Friday, October 20, 2023

1005. குணாளன் குவித்த செல்வம்

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குணாளன் தான் பார்த்துக் கொண்டிருந்த சிறிய வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் ஆரம்பித்தபோது, அவன் விரைவிலேயே ஒரு பெரிய செல்வந்தனாகி விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தன்னிடம் பொருள் சேர ஆரம்பித்ததும் குணாளன் செய்த முதல் வேலை தன் சகோதரர்கள் மூவர், சகோதரிகள் இருவர், தன்மனைவியின் சகோதரர்கள் மூன்று பேர் உள்ளிட்ட தன் உறவினர்களிடமிருந்து விலகி நிற்க ஆரம்பித்ததுதான்.

"எங்க வீட்டில நான் ஒரே பொண்ணு. அதுவும் கடைசியாப் பொறந்தவ. என் அண்ணன்கள் மூணு பேரும் என் மேல உயிரா இருக்காங்க. அவங்களை நம்ம வீட்டுக்கு வர விடாம பண்ணிட்டீங்க, என்னையும் அவங்களைப் பார்க்கப் போகக் கூடாதுன்னுட்டீங்க. ஏன் இப்படிப் பண்றீங்க?" என்றாள் அவன் மனைவி தேவயானி.

"நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். உறவுக்காரங்கன்னு சொல்லிக்கிட்டு வந்து யாரும் நான் சம்பாதிக்கிற பணத்தைப் பிடுங்கிட்டுப் போக நான் விரும்பல" என்றான் குணாளன்.

"யாராவது பணம் கேட்டா, இல்லைன்னு சொல்லுங்க. உறவுக்காரங்களோட சகவாசமே கூடாதுன்னு ஏன் நினைக்கறீங்க?"

"கிட்ட வர விட்டா, அப்புறம் உதவி கேட்டாங்கன்னு முடியாதுன்னு சொல்றது கஷ்டமா இருக்கும். கூடப் பொறந்தவங்க உறவெல்லாம் சின்ன வயசிலதான். கல்யாணத்துக்கப்புறம் ஒவ்வொத்தரும் தனித் தனிக் குடும்பமாப் போயிடறோம் இல்ல? அப்புறம் எதுக்கு அண்ணன் தம்பி, அக்கா தங்கைன்னெல்லாம் உறவாடிக்கிட்டு!" என்றான் குணாளன்.

"நான் அப்பவே சொன்னேன், என் அண்ணன் நாங்க யாரும் அவன் வீட்டுக்கு வரதைக் கூட விரும்பலை, அப்படி இருக்கறவன்கிட்ட போய் உதவி கேட்டா எப்படிச் செய்வான்னு. நீ சொன்னியேன்னுதான் அவனைப் போய்ப் பார்த்தேன். மூஞ்சியில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லிட்டான்!" என்றான் குணாளனின் தம்பி தனசேகரன், தன் மனைவி லட்சுமியிடம்.

"நம்ம பையனுக்கு நல்ல காலேஜில சீட் கிடைச்சிருக்கு. ஆனா ஃபீஸ் கட்ட நம்மகிட்ட பணம் இல்லை. ஒரு நல்ல காரியத்துக்காகப் பணம் கேட்டா கொடுப்பார்னுதான் உங்களைக் கேட்கச் சொன்னேன். அதுவும் கடனாத்தானே கேட்டோம்?" என்றாள் லட்சுமி.

"அவன் குணம் தெரிஞ்சும் உன் பேச்சைக் கேட்டு அவனைப் போய்ப் பார்த்தது என் தப்புதான். நான் போனப்ப அவன் வீட்டில இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வந்தான். அதனால அண்ணி காப்பியாவது கொடுத்தாங்க. நான் போன நேரத்தில குணாளன் இருந்திருந்தான்னா, காப்பி கூடக் கிடைச்சிருக்காது! என்ன மனுஷனோ தெரியலை!"

"உங்க அண்ணி எப்படி இருக்காங்க?"

"இருக்காங்க. பாவம், அவங்களோட அண்ணன்களையும்தான் குணாளன் அண்ட விடறதில்லையே! அதோட இல்லை. அவன்கிட்ட இவ்வளவு பணம் இருந்தும் அவனுக்கு அதை அனுபவிக்கவும் தெரியலை. அவன் வீடு ரொம்பப் பழசு. அடிக்கடி ஏதாவது ரிப்பேர் வந்துடுதாம். புதுசா வேற வீடு வாங்கலாம்னு அண்ணி சொன்னா, அதெல்லாம் வேண்டாம், இந்த வீடே நல்லாத்தானே இருக்குன்னு சொல்றானாம் குணாளன். நம்ம வீட்டில கூட ஏசி இருக்கு. ஆனா அவன் வீட்டில இல்லை. வீட்டில ஒரே புழுக்கம். ஏசி எல்லாம் எதுக்கு, ஜன்னலைத் தொறந்து வச்சா காத்து வது, பணம் கொடுத்து ஏசி வாங்கி அதுக்கு மாசா மாசம் மின்சாரக் கட்டணம் வேற கட்டணுமான்னு கேக்கறானாம். இந்தக் காலத்தில எல்லார் வீட்டிலேயும் ஸ்மார்ட் டிவி இருக்கு. அவன் இன்னும் பழைய காலத்து டிவியைத்தான் வச்சிருக்கான். அதுவும் அடிக்கடி ரிப்பேர் ஆயிடுதுன்னு அவங்க டிவி பாக்கறதையே விட்டுட்டாங்களாம். இதையெல்லாம் அவன் வரதுக்கு முன்னே அண்ணி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க!" என்றான் தனசேகரன்.

இதைக் கூறியபோது அண்ணன் தனக்குப் பணம் கொடுக்கவில்லையே என்ற கோபத்தையும், வருத்தத்தையும் மீறி, தனசேகரனுக்குச் சிரிப்பு வந்தது.

"தானும் அனுபவிக்காம, மத்தவங்களுக்கும் உதவி செய்யாம கோடிக் கோடியாப் பணத்தை சம்பாதிச்சு என்ன செய்யப் போறாரு உங்க அண்ணன்?" என்றாள் லட்சுமி விரக்தியுடன்..

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.

பொருள்: 
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...