Monday, August 28, 2023

934. மூதாட்டியின் சோகம்

அந்த வீட்டுக்குள் நுழைந்த அபிராமி, "அம்மா" என்று அழைத்தாள்.

உள்ளிருந்து வெளியே வந்த மூதாட்டி, "யாரு?" என்றாள்.

"என்னைத் தெரியலியா அம்மா? நான்தான் அபிராமி. உங்க வீட்டில குடி இருந்தேனே!" என்றாள் அபிராமி.

"ஓ, அபிராமியா? வா, வா! எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து!" என்றுபடியே அபிராமியை அணைத்துக் கொள்ள முயன்றாள் மூதாட்டி.

அதற்குள் அபிராமி மூதாட்டியின் காலில் விழுந்து விட்டாள்.

"என்னம்மா இது? எதுக்கு என் கால்ல விழற?" என்றாள் மூதட்டி பதறியபடி.

"உங்க வீட்டில வாடகைக்குக் குடியிருந்த எங்க மேல எவ்வளவு அன்பு காட்டினீங்க! என் புருஷனுக்குச் சரியான வேலை இல்லாம கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில எத்தனையோ தடவை எங்களால நேரத்தில வாடகை கொடுக்க முடியாதபோது, 'பவாயில்ல, பணம் வந்தப்புறம் கொடுங்க'ன்னு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டீங்க! அதோட எங்களுக்குச் சரியான சாப்பாடு இல்லேன்னு புரிஞ்சுக்கிட்டு எத்தனையோ தடவை எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுத்து உதவி இருக்கீங்க. நீங்க தெய்வம் மாதிரிம்மா!" என்றாள் அபிராமி உணர்ச்சிப் பெருக்குடன்.

"அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உக்காரு. இப்ப எப்படி இருக்கீங்க எல்லாரும்?" என்றாள் மூதாட்டி பரிவுடன்.

"உங்க புண்ணியத்தில இப்ப நல்லா இருக்கோம்மா. அவரு ஒரு நல்ல வேலையில இருக்காரு. எங்க பையனை நல்ல ஸ்கூல்ல சேர்த்திருக்கோம்."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு அபிராமி!"

"அது சரி. உங்க பையன் எப்படி இருக்காரு? அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? நாங்க குடியிருந்த போர்ஷன் வேற மாதிரி இருக்கே! இடிச்சுக் கட்டி இருக்கீங்களா?" என்றாள் அபிராமி.

"நீங்க வறுமையில இருந்த காலத்தைப் பத்தி சொன்னே. அதை விட மோசமான ஒரு நிலையில நாங்க இருக்கோம்மா!" என்றாள் மூதாட்டி பெருமூச்சுடன்.

"என்னம்மா சொல்றீங்க?" என்றாள் அபிராமி அதிர்ச்சியுடன்.

"என் பையனைப் பத்திக் கேட்டியே! அவன் படிச்சு முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்குப் போனான். கல்யாணமும் ஆச்சு. ஆனா அவனுக்குப் பாழாப்போன சூதாட்டப் பழக்கம் வந்ததால நிறையப் பணம் போனதோட அவன் வேலையும் போச்சு. அவன் மனைவியும் அவனை விட்டுட்டுப் போயிட்டா. இப்ப அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கா. சூதாட்டத்தில அவனுக்கு ஏற்பட்ட கடனைத் தீர்க்க நீங்க குடியிருந்த போர்ஷனை வித்துட்டோம். அதில வந்த பணத்தில கடனைத் தீர்த்தப்புறம் மீதி இருந்த பணத்தை பாங்க்ல போட்டு அதில வர வட்டியை வச்சு குடும்பத்தை நடத்திக்கிட்டிருக்கேன். இப்ப சூதாடப் பணம் இல்லை, கடனும் வாங்க முடியலைங்கறதால என் பையன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கான். நான் செத்துப் போனப்புறம் இந்த வீட்டை வித்தோ, அடமானம் வச்சோ சூதாடி மீதி இருக்கிற வாழ்க்கைய அழிச்சுக்கப் போறான்!"

குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் மூதாட்டி.

"அழாதீங்கம்மா! உங்களுக்கு இருக்கற நல்ல மனசுக்கு அப்படி எதுவும் ஆகாது!" என்று கூறி மூதாட்டியின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினாள் அபிராமி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

பொருள்: 
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...