந்தாள்.

"ஒரே புழுக்கமா இருக்கே! ஃபேன் வேண்டாமா உங்களுக்கு?" என்றாள் சோஃபாவில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து.

எங்கே அவளும் ஃபேன் போடாமல் உள்ளே போய் விடப் போகிறாளோ என்று பயந்து, "ஃபேன் சுவிட்ச் எங்கே இருக்குன்னு தெரியல. அதான்..." என்றான் கண்ணன் அவசரமாக.

"உங்களுக்குப் பக்கத்திலேயேதானே இருக்கு! உங்க கண்ணுக்குத் தெரியலையா?" என்று சிரித்துக் கொண்டே கூறிய அவள் ஃபேன் சுவிட்ச்சை ஆன் செய்தாள்.

"அண்ணனைப் பார்க்க வந்தீங்களா?" என்றாள் தொடர்ந்து.

"பரமசிவம் சாரைப் பார்க்க வந்தோம்" என்றான் திவாகர், 'உங்கள் அண்ணன் யார் என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று மனதில் நினைத்தபடி.

"அண்ணன் இப்பதான் குளிச்சு முடிச்சாரு. அவரு பூஜையெல்லாம் பண்ணிட்டு வெளியில வர முக்கால் மணி நேரம் ஆகுமே! நீங்க வேணும்னா எங்கேயாவது போயிட்டு அப்புறம் வரீங்களா?" என்றாள் அவள்.

"பரவாயில்லை. வெயிட் பண்றோம்" என்றான் சோமு.

"என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"நாங்க ஒரு அனாதை ஆசிரமம் நடத்தறோம். அது விஷயமா..." என்று இழுத்தான் திவாகர்.

"நன்கொடையா?" என்றவள் அவர்களைப் பரிதாபமாகப் பார்ப்பது போல் பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

"நாம அனாதை ஆசரமம் நடத்தறோம். ஏதோ நாமே அனாதைகள்ங்கற மாதிரி நம்மைப் பார்த்துட்டுப் போறாங்களே!' என்று சோமு முணுமுணுத்தான். திவாகர் வாயில் விரலை வைத்து அவனை அடக்கினான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்துத்தான் பரமசிவம் வெளியே வந்தார்.

திவாகர் தாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னதும், "நான் நன்கொடை எதுவும் கொடுக்கறதில்லை!" என்றார் பரமசிவம்.

"சார்! எங்க ஆசிரமத்தில முந்நூறு குழந்தைங்க இருக்காங்க. உங்களை மாதிரி பெரிய மனுஷங்க உதவினாதான் அவங்களுக்கு சாப்பாடு கிடைக்கும்" என்றான் திவாகர்.

"நன்கொடை எதுவும் கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட பாலிசி. எனக்கு வேற வேலை இருக்கு, கிளம்பறீங்களா?" என்று எழுந்தார் பரமசிவம்.

வெளியே வந்து சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, "ஒரு மணி நேரத்துக்கு மேல காத்திருந்தது வீணப் போச்சே! வந்திருக்காங்களே, ஒரு நூறு, இருநூறாவது கொடுக்கலாமேன்னு தோணலியே இந்தப் பெரிய மனுஷனுக்கு!" என்றான் கண்ணன் கோபத்துடன்.

"அவரோட தங்கை முன்னாடியே நமக்குக் கோடி காட்டிட்டாங்க. நம்மைப் பரிதாபமாப் பார்த்தாங்களே! நாமதான் புரிஞ்சுக்கல" என்றான் திவாகர்.

"அவங்களுக்கு நாற்பது வயசுக்கு மேல இருக்குமே, ஏனோ தெரியலை, கல்யாணம் செஞ்சுக்காம அண்ணன் வீட்டிலேயே இருக்காங்க!" என்றான் சோமு.

"அவங்களுக்குக் கல்யாணம் ஆகலேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் திவாகர்.

"இங்கே வரதுக்கு முன்னே பரமசிவத்தைப் பத்தி சில பேர் கிட்ட விசாரிச்சேன். வீட்டில அவரும் அவர் தங்கையும் மட்டும்தான் இருக்கறதா சொன்னாங்க."

"நீ விசாரிச்சப்ப அவர் யாருக்கும் ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டாருன்னு சொல்லி இருப்பாங்களே! அதை நீ ஏன் முன்னாடியே எங்ககிட்ட சொல்லல? இங்கே வந்து நம்ம நேரத்தை வீணாக்கி இருக்க வேண்டாம் இல்ல?" என்றான் திவாகர் கோபத்துடன்.

"அவரோட மனைவி, குடும்பம் எல்லாம்..?" என்றான் கண்ணன்.

"அவர் மனைவி அவரோட இருக்கப் பிடிக்காம குழந்தையை அழைச்சுக்கிட்டுத் தனியாப் போயிட்டாங்களாம்!"

"அவரோட தங்கை நல்ல அழகா இருந்தாங்க, இல்ல? ஏன் கல்யாணம் செஞ்சுக்கலையாம்?" என்றான் கண்ணன்.

"இது ரொம்ப முக்கியம்டா நமக்கு!" என்றான் திவாகர்.

"இல்லை. எனக்கு ஒண்ணு தோணிச்சு!" என்றான் கண்ணன்.

"என்ன தோணிச்சு?" என்றான் சோமு.

"அண்ணன் பணத்தை யாருக்கும் கொடுக்காம வீணாக்கிக்கிட்டிருக்காரு. தங்கை கல்யாணம் செஞ்சுக்காம தன்னோட அழகை வீணாக்கிக்கிட்டிருக்காங்க!"

"டேய்! நாம சமூக சேவை செய்யணுங்கறதுக்காகக் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கோம். இப்படிப்பட்ட பேச்செல்லாம் பேசாதே! இப்ப அடுத்தாப்பல யார்கிட்ட போய் நன்கொடை கேக்கறதுன்னு நாம யோசிக்கணும்" என்றான் திவாகர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1007:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

பொருள்: 
பொருள் இல்லாத வறியவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவனின் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...