Tuesday, August 22, 2023

927. குணசீலனின் 'சமூக சேவை!'

"தினம் சாயந்திரம் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்ததும் சமூக சேவைன்னு போயிடறான். ராத்திரி வரச்சே சோர்வோட வரான். சாப்பிட்டுட்டுப் படுத்துடறான்" என்று தன் மகன் குணசீலனைப் பற்றித் தன் கணவர் தண்டபாணியிடம் அலுத்துக் கொண்டாள் ருக்மணி.

"நாலைஞ்சு நண்பர்கள் சேர்ந்து ஏதோ நல்ல காரியம் செய்யறாங்க. அதை நாம ஏன் குறை சொல்லணும்?" என்றார் தண்டபாணி.

"அதுக்குக் காசு வேற செலவழிக்கிறானே! நிறைய சம்பாதிச்சாலும் பரவாயில்ல. இவனுக்கு வர சுமாரான சம்பளத்தில இதெல்லாம் எதுக்கு?" என்றாள் ருக்மிணி பெருமூச்சுடன்.

"என்ன குணசீலா, நாளைக்கு மீட்டிங் யார் வீட்டில? மூர்த்தி வீட்டிலேயா?" என்றார் செல்வராஜ். அவர் தண்டபாணியின் நண்பர்.

"என்ன மீட்டிங்?" என்றான் குணசீலன்.

"அதுதான் சமூக சேவை செய்யறதுக்காக தினம் ஒத்தர் வீட்டில சந்திச்சுப் பேசறீங்களே, அதைக் கேட்டேன்!"

"அதுவா?...ஆமாம்." என்றான் குணசீலன் சற்றே தடுமாற்றத்துடன்.

"கூடிப் பேசறதால என்ன சமூக சேவை செய்ய முடியும்?"

"இல்லை. யார் யாருக்கு என்னென்ன உதவி தேவைப்படுதுன்னு பேசி, அதை யார் செய்யணும், எப்படிச் செய்யணும்னு முடிவெடுப்போம்."

"அது சரி. ஏன் உன்னோட வீட்டில மீட்டிங் போடறதில்ல?"

"அப்பா அம்மாவுக்குத் தொந்தரவா இருக்குமேன்னுட்டுதான்!"

"அதுதான் காரணமா, இல்லை அப்பா அம்மா முன்னால தண்ணி போடறது கஷ்டமா இருக்கும்னா?" 

"என்ன அங்க்கிள் சொல்றீங்க?" என்றான் குணசீலன் பதட்டத்துடன்.

"நீங்க நாலைஞ்சு பேர் தினம் ஒண்ணா சேர்ந்து தண்ணி அடிக்கிறது யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறியா? அது இந்த ஊருக்கே தெரியும். மூர்த்தியும், குருவும் தனியா இருக்கறதால அவங்க ரெண்டு பேர் வீட்டிலேயும் மாத்தி மாத்தி உங்க 'சமூக சேவை' மீட்டிங்கை வச்சுக்கறதைப் பத்தி எல்லாரும் பேசிச் சிரிக்கிறாங்க. சும்மா அரட்டை அடிக்கறதா சொல்லி இருந்தா கூட எல்லாரும் நம்பி இருப்பாங்க. சமூக சேவை செய்யறதா சொன்னா, நீங்க என்ன சமூக சேவை செய்யறீங்கன்னு எல்லாருக்கும் கேள்வி வராதா? உன் அப்பா அம்மா பாவம் நீ ஏதோ ஊருக்கு உதவறதா நினைச்சுக்கிட்டிருக்காங்க. இந்தப் பழக்கத்தை விடு. வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்குப் போறதுன்னு பழக்கப்படுத்திக்க. உன்னால இந்தப் பழக்கத்தை விட்டுட முடியும்" என்று கூறி குணசீலனின் தோளில் ஆதரவாகத் தட்டினர் செல்வராஜ். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 927:
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

பொருள்: 
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...