கருணாகரன் தன் தூரத்து உறவினர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தபோது. "கேள்விப்பட்டேனே, உண்மையா?" என்றார் அவர், கருணாகரனிடம்.
கருணாகரன் பதில் கூறவில்லை.
கடந்த சில நாட்களாகவே, அவனுக்குத் தெரிந்தவர்கள் பலரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர், அல்லது, இது போன்ற கேள்விகளைக் கேட்டனர்.
அதற்குக் காரணம் சில நாட்கள் முன்பு நடந்த ஒரு சம்பவம்.
கருணாகரன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் காவல் துறையினர் அவன் காரை நிறுத்தி ஆவணங்களைச் சோதித்தனர். அப்போது அவனிடம் மது அருந்தி இருந்ததற்கான சோதனையைச் செய்தபோது, அவன் மது அருந்தி இருப்பதாகக் கண்டறிந்தனர்.
அப்போது, கருணாகரன் காவல்துறையினரிடம் வாதத்தில் ஈடுபட்டதுடன், ஒரு அதிகாரியை அடிக்கக் கையை ஓங்கி விட்டான்.
அதனால், மதுபோதையில் காரோட்டியது, காவலரைத் தாக்கியது ஆகிய குற்றங்களுக்காகக் காவலர்கள் கருணாகரனைக் கைது செய்து விட்டனர்.
அடுத்த நாள், கருணாகரனின் வக்கீல் வந்து, காவல் அதிகாரிகளிடம் பேசி அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு, அவர்கள் அவன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், அவனை எச்சரித்து வெளியே விட்டு விட்டனர்.
ஆயினும், கருணாகரன் ஒரு இரவு சிறையில் இருந்த செய்தி வெளியே பரவி விட்டது.
"ஊர்ல எத்தனையோ பேர் குடிச்சுட்டுக் கார் ஓட்டறாங்க. ஏதோ நான் ஒத்தன்தான் இப்படி செஞ்சுட்ட மாதிரி எல்லாரும் பேசறாங்களே!" என்றான் கருணாகரன், தன் நண்பன் அசோகனிடம்.
'உங்கப்பா மதுவிலக்குப் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனாரு. அவரோட பையனான நீ, மது அருந்திட்டுக் கார் ஓட்டினதுக்காக சிறைக்குப் போயிருக்கேங்கறது பெரிசா, தனியாத் தெரியும்தான்' என்று நினைத்துக் கொண்ட அசோகன், "இனிமே இது மாதிரி பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காம கவனமா நடந்துக்க!" என்றான்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை
குறள் 957:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
No comments:
Post a Comment