Tuesday, August 1, 2023

907. பசுபதியின் விருப்பம்

"தனிக்குடித்தனம் போனா வீட்டு வாடகை கொடுக்கணுமேன்னுட்டு நம்ம பையன் ராஜா கல்யாணத்துக்கபறமும் நம்ம வீட்டிலேயே இருக்கான். ஆனா பெண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு நம்ம ரெண்டு பேரையும் அவமரியாதையா நடத்தறான். உங்க வைத்தியச் செலவுக்குக் கூடப் பணம் கொடுக்கறதில்ல. நீங்க முழு செக் பண்ணிக்கணும்னு டாக்டர் சொல்லி ஒரு மாசமாச்சு. அதுக்குப் பணம் கேட்டா, 'இப்ப பணம் இல்ல, அடுத்த மாசம் பாக்கலாம், செக் அப் பண்றது அவ்வளவு முக்கியமா?'ன்னு கேக்கறான். இதுக்காகவா இவனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சோம்?" என்று கணவனிடம் புலம்பினாள் சிவகாமி.

"ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்க. பணம் நிறைய இருக்கு. ஆனா நமக்காகச் செலவழிக்க மருமகளுக்கு மனசில்ல. இவனும் அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு நம்ம மேல அக்கறை இல்லாம இருக்கான். சமையல் உட்பட வீட்டு வேலை எல்லாம் நீ செய்யற. அதுக்கு சம்பளம், வீட்டு வாடகை இது ரெண்டுக்கும் நமக்கு ஏதாவது பணம் கொடுத்தா நாம அதை வச்சு சமாளிக்கலாம். இன்னிக்கு அவன்கிட்ட கேக்கப் போறேன்!" என்றாள் அவள் கணவர் பசுபதி.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் மகள் மலர்விழி, "அப்பா! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. இனிமே நீங்க அண்ணன்கிட்ட பணம் எதிர்பார்க்க வேண்டாம். நானே உங்க செலவுகளை கவனிச்சுக்கறேன்!" என்றாள்.

"ரொம்ப சந்தோஷம்மா! நீ ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவளாச்சே, நீ எப்படி வேலைக்குப் போகப் போறேன்னு பயந்துக்கிட்டிருந்தேன்!" என்றாள் சிவகாமி.

"ஒத்தர் இறந்து போனா அவரோட பையன்தான் அவருக்குக் கொள்ளி வைக்கணும்பாங்க. ஆனா எனக்கு நீதாம்மா கொள்ளி வைக்கணும். ராஜா வைக்கக் கூடாது. இதை நான் ஒரு உயிலாவே எழுதி வச்சுடறேன்!" என்றார் பசுபதி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 907:
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

பொருள்: 
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...