Tuesday, October 17, 2023

1002. அருணாசலத்தின் 'கொள்கை'

"என் தம்பி பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு" என்றாள் விசாலாட்சி.

"சந்தோஷம்!" என்றான் அருணாசலம்.

"கல்யாணச் செலவுக்கு நாமதான் கொஞ்சம் பணம் கொடுத்து உதவணும்!"

"நான்தான் யாருக்கும் எந்த உதவியும் செய்யறதில்லைன்னு தெரியுமே!"

"ஏங்க, நம்மகிட்டதான் நிறையப் பணம் இருக்கே! எப்பவாவது, யாருக்காவது உதவி செஞ்சா, குறைஞ்சா போயிடும்?"

"பணம் நம்மகிட்ட இருந்தாதான், அது நமக்கு உதவியா இருக்கும். கேக்கறவங்களுக்கெல்லாம் தூக்கிக் கொடுத்துக்கிட்டிருந்தா, நமக்குத் தேவைப்படும்போது அது நம்மகிட்ட இருக்காது!

"என் தம்பி கடனாத்தான் கேக்கறான்."

"சொந்தக்காரங்களுக்குக் கடன் கொடுத்தா, பாங்க்ல எல்லாம் வாராக் கடன்கள்னு சொல்லுவாங்களே, அது மாதிரிதான் ஆகும்!"

"உங்க தங்கை தன்னோட பொண்ணு கல்யாணத்துக்குக் கடன் கேட்டப்பவே நீங்க முடியாதுன்னுட்டீங்க. என் தம்பிக்கா கொடுக்கப் போறீங்க?"

"தெரியுது இல்ல? அப்புறம் ஏன் கேக்கறே?" என்று கூறி, அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் அருணாசலம்.

ருணாசலத்துக்கு ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்பதில் ஆர்வம் உண்டு. அங்கே சொல்லப்படும் புராணக் கதைகளை அவன் மிகவும் விரும்பிக் கேட்பான். ஆனால், தானம் செய்ய வேண்டும், நல்ல காரியங்களுக்குப் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் உபதேசிப்பது அவனுக்குப் பிடிக்காது.

'என்ன செய்வது? சுவாரசியமான கதைகள் கேட்க வேண்டுமென்றால், இது போன்ற உபதேசங்களைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்!' என்று நினைத்துக் கொள்வான் அருணாசலம்.

அன்று மகாபாரதக் கதை கேட்பதற்காகச் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு அரங்குக்குப் போயிருந்தான் அருணாசலம். சொற்பொழிவாளர் தன் இரண்டு மணி நேரச் சொற்பொழிவில், இருபது நிமிடம்தான் கதை சொல்லி இருப்பார். மற்ற நேரமெல்லாம் உபதேசம்தான்!

குறிப்பாக, அவர் சொன்ன ஒரு விஷயம் அருணாசலத்துக்கு வேடிக்கையாக இருந்தது. பிறருக்கு உதவாமல் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்கள், அடுத்த பிறவியில் ஒரு கீழான பிராணியாகப் பிறந்து துன்பப்படுவார்களாம்! அதைக் கேட்டதும், அருணாசலதுக்குச் சிரிப்புதான் வந்தது.

சொற்பொழிவு நடைபெற்ற அரங்கிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான் அருணாசலம். 

இருட்டான ஒரு பகுதியில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ குரைத்துக் கொண்டே ஓடி வந்த ஒரு நாய், சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் மேல் இடிப்பது போல் அருகில் வர, அவர் ஒரு கல்லை எடுத்து அதன் மீது வீசினார்.

கல் நாயின் மீது பட்டு விட, அந்த நாய் வலி தாங்காமல் ஓலமிட்டபடியே ஓடியது.

அந்தக் காட்சியைப் பார்த்தபோது, அருணாசலத்துக்கு அவனை அறியாமலேயே மனதில் ஒரு எண்ணம் வந்து போயிற்று.

'ஒருவேளை நான் அடுத்த பிறவியில் ஒரு நாயாகப் பிறந்து இப்படி அடிபடுவேனோ?'

அந்த நினைப்பே அவன் உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1002:
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு.

பொருள்: 
பொருளால் எல்லாம் ஆகும் என்று நம்பி, பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் பொருளை இறுகப் பற்றியபடி மயக்கத்தால் ஆழ்ந்திருப்பவருக்கு சிறப்பில்லாத பிறவி உண்டாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...