Sunday, August 20, 2023

925. அண்ணனின் ஆச்சரியம்!

வீட்டுக்குள் நுழைந்ததும், பெட்டியைக் கீழே வைப்பதற்கு முன்பே, "அப்பா எப்படி இருக்காரு?" என்றான் ராமச்சந்திரன் பதட்டத்துடன்.

"இப்ப பரவாயில்லை. இன்னிக்கு சாயந்திரம் ஐ சி யூவிலேந்து சாதாரண ரூமுக்கு மாத்தறதா சொல்லி இருக்காங்க. நாலைஞ்சு நாள்ள டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம்" என்றாள் அவன் தாய் மரகதம்.

"நான் துபாய்க்குப் போன சமயத்திலேயா இப்படி நடக்கணும்! லட்சுமணன் ஃபோன் பண்ணினதும் பதறிப் போயிட்டேன். உடனே கிளம்பி வர முடியல. அங்கே சில ஏற்பாடுகள் பண்ணிட்டுக் கிளம்பி வரதுக்குள்ள நாலைஞ்சு நாள் ஆயிடுச்சு."

"திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. நான் உள்ளே இருந்தேன். லட்சுமணன் பக்கத்திலேயே இருந்திருக்கான். உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணி ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்துட்டான். உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்ததால காப்பாத்த முடிஞ்சுது, கொஞ்சம் தாமதமாயிருந்தா கஷ்டமா இருந்திருக்கும்னு டாக்டர் சொன்னாரு" என்றாள் மரகதம்.

"அப்பாவைப் பார்த்துக்க ஆஸ்பத்திரியில யார் இருக்காங்க?" என்றான் ராமச்சந்திரன்.

"ஐசியூ- வில இருக்கறப்ப யாரும் துணைக்கு இருக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சாயந்திரம் அவரை சாதாரண ரூமுக்கு மாத்தினப்பறம் நாம போய்ப் பார்த்தாப் போதும்"

"அப்ப, லட்சுமணன் எங்கே?"

மரகதம் தலையை நிமிர்த்திப் பக்கத்திலிருந்த அறையைக் காட்டினாள்.

ராமச்சந்திரன் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான்.

ராமச்சந்திரன் குளித்து. உணவருந்தி விட்டுத் தன் அறைக்குள் இருந்தபோது அங்கே லட்சுமணன் வந்தான்.

"எப்ப வந்தே?" என்றான் ராமச்சந்திரனைப் பார்த்து.

"ரெண்டு மணி நேரம் ஆகி இருக்கும். நீதான் அப்பாவை ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்தியாமே! உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதாலதான் அவரைக் காப்பாத்த முடிஞ்சுதுன்னு டாக்டர் சொன்னதா அம்மா சொன்னாங்க. நல்ல வேளை, நீ பக்கத்தில இருந்து உடனே செயல்பட்டதால அப்பாவைக் காப்பாத்த முடிஞ்சுது" என்றான் ராமச்சந்திரன்

"அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்ததும் ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அப்புறம்தான் உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணணும்னு தோணிச்சு!"

"ஆனா, நீ இப்படி செஞ்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு."

"என்ன ஆச்சரியம்?" என்றான் லட்சுமணன் புரியாமல்.

"நல்ல நினைவோட இருக்கறப்ப மயக்கம் வரணுங்கறதுக்காகக் காசு கொடுத்து மதுவை வாங்கிக் குடிக்கறவன் நீ! நான் ஊர்லேந்து வந்தப்ப நீ குடிச்சுட்டு போதையில மயங்கிப் படுத்துக்கிட்டுத்தான் இருந்த. அப்படி இருக்கறப்ப  மயக்கம் போட்டு விழுந்த அப்பா மயக்கத்திலேந்து விடுபடணுங்கறதுக்காக அவரை ஆம்பலன்ஸ்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனியே, அது ஆச்சரியம் இல்லையா?" என்றபடியே தம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் ராமச்சந்தரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள்: 
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காக போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...