Thursday, July 27, 2023

903. குணா மாறி விட்டான்!

"அமெரிக்காவிலேந்து என் மாமா வந்திருக்காரு. அவரைப் பாத்துட்டு வரலாம் வரியா?" என்றான் குணளன்.

"அவசியம் அவரைப் பாக்கணுமா என்ன?" என்றாள் அவன் மனைவி கோகிலா.

"சின்ன வயசிலேந்து எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாரு. அவர் கம்பெனியில அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அப்புறம் அவரு அங்கேயே செட்டில் ஆயிட்டாரு. அஞ்சாறு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியாவுக்கு வருவாரு. அப்பல்லாம் நான் அவரைப் போய்ப் பாக்காம இருந்ததில்லை. நம்ம கல்யாணத்துக்கப்பறம் இப்பதான் வந்திருக்காரு. போய்ப் பாக்கலைன்னா நல்லா இருக்காது!"

"இவதான் என் பொண்டாட்டின்னு அவர்கிட்ட என்னைக் கொண்டு போய்க் காட்டணுமாக்கும்! சரி வரேன். ஆனா அவர் காலில எல்லாம் விழ மாட்டேன்!" என்றாள் கோகிலா.

குணாளனின் மாமா கஜேந்திரன் தன் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.

குணாளனைப் பார்த்ததும் அவனை அன்புடன் தழுவிக் கொண்ட கஜேந்திரன், "உன் கல்யாணத்துக்கு வர முடியல. இந்தா என்னோட கல்யாணப் பரிசு!" என்று ஒரு பார்சலை நீட்டினார்.

மாமாவின் காலில் விழுந்து வணங்கிப் பரிசை வாங்கிக் கொள்ளலாம் என்று குணாளன் நினைத்தான். பிறகு, தான் வணங்கும்போது கோகிலாவும் சேர்ந்து வணங்காவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்துப் பரிசை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினான்.

"ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கங்கடா!" என்று கஜேந்திரன் சொன்னதும், குணாளன் கோகிலாவுக்கு ஜாடை காட்ட, அவள் அவன் அருகில் வந்து நிற்க, இருவரும் சேர்ந்து பரிசை வாங்கிக் கொண்டார்கள்.

கஜேந்திரன் குணாளனிடம் உற்சாகமாகப் பேசினார். ஆனால் குணாளன் தயங்கித் தயங்கித்தான் பேசினான். தான் மாமாவிடம் உற்சாகமாகப் பேசுவது மனைவிக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று அவன் யோசிப்பதாகத் தோன்றியது.

கோகிலா எதுவும் பேசாமல் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தாள். கஜேந்திரன் இடையிடையே அவளிடம் ஏதாவது கேட்டபோது சில சமயம் தலையாட்டினாள், மற்ற சமயங்களில் மௌனமாக இருந்தாள்.

சற்று நேரம் சென்றதும், "என்னங்க கிளம்பலாமா?" என்றாள் கோகிலா.

"என்ன அவசரம்? இப்பதானே வந்திருக்கீங்க!" என்றார் கஜேந்திரன்.

குணாளன் மௌனமாக இருந்தான்.

"குணா! நான் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நான் வேற ஊர்களுக்குப் போறப்ப நீயும் என்னோட வருவியே! இந்தத் தடவையும் பத்து நாள் வெளியூர்ப் பயணம் வச்சிருக்கேன். நீயும் கோகிலாவும் என் கூட வாங்க. உனக்கு கவர்ன்மென்ட் வேலைதானே? லீவு கிடைக்கிறது கஷ்டமா இருக்காதே!" என்றார் கஜேந்திரன்.

குணாளன் கோகிலாவைப் பார்த்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"இல்லை மாமா! இப்ப ஆஃபீஸ்ல ஆடிட் நடக்கற சமயம். அதனால லீவு கிடைக்காது" என்ற குணசீலன் உடனேயே "நாங்க கிளம்பறோம்!" என்றான்.

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும், "எங்கிட்ட ரொம்பப் பாசமா இருப்பான். ஜாலியாப் பேசுவான். கல்யாணம் ஆனதும் ஆளே மாறிட்டான்! எங்கிட்ட அரை மணி நேரம் உக்காந்து பேசக் கூட அவன் மனைவி அவனை அனுமதிக்கல போலருக்கு" என்றார் கஜேந்திரன் தன் உறவினரிடம் வருத்தத்துடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 903:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

பொருள்: 
மனைவியிடம் பணிந்து போகும் தன்மை ஒருவனிடம் இருந்தால், அது நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...