Saturday, August 26, 2023

931. ஆடத் தெரிந்தவர் யாரோ!

"நீ இவ்வளவு அருமையா சீட்டாடற. காசு வச்சு ஆடினா நிறைய சம்பாதிக்கலாண்டா!" என்றான் ராகவ்.

"அதெல்லாம் எனக்கு வேண்டாம். ஒரு விளையாட்டா ஆடறேன், அவ்வளவுதான். பணம் வச்சு ஆடறது சூதாட்டம் இல்லையா?" என்றான் வினோத்.

"என்னை மாதிரி ஆளுங்கள்ளாம் கிளப்புக்குப் போய் ஆடத் தெரியாம ஆடிப் பணத்தை விட்டுட்டு வரோம். ஆனா நல்லா ஆடத் தெரிஞ்ச நீ பணம் சம்பாதிக்கற வாய்ப்பை நழுவ விட்டுக்கிட்டிருக்க."

வினோத் பதில் சொல்லவில்லை.

"நான் ஒண்ணு சொல்றேன். ஒரு நாளைக்கு என்னோட கிளப்புக்கு வா. ஒரு ஆட்டம் ஆடிப் பாரு. பத்து ரூபா வச்சுக் கூட ஆடலாம். ஜெயிக்கறியான்னு பாரு. ஜெயிக்கலேன்னா அதோட விட்டுடு. ஆனா நீ கண்டிப்பா ஜெயிப்பே. ஜெயிச்சதுக்கு அப்புறம் தொடர்ந்து விளையாடறதும், விளையாடாம இருக்கறதும் உன் இஷ்டம்!"

வினோத் சற்றுத் தயங்கி விட்டு, "சரி" என்றான்.

பத்து ரூபாய் வைத்து ஆடி வினோத் ஜெயித்து விட்டான்  பிறகு நூறு ரூபாய் வைத்து ஆடி அதிலும் ஜெயித்து விட்டான்.

"எங்கே வினோத். இன்னுமா ஆஃபீஸ்லேந்து வரலே?" என்றார் ஊரிலிருந்து வந்திருந்த வினோதின் தந்தை அருணாசலம். 

அவர் இப்படிக் கேட்டதும், வினோதின் மனைவி சியாமளாவுக்கு அழுகை வெடித்து வந்தது.

"என்னத்தைச் சொல்றது? நல்லா இருந்த மனுஷன் திடீர்னு தினம் கிளப்புக்குப் போய் சீட்டாட ஆரம்பிச்சுட்டாரு. நான் வேண்டாம்னு சொன்னேன். கவலைப்படாதே, நிறையப் பணம் வரும்னு சொன்னாரு. ஆனா பணம் போய்க்கிட்டுத்தான் இருக்கு. ஒவ்வொரு மாசமும் சம்பளத்தில பாதிக்கு மேல சீட்டாட்டத்திலேயே போயிடுது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!" என்றாள் சியாமளா அழுகையினூடே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

பொருள்: 
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது, பெற்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...