Sunday, August 13, 2023

923. மேகலா சொன்ன பொய்

செந்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் அவன் தாய் மேகலா எப்போதும் செய்வது போல் முன்னறையிலிருந்து உள்ளே சென்று விட்டாள்.

அரை மணி நேரம் கழித்து முன்னறைக்கு வந்த மேகலா, அங்கே அமர்ந்திருந்த செந்திலைப் பார்த்து, "சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். போட்டுக்கிட்டு சாப்பிடு!" என்றாள்.

செந்தில் மௌனமாகத் தலையாட்டினான்.

செந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே வந்த மேகலா, "இன்னிக்கு மாமா வந்திருந்தாரு!" என்றாள்.

மேகலா மாமா என்று குறிப்பிட்ட நபர் அவளுடைய சகோதரர் அல்ல. செந்திலின் தந்தை பூபதியின் நண்பர். பூபதி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தவர். செந்தில் அவரை மாமா என்றுதான் அழைப்பான். மேகலா, செந்தில் இருவருக்குமே அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. 

"மாமாவா?" என்றான் செந்தில் வியப்புடன். "போயிட்டாரா? என்னைப் பாக்காம போக மாட்டாரே!"

"அவர் இருந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்னுதான் சொன்னாரு. நான்தான் நீ நைட் ஷிப்ட் பாத்துட்டுக் காலையிலதான் வருவேன்னு பொய் சொல்லி அவரை அனுப்பிட்டேன்."

"ஏம்மா அப்படிச் சொன்னே?"

"ஏண்டா, தினமும் நீ வீட்டுக்கு வரச்சே குடிச்சுட்டு  வர. குடிபோதையில உன்னைப் பார்க்க முடியாமதான், ஒரு அம்மாவா உனக்கு சோறு கூடப் பரிமாறாம, மேஜை மேல சாப்பாடு எடுத்து வச்சுட்டு உன்னையே போட்டுக்கிட்டு சாப்பிடச் சொல்றேன். அந்த நல்ல மனுஷன்  உன் அப்பா போனப்புறம் ஒரு அப்பாவா இருந்து உன்னைக் கனிவோடயும், கண்டிப்பாவும் வளர்த்தாரு. நீ ஒரு சின்னத் தப்பு பண்ணினாக் கூட உரிமையோட உன்னைக் கண்டிப்பாரு. உன் மேல அவ்வளவு அக்கறை அவருக்கு! நீ வீட்டுக்கு வரப்ப குடிபோதையில இருக்கறதை என்னாலேயே பார்க்க முடியலையே, அவர் பார்த்தா அவர் மனசு உடைஞ்சு போயிடாது? இந்த நிலைமையில உன்னை அவர் பார்க்கக் கூடாதுன்னுதான் அந்த நல்ல மனுஷனை சாப்பிட்டுட்டுப் போங்கன்னு கூடச் சொல்லாம சீக்கிரமே அனுப்பி வச்சுட்டேன்."

பேசி முடிக்கும்போதே வெடித்து வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், விம்மிக் கொண்டே உள்ளே சென்றாள் மேகலா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

பொருள்: 
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...