Sunday, July 16, 2023

894. நம்பிக்கையில்லாத் தீர்மானம்

செங்கல்வராயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது, யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தீர்மானம் கொண்டு வந்த உறுப்பினர் ஒரு சிறிய கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் கூடத் துவக்கத்தில் அதை விமரிசனம் செய்து பேசினார். 

"ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்தத் தீர்மானத்தை அவர்கள் முறியடித்து விடுவார்கள்.அதை ஒரு செயற்கை வெற்றியாக அவர்கள் காட்டிக் கொள்ளத்தான் இது உதவும்!" என்றார் அவர். 

ஆயினும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தததால் யாரும் எதிர்பாராத வகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று, செங்கல்வராயன் பதவி இழந்தார். 

ஆளும் கட்சியைச் சேர்ந்த கதிரவன் என்ற சட்டமன்ற உறுப்பினர்தான் அதிருப்தியில் இருந்த 22 உறுப்பினர்களை ஒன்று திரட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்ற பெறச் செய்தான் என்பது பிறகுதான் தெரிந்தது.

அரசியலில் நீண்ட அனுபவம் மிகுந்த செங்கல்வராயனை அனுபவமில்லாத ஒரு இளைஞன் வீழ்த்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு முந்தைய இரவில் கதிரவன் எதிர்க்கட்சியினருடன் பேசிச் செய்து கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி, எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அமைக்கப் போகும் அரசில் கதிவனுக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதுவரை அமைச்சர் பதவி கூட வகிக்காத, முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆகி இருந்த ஒருவருக்கு எடுத்த எடுப்பிலேயே துணை முதல்வர் பதவியா என்ற வியப்பு பலரிடமும் ஏற்பட்டது.

தவி ஏற்பு விழாவில், முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இரண்டாவதாகத் தான் அழைக்கப்படுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான் கதிரவன்.

ஆனால் இரண்டாவதாக வேறொரு பெயர் அழைக்கப்பட்டது. இறுதி வரை அவன் பெயர் அழைக்கப்படவில்லை.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டவரிடம் சென்று 'நியாயம்' கேட்டான் கதிரவன்.

அவர் சிரித்துக் கொண்டே, "சொந்தக் கட்சியோட அரசாங்கத்தையே திட்டம் போட்டுக் கவுத்தவன் நீ. உன்னை எப்படி அமைச்சரவையில சேத்துக்க முடியும்?" என்றார்.

"அப்படீன்னா எனக்குக் கொடுத்த வாக்குறுதி?"

"துரோகிகள் எல்லாம் வாக்குறுதி பத்திப் பேசக் கூடாது!" என்றார் முதலமைச்சர் சிரித்தபடியே.

"எங்க கட்சியிலேந்து 22 பேரை அழைச்சுக்கிட்டு வந்தவன் நான்தான். நாங்க அத்தனை பேரும் உங்களுக்கு எதிரா ஓட்டுப் போடுவோம். அப்ப உங்க ஆட்சி எப்படி நீடிக்கும்னு பாக்கறேன்!" என்றான் கதிரவன் கோபத்துடன்.

ஆனால் அந்த 22 பேரில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்ததாலும், மற்றவர்களுக்கு வேறு வகை நன்மைகள் வழங்கப்பட்டிருந்ததாலும் அவர்களில் ஒருவர் கூடக் கதிரவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை.

ன் ஆட்சி கவிழ்ந்ததுமே, தன் கட்சியின் ஒரு முக்கியத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவரிடம் தூதாக அனுப்பிய செங்கல்வராயன் கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பிர்களில் யாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், கதிரவனுக்கு மட்டும் எந்தப் பதவியும் கொடுக்கக் கூடாது என்று அவரிடம் பேசி அவரை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் என்பது கதிரவனுக்குத் தெரியாது.

ஆனால் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தான் மட்டும் பதவி இழக்க நேரிடலாம் என்பதும், எதிர்காலத்தில் எந்தக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்பதும் கதிரவனுக்குத் தெரிந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

பொருள்: 
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...