Wednesday, July 19, 2023

952. பத்தாயிரம் ரூபாய்!

ரமேஷ் அந்த நிறுவனத்தில் சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிறுவனத்துக்கான ஒரு பணிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

வரும் விண்ணப்பங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக் கொண்டு அவற்றை ஒரு பெட்டியில் போட்டு வைக்க வேண்டியது அவன் வேலை. 

விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் முடிந்ததும் சில அதிகாரிகள் அவற்றைப் பிரித்துப் பார்த்து எந்த நிறுவனம் குறைவான தொகையைக் குறிப்பிட்டிருக்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு அந்தப் பணியைக் கொடுப்பார்கள்.

அது ஒரு தனியார் நிறுவனம் என்பதால் விண்ணப்பங்கள் வைக்கப்படும் கவர்களில் அரக்கு வைத்து சீல் செய்யும் வழக்கம் இல்லை. ஒட்டப்பட்ட கவர்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.

அன்றுதான் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள். 

ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு விண்ணப்பம் அடங்கிய கவருடன் ஒருவர் வந்தார். அதை ரமேஷிடம் கொடுத்து விட்டு, "நீங்க இங்கே புதுசா வேலைக்கு வந்திருக்கீங்களா?" என்றார்.

"ஆமாம்" என்றான் ரமேஷ்.

"இதுக்கு முன்னால இங்கே இருந்த கார்த்திக்கை எனக்குத் தெரியும்."

"அவர் வேலையை விட்டுப் போயிட்டாரு."

"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றார் அவர்.

"சொல்லுங்க!"

"நான் கொடுத்த கவரைக் கொஞ்சம் கொடுக்கிறீங்களா?"

ரமேஷ் தயக்கத்துடன் அவர் கொடுத்த கவரை அவரிடம் கொடுத்தான்.

தன் பையிலிருந்த ஒரு டியூபை எடுத்து அதை கவர் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் பிதுக்கினார் அவர்.

டியூபிலிருந்து மெலிதாக ஒரு திரவம் வெளி வந்து ஒட்டிய கவரைத் திறந்து கொள்ள வைத்தது. உடனே அந்த திரவம் ஆவியாகிச் சுவடில்லாமல் மறைந்து விட்டது.

"பாத்தீங்களா? பிரிச்சதே தெரியல" என்றார் அவர்.

ரமேஷ் மௌனமாகத் தலையசைத்தான்.

"சஞ்சய் என்டர்பிரைசஸ்தான்  குறைவா கோட் பண்ணி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். நான் மத்தியானம் லஞ்ச் டைம்ல இங்கே வரேன். அப்ப ஆஃபீஸ்ல யாரும் இருக்க மாட்டாங்க. அப்ப நீங்க சஞ்சய் என்டர்பிரைசஸ் கவரை எடுத்துக் கொடுத்தீங்கன்னா அதை இதே மாதிரி பிரிச்சு அவங்க எவ்வளவு கோட் பண்ணி இருக்காங்கன்னு பாத்துட்டு திரும்பவும் சரியா ஒட்டிக் கொடுத்துடுவேன். அப்புறம் அதை விடக் குறைச்சலா கோட் பண்ணிக் கொண்டு வந்து விண்ணப்பம் கொடுப்பேன். இப்ப நான் கொண்டு வந்தது உங்களுக்கு இதை செஞ்சு காட்டத்தான்" என்றார் அவர்.

"அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்!" என்றான் ரமேஷ்.

"உங்ளுக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்துடுறேன். இதில எந்த ரிஸ்க்கும் இல்லை. உங்களுக்கு முன்னால இந்த சீட்ல இருந்த கார்த்திக் எனக்கு இது மாதிரி நிறைய தடவை செஞ்சு கொடுத்திருக்கார்!"

ரமேஷ் சற்று யோசிப்பது போல் தோன்றவே, "நான் சரியா ஒண்ணு இருபதுக்கு வரேன். அப்பதான் ஆஃபீஸ் காலியா இருக்கும்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் அவர்.

'அவர் சொன்ன படிசெய்தால் என்ன? இதில் எந்த ரிஸ்க்கும் இல்லையே! குறைவான தொகையை விட இன்னும் குறைவாக இவர் கோட் செய்தால் அது  நிறுவனத்துக்கு லாபம்தானே! பத்தாயிரம் ரூபாய் சுளையாகக் கிடைத்தால் குடும்பத்துக்கு உதவுமே!' என்ற சிந்தனை ரமேஷின் மனிதில் ஒரு கணம் தோன்றியது.

உடனே அவன் அப்பாவின் முகம் மனதில் வந்தது. அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் வாழ்ந்த நாளில் அவருடைய நேர்மைக்காக மதிக்கப்பட்டவர். நேர்மைதான் நம் குடும்பச் சொத்து என்று அவர் அடிக்கடி சொல்வாரே!

'அவருக்கு மகனாகப் பிறந்து விட்டு, இப்படி ஒரு செயலைச் செய்யலாமா? இந்தச் சபலம் எனக்கு ஏன் தோன்றியது? ஒருவேளை மாட்டிக் கொண்டால் நம் குடும்பத்துக்கு எத்தகைய அவமானம்! மாட்டிக் கொள்ள மாட்டேன் என்றாலும் இப்படிச் செய்வது தவறுதானே?'

உடனே அவன் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

மேஷ் தான் சொன்னபடி செய்யத் தயாராக இருப்பான் என்ற நம்பிக்கையுடன் உணவு இடைவேளையின்போது வந்த அந்த மனிதர் ரமேஷின் பிடிவாதமான மனப்போக்கைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்: 
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலக மாட்டார்.
குறள் 953 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...