Monday, August 21, 2023

926. விஷம் குடித்தவள்

"அம்மாவுக்கு வயசாயிட்டதால எப்ப இறந்துடுவாங்களோன்னு பயமாவே இருக்கு. காலையில நான் எழுந்திருச்சதும் அவங்க தூங்கிக்கிட்டிருந்தா அவங்க முகத்தைப் பார்ப்பேன். தூங்கறாங்களா, இல்லை தூக்கத்திலேயே இறந்து போயிருப்பாங்களான்னு சந்தேகமாகவே இருக்கும்" என்றான் ஆனந்த்.

"வயசானவங்க சில நாள் அதிக நேரம் தூங்கத்தான் செய்வாங்க. அதுக்காக இப்படியா நினைப்பீங்க? அவங்க காதில விழுந்தா வருத்தப்படப் போறாங்க!" என்ற அவன் மனைவி சுகந்தி, "ஏற்கெனவே அவங்களுக்கு இருக்கற வருத்தம் போதாதா?" என்றாள் சற்றுத் தணிந்த குரலில்.

மனைவி எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்ந்த ஆனந்த் பதில் பேசாமல் நகர்ந்தான்.

ன்று மாலை ஆனந்த் வீடு திரும்பியபோது, சுகந்தி வீட்டில் இல்லை.

"சுகந்தி எங்கே போயிருக்கா?" என்றான் ஆனந்த் தன் அம்மா சரசுவிடம்.

"இன்னிக்கும் குடிச்சுட்டுத்தானே வந்திருக்கே? நீ வீட்டுக்குள்ளே நுழையறதுக்கு முன்னாலேயே சாராய வாடை உள்ளே வந்துடுதே, யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னேங்கற மாதிரி!" என்றாள் சரசு கோபத்துடன்.

"அது சாராயம் இல்லேம்மா, விஸ்கி!" என்ற ஆனந்த், "அது இருக்கட்டும். சுகந்தி எங்கே?" என்றான்.

"பக்கத்து வீட்டு நீலா விஷத்தைக் குடிச்சுட்டளாம். அவளை ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க. சுகந்தி கூடப் போயிருக்கா. இப்ப வந்துடுவா!"

"விஷத்தைக் குடிச்சுட்டாங்களா? அவங்களுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன?" என்றான் ஆனந்த்.

அப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிய சுகந்தி, "நீங்க சொல்றது சரிதான். நீலா புத்தி கெட்டுப்போய்தான் விஷத்தைக் குடிச்சிருக்கா. நல்லவேளை பிழைச்சுட்டா! ஆனா நீலாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது விஷம் குடிச்சிருந்த அவளோட முகத்தில இருந்த களையைப் பார்த்தப்ப, நீங்க தினமும் சாயந்திரம் குடிச்சுட்டு வீட்டுக்கு வரச்சே உங்க முகத்தில நான் பார்க்கிற களை மாதிரியேதான் இருந்தது!" என்றாள் ஆனந்தைப் பார்த்து.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்: 
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...