Friday, August 11, 2023

921. யாருடன் போட்டி?

"இந்தத் துறையில எதிரிகளை வீழ்த்தினாதான் முன்னுக்கு வர முடியும்" என்றார் முன்னணி நடிகர் வினோதின் ஆலோசகர் வசந்தன்.

"எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்? எனக்குன்னு ரசிகர்கள் இருக்கிற மாதிரி மற்ற நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பாங்க. யாருக்கு அதிக பாபுலாரிடி இருக்கசுணும்கறதை நம்மால எப்படி முடிவு செய்ய முடியும்?" என்றார் வினோத்.

"சார்! இது பழைய காலம் இல்ல. ஒரு கட்சியையோ, தலைவரையோ தேர்தல்ல ஜெயிக்க வைக்கக் கூட உத்திகளைப் பயன்படுத்தற காலம். உங்க பாபுலாரிடி உங்களுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்காங்கங்கறதை மட்டும் பொருத்தது இல்ல. பொதுமக்கள் கிட்ட உங்களுக்கு எப்படிப்பட்ட இமேஜ் இருக்குங்கறதையும் பொருத்தது. டெக்னாலஜி, சோஷியல் மீடியா இதெல்லாம் வளர்ந்திருக்கிற இந்தக் காலத்தில ஒத்தரோட இமேஜைத் தூக்கி நிறுத்தவும் முடியும், கீழே போட்டு உடைக்கவும் முடியும்!"

"எனக்குப் புரியல. என்னவோ செய்யுங்க. ஆனா என்னோட எதிரிகள் என்னோட இமேஜை உடைக்கிற மாதிரி ஏதாவது செஞ்சுடப் போறாங்க!" என்றார் வினோத் சிரித்துக் கொண்டே.

"கவலைப்படாதீங்க. உங்களைப் பாதுகாக்கத்தான் நான் இருக்கேனே! சரி. நான் ஒரு பிளான் போட்டுக்கிட்டு வரேன். அதை நீங்க பார்த்துட்டு அப்ரூவ் பண்ணுங்க!" என்றார் வசந்தன்.

"உங்க பிளான் நல்லாத்தான் இருக்கு. ஆனா இதில நீங்க ரஞ்சித்தை இல்ல டார்கெட் பண்றீங்க? ரஞ்சித் வளர்ந்து வர ஒரு நடிகர். ஆனா எனக்கு முக்கியப் போட்டியா இருக்கறவரு விசித்ரன் தானே?" என்றார் வினோத்.

"இல்லை சார். விசித்ரன் உங்களுக்குப் போட்டி இல்லை. உங்களுக்கு மட்டும் இல்ல, வேற எந்த நடிகருக்கும் அவர் போட்டியா இருக்க மாட்டாரு!"

"என்ன சார் சொல்றீங்க? நானும் விசித்ரனும் கிட்டத்தட்ட ஒரே லெவல்ல இருக்கோம். எங்க ரெண்டு பேருக்குள்ளதான் போட்டின்னு சின்னக்  குழந்தைக்குக் கூடத் தெரியுமே!" என்றான் வினோத் சற்றே கோபத்துடன்.

"சார்! அது கடந்த காலத்தில. விசித்ரனுக்கு குடிப்பழக்கம் இருக்கு. அது வெளியில தெரியாது. ஆனா அது இப்ப அதிகமாயிடுச்சு. அவரால இனிமே ஃபீல்டில நிலைச்சு நிக்க முடியாது!"

"எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றீங்க? விசித்ரன் ஒரு கடும் உழைப்பாளிங்கறது எனக்குத் தெரியும்!"

"எப்படிப்பட்ட உழைப்பாளியா இருந்தாலும் குடிப்பழக்கம் அவரை அழிச்சுடும். இப்பவே கொஞ்ச நாளா அவருக்குப் புதுப் படம் எதுவும் புக் ஆகல. நீங்க வேணும்னா ரெண்டு மூணு மாசம் பார்த்துட்டு அப்புறம் என்னைக் கூப்பிடுங்க. அதுக்கப்பறம் இந்த பிளானை நாம செயல்படுத்தலாம்!" என்று சொல்லி விடைபெற்றார் வசந்தன்.

அடுத்த சில வாரங்களிலேயே விசித்ரன் புக் செய்யப்பட்டிருந்த சில படங்கள்  கைவிடப்பட்டன என்ற செய்தி விநோதுக்குக் கிடைத்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

பொருள்: 
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...