Saturday, August 19, 2023

924. சென்ஸிடிவ் சதா!

"சட்டை போட்டுக்காம உடம்பைக் காட்டிக்கிட்டு  வீட்டு வாசல்ல உக்காந்துக்கிட்டிருக்கறவங்க, தெருவில நடந்து போறவங்க இவங்களையெல்லாம் பாத்தா எனக்கு அருவருப்பா இருக்கு!" என்றான் சதா.

"அவங்க எப்படியோ இருந்துட்டுப் போறாங்க. உனக்கென்னடா?" என்றேன் நான்.

"பொது இடத்தில உடம்பைக் காட்டிக்கிட்டிருக்கமேன்னு ஒரு வெட்க உணர்வு இருக்க வேண்டாமா?" என்றான் சதா கோபத்துடன், ஏதோ நானே சட்டை அணிந்து கொள்ளாமல் அவன் முன் நின்றது போல்!

"நீ ரொம்ப சென்ஸிடிவா இருக்கடா!" என்றேன் நான்.

நான் அலுவலகத்தில் இருந்தபோது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

சதாதான்!

"என்னடா சதா?" என்றேன் நான்.

ஆனால் தொலைபேசியில் கேட்ட குரல் வேறொருவருடையது.

"சார்! இங்கே ஒருத்தர் சாலை ஓரமா மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. குடிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன். அவர் ஃபோன்ல இருந்த கால் லிஸ்ட்ல உங்க பேரு முதல்ல இருந்ததால உங்களுக்கு கால் பண்றேன்" என்றார் .

அலுவலகத்தில் அனுமதி பெற்று அவர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தேன்.

சாலை ஓரத்தில் சதா படுத்திருந்தான். அப்போதுதான் மயக்கம் நீங்கியவனாக உடலை அசைத்துக் கொண்டிருந்தான்.

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு சில விநாடிகள் நின்று அவனைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

நான் அவன் அருகில் சென்று பார்த்தபோது அவனுடைய வேட்டி அவிழ்ந்து பரந்து கிடக்க உள்ளாடை தெரிய மல்லாந்து படுத்துக் கிடந்தான்.

நான் அருகில் சென்றதும் என்னைப் பார்த்து, "என்னைக் கொஞ்சம் கையைப் பிடிச்சுத் தூக்கி விடுடா!" என்றான்.

தன் வேட்டி அவிழ்ந்திருப்பதை அறியாமலோ, அல்லது அதைப் பொருட்படுத்தாமலோ அவன் இருந்தது எனக்கு வேதனை அளித்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்: 
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் திரும்பிக் கொள்வாள்..
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...