Friday, July 21, 2023

897. பார்த்திபனின் மாமனார்

"எவ்வளவோ பணக்கார இடத்திலேந்தெல்லாம் எனக்குப் பெண் கொடுக்க வந்தாங்க. ஆனா எங்கப்பா தன்னோட நண்பர் பொண்ணுங்கறதுக்காக உன்னை எனக்குக் கட்டி வச்சுட்டாரு!"

திருமணம் ஆன புதிதில் பார்த்திபன் தன் மனைவி வாசுகியிடம் சொல்ல ஆரம்பித்த இந்த வாக்கியத்தைத் திருமணம் ஆகப் பல வருடங்கள் ஆன பிறகும் சொல்லி வந்தான்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வாசுகி துவக்கத்தில் இதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள்.

ஆனால் சில வருடங்கள் கழித்து வாசுகி பார்த்திபனுக்குப் பல விதங்களிலும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள்.

"அதுதான் ஏழைக் குடும்பம்னும் பாக்காம கல்யாணத்துகு முன்னாலேயும் சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் சரி, வரதட்சணை, சீர்னு கறந்துட்டீங்களே! ஏழையா இருந்த எங்கப்பா உங்களுக்கு சீர் செஞ்சே பரம ஏழையா ஆயிட்டாரு!" 

"பொதுவா பிள்ளையோட அப்பா அம்மாதான் வரதட்சணை, சீர்னு கேப்பாங்க. ஆனா உங்க அப்பா அம்மா அப்படி எதுவும் கேக்கல. நீங்கதான் சீர், செனத்தின்னு ஏகப்பட்டதைக் கேட்டு எங்கப்பாவைக் கொடுமைப்படுத்தினீங்க. உங்களை மாதிரி உலகத்தில யாரும் இருக்க மாட்டாங்க!"

"நீங்க ஒண்ணும் பெரிய பணக்காரர் இல்ல. சுமாரான வசதி உள்ள குடும்பம்தான் உங்க குடும்பம். எங்கப்பா தன் வசதிக்கு மீறி நீங்க கேட்ட சீரையெல்லாம் உங்களுக்கு செஞ்சிருக்காருன்னு நன்றியா இருங்க!"

ஆயினும் பார்த்திபன் வாசுகியின் தந்தையை இழித்துப் பேசுவதை நிறுத்தவில்லை.

"ஆஃபீஸ்ல எனக்குக் கொஞ்சம் பிரச்னை இருக்கு. என்னால இந்த வேலையில தொடர முடியாது. நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன். முதலீடு செய்யப் பணம் வேணும். உங்கப்பாகிட்ட கேட்டுக் கொஞ்சம் பணம் வாங்கிக்கிட்டு வா. நான் தொழில் நடத்த அவர் பணம் கொடுக்கலேன்னா அவரோட பொண்ணோட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும்னு சொல்லி அவருக்குப் பரிய வை!" என்று வாசுகியிடம் சொல்லி அவள் அப்பாவிடமிருந்து பணம் வாங்கி வரச் சொன்னான் பார்த்திபன்.

வாசுகியின் தந்தை எப்படியோ கஷ்டப்பட்டுப் புரட்டிக் கொடுத்த பணத்தை முதலாக வைத்துப் பார்த்திபன் தொடங்கிய தொழில் விரைவிலேயே வேகமாக வளர்ந்து அவன் பெரும் செல்வந்தனாகி விட்டான்.

அதற்குப் பிறகும் பார்த்திபன் வாசுகியின் தந்தையிடம் நன்றி பாரட்டவில்லை, என்பதுடன், அவரை இகழ்ந்து பேசுவதையும் நிறுத்தவில்லை.

"பொண்ணுக்குச் செய்ய வேண்டியது அவரோட கடமை, செஞ்சாரு. தொழில்ல வெற்றி பெற்றது என்னோட திறமை. உங்கப்பாவுக்கு இதில என்ன பங்கு இருக்கு?" என்றான் வாசுகியிடம்.

வாசுகியின் பெற்றோர் ஏழைகள் என்பதால் அவர்களைத் தன் வீட்டுக்கு வருவதைப் பார்த்திபன் அனுமதிக்கவில்லை. வாசுகிதான் எப்போதாவது போய் அவர்ளைப் பார்த்து விட்டு வருவாள்.

வாசுகியின் பெற்றோருக்குப் பொருளாதாரப் பிரச்னைகள் வந்தபோது பார்த்திபன் அவர்களுக்கு உதவ மறுத்து விட்டான். "அவங்க அவங்க பிரச்னையை அவங்தான் பாத்துக்கணும்!" என்றான்.

"எங்கப்பா உங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. இன்னிக்கு நீங்க நல்ல நிலைமையில இருப்பதற்குக் காரணமே அவர்தான். அவர் விஷயத்தில நீங்க இவ்வளவு அநியாயமா நடந்துக்கிறீங்க. நீங்க நடந்துக்கறதைப் பார்த்து அவர் ரொம்ப வருத்தப்படறாரு. வெளிப்படையாக் காட்டிக்கிட்டாலும் அவர் மனசில நிச்சயமா உங்க மேல கோபம் இருக்கும். அந்தக் கோபத்தினால நம்ம குடும்பத்துக்கு தப்பா எதுவும் நடந்துடக் கூடாதேன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் வாசுகி.

பார்த்திபனின் அலுவலகத்திலிருந்து வாசுகிக்குத் தொலைபேசி வந்தது. "அம்மா! இன்னிக்கு திடீர்னு அரசாங்க அதிகாரிகள் நம்ம தொழிற்சாலைக்கு வந்து சோதனை போட்டாங்க. நாம தயாரிக்கற இரும்புப் பொருட்களை சில தீவிரவாதிகள் வாங்கி ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தறாங்களாம். 'எங்ககிட்ட பொருள் வாங்றவங்க அதை எதுக்குப் பயன்படுத்தறாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?'னு சார் கேட்டாரு. ஆனா அதிகாரிங்க அதை ஒத்துக்காம சாரைக் கைது செஞ்சுட்டாங்க" என்றார் தொலைபேசியில் பேசிய நிறுவன ஊழியர்.

"என்னது? கைது செஞ்சுட்டாங்களா?" என்றாள் வாசுகி அதிர்ச்சியுடன்.

"ஆமாம்மா! அதுவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில. ஜாமீன் கூடக் கிடைக்காதுன்னு சொல்றாங்க!"

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

பொருள்: 
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங் கொள்வார் என்றால், பல்வகையிலும் சிறந்த வாழ்க்கையும், பெரும் பொருளும் எதற்கு ஆகும்?.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...